Tamil Bayan Points

அதிகபட்சம் எவ்வளவு ஸதகா செய்யலாம்?

கேள்வி-பதில்: பொருளாதாரம்

Last Updated on November 12, 2022 by Trichy Farook

அதிகபட்சம் எவ்வளவு ஸதகா செய்யலாம்?

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
“விடைபெறும்’ ஹஜ்ஜின்போது மிகக் கடுமையாக நோயுற்றிருந்த என்னை உடல் நலம் விசாரிப்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நான், “(இதோ) தாங்கள் காண்கிறீர்களே இந்த நோய் என்னைப் பீடித்துவிட்டது. நான் ஒரு செல்வந்தன். (நான் இறந்துவிட்டால்) என் ஒரே மகள் தவிர வேறெவரும் என(து சொத்து)க்கு வாரிசாக மாட்டார்கள். எனவே எனது செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை தானம் செய்து விடட்டுமா?” என்று கேட்டேன்.

அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “வேண்டாம்” என்று கூறினார்கள். நான் “(எனது செல்வத்தில்) பாதியை(யாவது தானம் செய்யட்டுமா)?” என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேண்டாம் என்று சொன்னார்கள்.

நான் மூன்றிலொரு பங்கை(யாவது தானம் செய்யட்டுமா)?” என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “மூன்றிலொரு பங்கே அதிகம்தான். நீங்கள் உங்கள் வாரிசுகளைத் தன்னிறைவுடையவர்களாக விட்டுச் செல்வது, அவர்களை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதைவிடச் சிறந்ததாகும் என்று கூறினார்கள்.

நூல் : புகாரி-5668 , 1296, 2742, 2744, 3936, 4409, 5354, 5659, 6373, 6733

ஒருவர் உயிருடன் வாழும் போது தனது சொத்தில் அல்லது தனது வருமானத்தில் அதிகபட்சம் மூன்றில் ஒருபங்கு செலவிடலாம் என்பதை இந்தச் சம்பவம் கூறவில்லை. மரணத்துக்குப் பிறகு ஒருவரது சொத்துக்கள் எவ்வாறு செலவிடப்பட வேண்டும் என்பது பற்றியே இது பேசுகிறது.

ஒருவரது மரணத்துக்குப் பிறகு அவரது வாரிசுகள் தான் அதிக உரிமை படைத்தவர்கள் என்பதால் அவர்களைப் பாதிக்க்க் கூடாது என்பதற்காக மூன்றில் ஒரு பங்குக்கு அதிகமாகாமல் வசிய்யத் எனும் மரண சாசனம் செய்யலாம்.

உயிருடன் வாழும் போதே தர்மம் செய்வதற்கு இரண்டரை சதவிகிதம் என்ற அளவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது ஜகாத் எனப்படுகிறது. இது அல்லாமல் நாமாக விரும்பி நமக்கோ நமது குடும்பத்துக்கோ பாதிப்பு இல்லாத வகையில் நல்லறங்களில் செலவிடுவது சதகா எனப்படுகிறது. இதற்கு அளவு நிர்ணயம் ஏதும் இல்லை.