Tamil Bayan Points

12) அந்நியப் பெண் இளைஞருக்கு பாலூட்டலாமா?

நூல்கள்: பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்

Last Updated on March 5, 2022 by

சஹ்லா பின்த் சுஹைல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே சாலிம் பின் மஅகில் என்னுடைய வீட்டிற்கு வரும் போது அபூஹுதைஃபாவின் முகத்தில் அதிருப்தியை நான் பார்க்கிறேன் என்று கூறினார்கள். சாலிம் (ரலி) அவர்கள் அபூஹுதைஃபாவின் அடிமை ஆவார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ (சாலிமுக்கு) அவருக்குப் பால் கொடுத்துவிடு என்று கூறினார்கள். சஹ்லா (ரலி) அவர்கள் அவர் பருவ வயதை அடைந்த மனிதராயிற்றே அவருக்கு நான் எவ்வாறு பாலூட்டுவேன்? என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தவாறு அவர் பருவ வயதை அடைந்தவர் என்று எனக்கும் தெரியும் என்று கூறினார்கள். 

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) அவர்கள் 

நூல் : முஸ்லிம் (2878)

ஒரு குழந்தைக்கு ஒரு பெண் பாலூட்டினால் அந்தப் பெண் அந்தக் குழந்தைக்கு தாய் என்ற நிலையை அடைந்து விடுவாள். இதன் பின்னர் அந்தக் குழந்தை வளர்ந்து இளைஞனாக ஆனாலும் தனக்கு பாலூட்டியவளுடன் தனிமையில் இருக்கலாம். ஏனெனில் பெற்ற தாயைப் போல் இவளும் தாயாகி விடுவாள் என்ற சட்டம் இஸ்லாத்தில் உள்ளது.

ஆனால் இந்த ஹதீஸில் சொல்லப்பட்ட விஷயம் இந்தச் சட்டத்துக்குள் அடங்குமா என்றால் நிச்சயம் அடங்காது. இதை விரிவாக நாம் பார்ப்போம்.

பால்குடிச் சட்டம் நிபந்தனைக்கு உட்பட்டதாகும்.

பாலூட்டப்படும் குழந்தை இரு வயதுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். மூன்று வயதுக் குழந்தைக்கு ஒரு பெண் பாலூட்டினால் அந்தக் குழந்தைக்கு அவள் தாயாக மாட்டாள். இதைப் பின்வரும் ஆதாரங்களில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

பாலூட்டுவதை முழுமைப்படுத்த வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும்.

திருக்குர்ஆன் 2:233

மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.

திருக்குர்ஆன் 31:14

அவனை (மனிதனை) அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால் குடியை மறந்ததும் முப்பது மாதங்கள்.

திருக்குர்ஆன் 46:15

5102 – حدثنا أبو الوليد، حدثنا شعبة، عن الأشعث، عن أبيه، عن مسروق، عن عائشة رضي الله عنها: أن النبي صلى الله عليه وسلم دخل عليها وعندها رجل، فكأنه تغير وجهه، كأنه كره ذلك، فقالت: إنه أخي، فقال: «انظرن من إخوانكن، فإنما الرضاعة من المجاعة

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது :

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது என் அருகில் ஒரு ஆண் இருந்தார். (அவரைக் கண்டதும்) நபி (ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) மாறி விட்டது போல் தோன்றியது. அ(ந்த மனிதர் அங்கு இருந்த)தை நபியவர்கள் விரும்பவில்லை என்று தெரிந்தது. அப்போது நான் இவர் என் (பால்குடி) சகோதரர் என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உங்கள் சகோதரர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்து முடிவு செய்யுங்கள். ஏனெனில் பால்குடி உறவு என்பதே பசியினால் (பிள்ளைப் பால் அருந்தியிருந்தால்) தான் என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி 5102

4412 – حدثنا الحسين بن إسماعيل وإبراهيم بن دبيس بن أحمد وغيرهما قالوا حدثنا أبو الوليد بن برد الأنطاكى حدثنا الهيثم بن جميل حدثنا سفيان عن عمرو بن دينار عن ابن عباس قال رسول الله -صلى الله عليه وسلم- « لا رضاع إلا ما كان فى الحولين ». لم يسنده عن ابن عيينة غير الهيثم بن جميل وهو ثقة حافظ.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

பால் புகட்டுவது இரண்டு வருடத்திற்குள்ளாகத் தான் இருக்க வேண்டும்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : தாரகுத்னீ

மூன்று வயதுக் குழந்தைக்குப் பாலூட்டினால் கூட ஒருத்தி தாயாக ஆக மாட்டாள் என்று மேற்கண்ட ஆதாரங்களில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் மேற்கண்ட சாலிம் தொடர்பான செய்தி பருவ வயதை அடைந்த இளைஞனுக்கு பாலூட்டுமாறும் அதனால் மகன் என்ற உறவு ஏற்பட்டு விடும் சொல்லப்படுகிறது.

இந்த வகையில் இது திருக்குர்ஆனுக்கு முரணாக அமைந்துள்ளது.

அடுத்து அன்னியப் பெண்கள் விஷயத்தில் பார்வையைத் தாழ்த்துமாறு அல்லாஹ் நமக்கு கட்டளையிட்டுள்ளான்.

பெண்களிடம் ஆண்களை ஈர்க்கும் உறுப்புகளில் மார்பகம் தான் முதலிட்த்தில் உள்ளது. அப்படி இருக்கும் போது ஒரு இளைஞனின் வாயில் மார்பை வைத்து பாலூட்டுமாறும் அதனால் அந்த இளைஞன் மகன் என்ற உறவாக ஆகிவிடுவான் என்று எப்படி நபியவர்கள் சொல்லி இருப்பார்கள்?

இது கேட்கும் போதே அருவருப்பாகவும் அல்லாஹ்வின் தூதருடைய அறிவையும் நாகரிகத்தையும் கேள்விக்குறியாக்கும் வகையில் உள்ளது.

ஆனாலும் இதை நம்ப வேண்டும் என்று சொல்பவர்கள் நாவளவில் தான் நம்பச் சொல்கின்றனர். மனதளவில் அவர்கள் இதை நம்புவதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சொன்னார்கள் என்று இவர்கள் நம்பினால் இது போல் விரும்பக் கூடிய முஸ்லிம்கள் செய்து கொள்ளலாம் என்று மார்க்கத் தீர்ப்பு அளிப்பார்களா? நிச்சயமாக அளிக்க மாட்டார்கள். அப்படியானால் அவர்களும் இதை நம்பவில்லை. ஆனால் நம்புவதாக பொய் சொல்கிறார்கள்.

இந்தக் கேள்வியில் இருந்து தப்பிக்க அற்புதமான விளக்கத்தைத் தருகிறார்கள்.

அதாவது மார்பகத்தில் வாய் வைத்து பால் கொடுக்கச் சொல்லவில்லை. கறந்து கொடுத்து இருப்பார்கள் என்பது தான் அந்த விளக்கம். இப்படி சொல்வதற்கு அந்த ஹதீஸிலோ வேறு அறிவிப்புகளிலோ எந்த ஆதாரமும் இல்லை.

இதிலாவது அவர்கள் உண்மையாளர்களாக இருக்கிறார்களா என்றால் இதுவும் பொய் தான்.

அன்னிய ஆணுடன் தனித்து இருக்க விரும்பும் எல்லாப் பெண்களும் மார்பகத்தில் இருந்து பால் கறந்து கொடுத்து விட்டு தனிமையில் இருக்கலாம். எந்த ஆணும் எந்தப் பெண்ணுடனும் இந்த வழிமுறையைக் கடைப்பிடித்து தனிமையில் இருக்கலாம் என்று மார்க்கத் தீர்ப்பு கொடுப்பார்களா? அதையும் கொடுக்க மாட்டார்கள். அதாவது இந்த விளக்கத்தையும் அவர்கள் நம்பாமல் மற்றவர்களை நம்பச் சொல்கின்றனர்.

இவர்கள் பதவா கொடுக்காவிட்டாலும் ஒரு ஆணும் பெண்ணும் தனிமையில் இருந்து கையும் களவுமாக மாட்டிக் கொள்ளும் போது இப்பதான் பால் கொடுத்தேன் இவன் என் மகன் என்று சொன்னால் அவனைத் தண்டிக்காமல் விட்டுவிட வேண்டும் என்று சட்டம் சொல்வார்களா? அதுவும் சொல்ல மாட்டார்கள்.

இவை அனைத்தில் இருந்தும் தப்பிக்க இவர்கள் கண்டு பிடித்த வழி என்ன? இது சாலிமுக்கு மட்டும் உள்ள சட்டம். எல்லோருக்கும் உரியது அல்ல என்பது தான்.

சாலிமுக்கு மட்டும் உரியது என்று இந்த ஹதீஸில் உள்ளதா? இல்லவே இல்லை.

சில சட்டங்கள் குறிப்பிட்ட நபருக்கு மாத்திரம் உள்ளது என்று மார்க்கத்தில் இருக்கிறது. அவை ஆபாசத்துக்கும் அசிங்கத்துக்கும் அனுமதி அளிப்பதாக அது இருக்காது.

ஒருவருக்கு மட்டும் விபச்சாரம் செய்ய அனுமதி கொடுத்தார்கள் என்று சொன்னால் இதை ஏற்பார்களா? ஒருவருக்கு மட்டும் அந்நியப் பெண்ணின் மார்பகத்தை பார்க்கவும் சுவைக்கவும் அனுமதித்தார்கள் என்பது இதுபோல் தான் உள்ளது. தனிச்சட்டம் என்பது அசிங்கமான விஷயங்களுக்கு இல்லை.

இதோ இவர்களுக்காகவே அருளப்பட்டது போல் அமைந்த வசனங்களைக் காணுங்கள்!

அவர்கள் வெட்கக்கேடான காரியத்தைச் செய்யும் போது “எங்கள் முன்னோர்களை இப்படித்தான் கண்டோம். அல்லாஹ்வே இதை எங்களுக்குக் கட்டளையிட்டான்” என்று கூறுகின்றனர். “அல்லாஹ் வெட்கக்கேடானதை ஏவ மாட்டான். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா?” என்று கேட்பீராக!

திருக்குர்ஆன் 7:28

நீதியையும், நன்மையையும், உறவினருக்குக் கொடுப்பதையும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். வெட்கக்கேடானவற்றையும், தீமையையும், வரம்பு மீறுவதையும் உங்களுக்குத் தடுக்கிறான். நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக உங்களுக்கு அறிவுரை கூறுகிறான்.

திருக்குர்ஆன் 16:90

அருவருப்பானவைகளை ஷைத்தான் தான் ஏவுவான் என்று அல்லாஹ் 24:21, 2:169, 2:268 ஆகிய வசனங்களில் அல்லாஹ் அடையாளம் காட்டுகிறான்.

எனவே இது கட்டுக்கதை தானே தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னது அல்ல.

இந்த விபரங்களை நாம் ஏன் இங்கே குறிப்பிடுகிறோம் என்றால் நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டதாக அறிவிக்கப்படும் ஹதீஸைத் தான் சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்ற கொள்கை உடையவர்கள் முதன்மையான ஆதாரமாக எடுத்துக் காட்டுகிறார்கள். நபிகள் நாயகத்துக்கே சூனியம் வைத்து அவர்களை மன நோயாளியாக ஆக்க முடியும் என்றால் மற்றவர்களுக்கு ஏன் செய்ய முடியாது என்று வாதிடுகின்றனர்.

ஆனால் நாம் மேலே எடுத்துக் காட்டிய மறுக்கப்பட வேண்டிய பொய்யான ஹதீஸ்களை விட சூனியம் பற்றிய ஹதீஸ் பெரிய அளவில் இஸ்லாமிய அடிப்படையை தகர்க்கப் பார்க்கிறது. இதைப் புரிந்து கொள்வதற்காகத் தான் இந்த அடிப்படையை நாம் விளக்கியுள்ளோம்.