Tamil Bayan Points

கோள்கள்

பயான் குறிப்புகள்: அறிவியல் உண்மைகள்

Last Updated on January 28, 2020 by

கோள்கள்

கோள் (planet) விண்மீனைச் சுற்றிவரும் வான்பொருளாகும். இதுதனது ஈர்ப்பு விசையாலுருண்டையாகத் திரளத் தக்க அளவு பொருண்மை மிக்கதாகும்; வெப்ப அணுக்கருப் பிணைவு நிகழ்வை உருவாக்க இயலாத அளவு பொருண்மை கொண்டதாகும்;மேலும் இது தன் வட்டணையின் வட்டாரத்தில் கோளெச்சம் ஏதும் அமையாமல் நீக்கியிருக்கவேண்டும்.

கோள் எனும் சொல் வரலாறு, கணியவியல், அறிவியல், தொன்மவியல், சமயம் சார்ந்த பண்டைய சொல்லாகும். சூரியக் குடும்பத்தில் உள்ள பல கோள்களை வெற்றுக் கண்ணால் பார்க்கலாம். இவை பல பண்டைய நாகரிகங்களால் தெய்வீகத் தன்மையோடும் தெய்வங்களால் அனுப்பப்பட்டனவாகவும் உணரப்பட்டன. அறிவியல் அறிவு வளர்ந்த்தும், கோள்கள் பற்றிய கண்ணோட்டம் மாறலானது. பன்னாட்டு வானியல் ஒன்றியம் 2006 ஆம் ஆண்டில் சூரியக் குடும்பக் கோள்களுக்கான ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தது.

இந்த வரையறை எங்கு, எவற்றை வட்டணையில் சுற்றிவருகின்றன என்பதைப் பொறுத்து கோல்பொருண்மை உடைய பல வான்பொருள்களைத் தவிர்க்கிறது. இக்கால வரையறைப்படி, 1950 க்கு முன்பு கண்டுபிடித்த எட்டு கோள்கள் மட்டுமே கோள்களாக் க்கருதப்படுகின்றன.  இந்த வரையறையின்கீழ் சீரெசு, பல்லாசு,  யூனோ, வெசுட்டா (குறுங்கோள்பட்டையில் உள்ள வான்பொருள்கள்), 

புளூட்டோ (முதல் நெப்டியூனுக்கு அப்பால் கண்டறிந்த கோள்) ஆகியவை முன்பு கோள்களாகக் கருதப்பட்டு வந்திருந்தாலும், இப்போதும் இனியும் அவ்வாறு கருதப்பட இயலாது.கோள்கள் புவியைச் சுற்றி வேறுபட்ட புறவட்டிப்பு இயக்கங்களில் உள்ளதாகத் தாலமி கருதியுள்ளார். பலமுறை சூரிய மையக் கருதுகோள் பரிந்துரைக்கப்பட்டு வந்திருந்தாலும், நோக்கீட்டு வானியல்வழியாகத் தொலைநோக்கி கொண்டு கலீலியோவால் நிறுவப்பட்ட 17 ஆம் நூற்றாண்டுவரை அது ஏற்கப்படவில்லை.

அப்போது டைக்கோ பிராகேவும் யோகான்னசு கெப்ளரும் தொலைநோக்கிக்கு முந்தைய நோக்கீட்டுத் தரவுகளை திரட்டிப் பகுத்தாய்ந்து கோள்கள் வட்டமான வட்டணையில் இயங்காமல், நீள்வட்டமான வட்டணையில் இயங்குகின்றன எனக் கண்டறிந்தனர். நோக்கீட்டுக் கருவிகள் மேம்பட்ட்தும், வானியலாளர்கள் புவியைப் போலவே பிறகோள்களிலும் பனிக்கவிப்பும் பருவகால மாற்றங்களும் அமைதலையும் அச்சுகள் சாய்வாக உள்ளதையும் கண்டனர். விண்வெளி ஊழி வளர்ந்ததும், விண்கல நோக்கீடுகள் அனைத்துக் கோள்களிலும் எரிமலை உமிழ்வு, கடுஞ்சூறாவளிகள், கண்டத்தட்டு நகர்வு நீரியல் பான்மைகள், ஆகியவற்றைக் கண்ணுற்றனர்.

கோள்கள் பொதுவாக இரு முதன்மை வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை, தாழ் அடர்த்திப் பெருங்கோள்கள் அல்லது வியாழன் நிகர் கோள்கள், சிறிய பாறையாலான புவி நிகர் கோள்கள் ஆகும். பன்னாட்டு வானியல் ஒன்றிய வரையறைகளின் படி, சூரியக் குடும்பத்தில் எட்டு கோள்கள் உண்டு. சூரியனில் இருந்து தொலைவு கூடகூட முதலில் புவி நிகர் கோள்களான புதன், வெள்ளி, புவி, செவ்வாய் ஆகியவை அமைகின்றன.

அடுது பெருங்கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவை அமைகின்றன. முதல் இரண்டு கோள்களில் நிலா ஏதும் இல்லை. ஆறுகோள்களில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட நிலாக்கள் உண்டு. நம் பால் வழியில் உள்ள விண்மீன்களைப் பல்லாயிரம் கோள்கள் அல்லது புறக்கோள்கள் சுற்றிவருவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புறக்கோள்களைப் பொறுத்தவரை, நிலாவைவிடச் சற்றே பெரிய அளவுடைய கெப்ளர்-37b முதல் வியாழனைப் போல இருமடங்கு பெரிய வாசுப்-17b போன்ற வளிமக் கோள்கள் வரையிலானவை தனிக் கோளமைப்புகளிலும் பன்மைக் கோளமைப்புகளிலும் கண்டறியப்பட்டுள்ளன.

இவற்றில் நூறு புறக்கோள்கள் புவியின் அளவு கொண்டவை; இவற்றில் ஒன்பது தன் விண்மீனில் இருந்து, சூரியனில் இருந்து புவி அமையும் தொலைவில், உள்ளவை. கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கிக் குழு 2011 திசம்பர் 20 இல் புவிநிகர் புறக்கோள்களாக, கெப்ளர்-20e,  கெப்ளர்-20f ஆகிய இருகோள்கள்  சூரியநிகர் விண்மீனாகிய கெப்ளர்-20 ஐ வட்டணையில் சுற்றிவருவதைக் கண்டுபிடித்துள்ளதாகக் கூறுகிறது. 2012 ஆம் ஆய்வு, ஈர்ப்பு நுண்வில்லைத் தரவைப் பகுத்தாய்ந்து, நம் பால்வழியில் உள்ள ஒவ்வொரு விண்மீனுக்கும் 1.6 கட்டுண்ட கோள்கள் அமைந்துள்ளதாக மதிப்பிடுகிறது. ஐந்துச் சூரியநிகர் விண்மீன்கள் ஒன்றில் புவியின் உருவளவுள்ள planet in its habitable வட்டாரம் அமைவதாகக் கருதப்படுகிறது.

பொதுவாக, ஒரு விண்மீனை சுற்றிவரும் அனைத்து கோள்களும், பெரும்பாலும் அவ்விண்மீன் சுழலும் திசையிலேயே அதன் கோள்களின் நீள்வட்டப் பாதையில் செல்லும். ஆனால், தற்போது அவ்வாறல்லாமல் எதிர்த் திசையில் கோள்கள் சுழலும் ஒரு சூரியக் குடும்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆகத்து 18, 2013 அன்று சயன்சு ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக்கட்டுரையில் அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். கெப்லர் விண்கலம் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கெப்லர்-56 என்ற இந்த விண்மீன் நமது சூரியனை விட சற்று அதிக எடையுள்ளது.இதனை இரண்டு கோள்கள் சுற்றி வருவதாக 2012 ஆம் ஆண்டில் உறுதி செய்யப்பட்டது .

சூரியக் குடும்பத்தில் எட்டுக் கோள்கள் உள்ளன.

  1.  புதன்
  2.  வெள்ளி
  3.  பூமி
  4.  செவ்வாய்
  5.  வியாழன்
  6.  சனி
  7.  யுரேனஸ்
  8.  நெப்டியூன்

இவற்றில் வியாழன் தான் மிகப்பெரிய கோளாகும். இது 318 மடங்கு புவிப்பொருண்மையக் கொண்டுள்ளது.இவற்றில் புதன் எனும் அறிவன் கோள் தான் மிகவும் சிறிய கோளாகும். இது புவியைப் போல 0.055 பங்கு பொருண்மையைக் கொண்டுள்ளது.சூரியக் குடும்பக் கோள்களை அவற்றின் உள்ளியைபுக்கு ஏற்ப கீழ்வருமாறு பிரிக்கலாம்:

புவிநிகர் கோள்கள்:

இவை புவியைப் போன்றவை.இவற்றின் உட்கூறு பெரும்பாலும் பாறைகளால் ஆயதாகும். எ. கா. : புதன், வெள்ளி, புவி, செவ்வாய். புதன் மிகச்சிறிய புவிநிகர் கோள்ளாகும். இவ்வகைக் கோள்களில் புவி தான் மிகப் பெரியதாகும்.

பெருங்கோள்கள்

 (வியாழன்நிகர் கோள்கள்): இவை புவிநிகர் கோள்களைவிட கணிசமான அளவு பெரியவை. எ. கா. : வியாழன், சனி, யுரேனசு, நெப்டியூன்.

வளிமப் பெருங்கோள்கள் :

வியாழனும் சனியும் நீரகமும் எல்லியமும் செறிந்த மிகப்பெரிய சூரியக் குடும்பக் கோள்களாகும். வியாழன் 318 புவிப் பொருண்மைகளும் சனி 95 புவிப் பொருண்மைகளும் கொண்டுள்ளன.

னிப்பெருங்கோள்கள்:

யுரேனசிலும் நெப்டியூனிலும் நீர், மீத்தேன், அம்மோனியா போன்ர தாழ் கொதிநிலைப் பொருள்களும் தடிப்பான நீரக, எல்லிய வளிமண்டலங்களும் அமைந்துள்ளன. இவை வளிமப் பெருங்கோள்களைவிட குறைந்த பொருண்மையைக் (14, 17 மடங்கு புவிப் பொருண்மையைக்) கொண்டுள்ளன.

Source : https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D