அபாய உலகில் ஓர் அபய பூமி
பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்Last Updated on September 16, 2023 by Trichy Farook
அபாய உலகில் ஓர் அபய பூமி
இன்று உலகெங்கிலும் கொலைகள், கொள்ளைகள், கடத்தல்கள், கற்பழிப்புக்கள் அன்றாடம் நடந்து கொண்டிருக்கின்றன. அவ்வப்போது சுற்றியும் சூழவும் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது. ஆனால் மக்கா நகரம் மட்டும் அமைதி, அபய நகரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றது. ஏன்? இதற்கு அல்லாஹ்வே பதிலளிக்கின்றான்.
இவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் வாரிச் செல்லப்படும் நிலையில் (இவர்களுக்கு) அபயமளிக்கும் புனிதத் தலத்தை நாம் ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? வீணானதை நம்பி, அல்லாஹ்வின் அருளுக்கு நன்றி மறக்கிறார்களா?
இந்த அற்புத உண்மையை உற்று நோக்குமாறு உலக மக்களை அல்குர்ஆன் கூறுகின்றது. இதன் மூலம் தன்னை ஓர் இறைவேதம் என்றும், தன்னையே வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்ளுமாறும் மக்களுக்கு இந்தக் குர்ஆன் அறிவுறுத்துகின்றது.
தனது அழைப்பின் பேரில் ஆண்டுதோறும் பல மில்லியன் கணக்கில் மக்கள் கூடுகின்ற ஹஜ் என்ற மாநாட்டையும், அந்த மாநாடு நடைபெறும் ஆலயத்தையும், அந்த ஆலயம் அமைந்துள்ள மக்கா நகரையும் உற்று நோக்குமாறு திருக்குர்ஆன் கூறுகின்றது.
முஸ்லிம்களானாலும் சரி! முஸ்லிமல்லாதவர்களானாலும் சரி! இந்தத் திருக்குர்ஆன் வழி நடந்தால் அவர்களுக்கு மத்தியில் பிரச்சனைகள் இல்லை என்ற பாடத்தைப் போதிக்கின்றது. வெள்ளையர்கள், கறுப்பர்கள் அனைவரையும் அரஃபா எனும் ஒரு வெட்டவெளியில் ஒன்று திரட்டி, மனித குலத்திற்கு இடையே இன, மொழி, நிற, நாடு பாகுபாடுகள், வேறுபாடுகள் இல்லை என்ற உண்மையை ஹஜ் எனும் இந்த மாநாடு உணர்த்துகின்றது. தீண்டாமைக்குத் தீர்வு இஸ்லாம் தான் என்பதையும் ஐயத்திற்கு இடமின்றி இந்த மாநாடு தெரிவிக்கின்றது.
கர்நாடகாவில் வாழும் கன்னடனே! உன் அண்டை மாநிலத்தவன் – தமிழ்நாட்டுக்காரன் வேறு யாருமல்ல! ஆதம் என்ற ஒரே தந்தைக்குப் பிறந்த உன் உடன்பிறந்த சகோதரன் தான். அவன் தமிழ் மொழி பேசுவதால் தண்ணீர் கொடுக்க மறுக்காதே என்ற பந்த பாசத்தை ஊட்டி வேற்றுமை உணர்வை வேரறுக்கச் செய்கின்றது இந்த மாநாடு!
இந்தியாவில் 626 மில்லியன் மக்கள் திறந்த வெளியில் மலம், ஜலம் கழிக்கின்றனர். இது மிகப்பெரிய சுகாதாரக் கேடாகும். இது இந்தியாவில் சுகாதார நிலையின் அவலத்தைப் படம்பிடித்துக் காட்டுகின்றது.
ஆண்டுதோறும் உலகெங்கிலும் இருந்து சுமார் 37 லட்சம் முஸ்லிம்கள் ஹஜ் செய்வதற்காக மக்காவில் கூடியுள்ளனர். ஆனால் ஒரு நபர் கூட திறந்த வெளியில், மக்களின் நடைபாதையில் மலம் கழிப்பதைக் காண முடியாது.
இந்தியாவில் கோயில் மற்றும் தர்ஹாக்களின் சுவர்களைச் சுற்றி மக்கள் மலம் கழித்து அசுத்தப்படுத்துவதைப் பார்க்க முடிகின்றது. ஆனால் இந்த நிலை மக்காவில் இல்லையே! ஏன்?
உலக மக்களை இந்தச் சுகாதார விஷயத்திலும் சுண்டியிழுக்கின்ற வகையில் ஹஜ் மாநாடு அமைந்திருக்கின்றது. இப்படிப் பல்வேறு பயன்பாட்டுப் பரிமாணங்களைக் கொண்டிருப்பதால் தான் ஹஜ் பற்றி வல்ல இறைவன் பின்வருமாறு கூறுகின்றான்.
“மக்களுக்கு ஹஜ்ஜைப் பற்றி அறிவிப்பீராக! அவர்கள் உம்மிடம் நடந்தும், ஒவ்வொரு மெலிந்த ஒட்டகத்தின் மீதும் வருவார்கள். அவை அவர்களைத் தொலைவிலுள்ள ஒவ்வொரு பாதையிலிருந்தும் கொண்டு வந்து சேர்க்கும்” (என்றும் கூறினோம்.)
அவர்கள் தங்களுடைய பயன்களை அடைவதற்காகவும், சாதுவான கால்நடைகளை அவர்களுக்கு அளித்ததற்காகக் குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும் (வருவார்கள்.)
உலக மக்களுக்கு சமத்துவம், சகோதரத்துவம், பாதுகாப்பு, சுகாதாரம் என்பன மட்டுமில்லாமல் மனித வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் வழிகாட்டுவதால் அகிலத்தின் வழிகாட்டி என்று மிகப் பொருத்தமாகவே அல்லாஹ் கூறியுள்ளான்.
அகிலத்தின் நேர்வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார்…
இதன் மூலம் திருக்குர்ஆன் உலகிற்கு உரக்கச் சொல்லும் உண்மை இதுதான்:
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!