Tamil Bayan Points

இந்தியாவில் அதிகரித்து வரும் பெண் கொடுமைகள்!

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

Last Updated on April 18, 2019 by

இந்தியாவில் அதிகரித்து வரும் பெண் கொடுமைகள்!
ஆய்வு தரும் அதிர்ச்சித் தகவல்கள்!!

உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளிலும் பல கொடுமைகள், அடக்குமுறைகள், சித்ரவதைகள் இருப்பது போல இந்திய நாட்டிலே பெண்களுக்கு நிகழும் வன்கொடுமை காலம் காலமாக நடந்து வந்தது என்பதை யாரும் மறுக்க இயலாது. குறிப்பாக தேவதாசி முறை தேவை எனப் பேசிய சுப்புலட்சுமி ரெட்டி, சத்தியமூர்த்தி கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றைக் காக்க, கலைகளைப் பேண தேவதாசி முறை தேவை என்று பேசினார். “தாசி (தேவதாசி) குலம் தோன்றியது நம்முடைய காலத்தில் அல்ல. வியாசர், பராசரர் காலத்திலிருந்து அந்தக் குலம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

பலருக்கு இன்பத்தை வாரி வழங்கிக் கொண்டும் வருகிறது. பெண்களுக்கு எதிரான கொடுமை கலை எனும் பெயரால் துவக்கி வைத்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருக முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. கணவன் இறந்தால் உடன்கட்டை ஏறுதல் என்ற ஓர் கொடுமையும், விதவைப் பெண்களை மறுமணம் செய்யக் கூடாது என்ற சடங்குகள் என அன்றைய காலகட்டத்தில் இருந்து நடந்து வந்தது. பல தலைவர்களின் போராட்டத்தாலும் மக்களின் விழிப்புணர்வாலும் மாற்ற முடிந்தது. ஆனால் இன்று நவீன கால நாகரிக உலகில் குறைந்துள்ளதா என்று பார்த்தால் பெயர்கள் மாற்றப்பட்டு வெவ்வேறு வகைகளிலும் வழிமுறைகளிலும் இன்றளவும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நிகழ்வது வருத்தமளிக்கக் கூடிய ஒன்று.

ஆய்வு புள்ளிகள் தரும் அதிர்ச்சி தகவல்கள்!

இந்தியாவில் வாழும் பெண்களுக்கு பல வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த கொடுமைகளின் பட்டியலை இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அப்பட்டியலில் கடந்த வருடங்களை விட கொடுமைகளும் அதிகரித்து வரும் கொடுமையால் நிகழும் மரணங்களும் அதிகரித்து வருகின்றது. கடந்த 2016’இல் மட்டும் பெண்களுக்கு நிகழ்ந்த வன்கொடுமைகளைப் பட்டியலிட்டு புள்ளி விவரங்களோடு தேசிய புலனாய்வுப் படை மற்றும் தேசியக் குற்றப்பிரிவு காவல் படையின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மொத்தம் 3,38,954 பெண் கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் 19,302 வழக்குகள் வந்து முதலிடத்திலும், ராஜஸ்தான் மாநிலத்தில் 13,811 வழக்குகள் வந்து இரண்டாமிடத்திலும் உ.பி மாநிலத்தில் 11,156 வழக்குகள் வந்து மூன்றாவது இடத்திலும் உள்ளது. பல வகையான கொடுமைகளின் வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் “கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரின் மூலம் பெண்கள் அடைந்த கொடுமைகள்” தான் அதிகமாக உள்ளது என அரசு அறிவித்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அதன் விவரம்: • கணவன் மற்றும் அவரது குடும்பத்தார்களால் – 32.6% • கொலை மிரட்டல் & கொலைக்கு தூண்டுதல் & ஆபாச நடவடிக்கை- 25% • பெண் கடத்தல் – 19% • கற்பழிப்பு – 11.5% என குற்றத்தின் அளவுகளையும் அதன் மாநிலங்களையும் பிரிவு வாரியாக பட்டியலிட்டுள்ளது அறிக்கை.

அறிக்கையும் அறிய வேண்டியதும்!

பெண்களுக்கு நிகழும் கொடுமைகளின் பட்டியல் பல செய்திகளை நமக்குச் சொல்லியுள்ளது. இந்தப் பட்டியலில் பெருவாரியாக பாஜக ஆளும் மாநிலமே முன்னிலையிலும் முதல் மூன்று இடங்களில் முக்கியமானதாகவும் இருக்கிறது. முஸ்லிம்களின் மத நம்பிக்கையில் தலையிட்டு முத்தலாக் விவகாரம் போன்றவைகளில் மூக்கை நுழைக்கும் மத்திய பாஜக அரசு அதன் ஒரு பகுதியேனும் ஆளும் மாநிலங்களில் கவனம் செலுத்தியிருந்தால் பெண் கொடுமைகளைக் குறைத்திருக்கலாம்.

அல்லது முஸ்லிம் பெண்களுக்கு ஆபத்தே இல்லாத தலாக் முறைகளிலே இறைச் சட்டம் அவர்களின் வாழ்க்கையில் இனியதாக இருக்க அதில் புகுந்து முத்தலாக் மசோதா தாக்கல் செய்யத் துடித்த துடிப்பு இந்தக் கொடுமைகளுக்கு எதிராக துடிக்க மறுத்தது ஏனோ?? பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் நீதி வேண்டும் நியாயம் வேண்டும் என்று சொல்லிக் கொண்டே அந்தக் கொடுமைகளைத்’ தடுக்காமல் இருப்பது கொடுமைகளுக்கு எதிராக வரும் துடிப்பா? இல்லை வேஷம் போடும் நடிப்பா? என அறிவுடையோர்கள் அறிந்து கொள்ள வேண்டும்…