Tamil Bayan Points

03) அப்துல் காதிர் ஜீலானி

நூல்கள்: யாகுத்பா ஓர் ஆய்வு

Last Updated on March 5, 2022 by

யாகுத்பா

இந்தக் கவிதையின் பாட்டுடைத் தலைவராக எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பவர்கள் ஈரான் நாட்டின் ஜீலான் என்ற குக்கிராமம் ஒன்றில் பிறந்து ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் அடக்கமாகியிருக்கும் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) என்ற பெரியாராவார்.

இவர்களைப் பற்றிச் சொல்லப்படும் கதைகளையும், புளுகு மூட்டைகளையும் படிக்கும் போது இவர்களது அபிமானிகள் என்று சொல்லிக் கொண்ட சிலரால் இந்து மதத்தின் அவதார புருஷர்களுக்கு நிகராக இவர்கள் மதிக்கப்பட்டிருப்பதையும், இன்று வரை அவ்வாறே போற்றப்படுவதையும் நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் இவர்களது தலை சிறந்த படைப்புகளான ஃகுன்யத்துத் தாலிபீன், இவர்களின் சொற்பொழிவுத் தொகுப்புகளான ஃபுத்தூஹுல் ஃகைப், அல்ஃபத்ஹுர் ரப்பானீ’ போன்ற நூல்களைப் படிக்கும் போது இவர்களது கல்வியறிவையும், ஏகத்துவத்தை நிலைநிறுத்தும் பணியில் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட தியாக உணர்வையும், மன்னாதி மன்னர்களையும் துச்சமாக மதித்து சத்தியத்தை அவர்கள் முன் எடுத்து வைத்த மனத் துணிவையும், இறையச்சத்தையும் கண்டு நம்மையறியாமல் இவர் மீது ஒரு மதிப்பு ஏற்பட்டு விடுகின்றது.

ஒருவரை எத்தகைய அடைமொழிகளால் அழைப்பதற்கு திருக்குர்ஆனிலும், அண்ணலாரின் அமுதமொழிகளிலும் சற்றேனும் ஆதாரமில்லையோ அத்தகைய அடைமொழியான ‘குத்புல் அக்தாப்’ என்ற பெயரில் இவர்களின் அபிமானிகள் இவர்களை அழைக்கின்றார்கள்.

குத்புகளுக்கெல்லாம் குத்பு என்பது இதற்குப் பொருள். குத்பு என்ற அரபிச் சொல்லுக்கு அச்சாணி என்பது பொருள். ஒரு கோளமோ, சக்கரமோ அச்சாணியின்றி எப்படிச் சுழலாதோ அது போல் இவரில்லாமல் இவ்வுலகம் சுழலாது என்று பொருள் படும் வகையில் அந்த வார்த்தையை இவருக்குப் பயன்படுத்துகின்றனர்.

குத்புகளுக்கெல்லாம் குத்பு எனும் போது இவர்களில்லாமல் இவ்வுலகம் அணுவத்தனையும் இயங்காது என்ற கருத்தே உணரப்படுகின்றது.

‘ஒரு மனிதரால் தான் இவ்வுலகமே இயங்குகின்றது’ என்ற இந்தக் கருத்தை அல்லாஹ்வையும், அவனது வல்லமையையும் புரிந்து கொண்ட எவரும் பிறருக்குச் சூட்ட மாட்டார். முதலில் இந்தக் கவிதையின் பாட்டுடைத் தலைவரே தனக்கு அத்தகைய ஒரு பெயரைச் சூட்டிக் கொள்ள விரும்ப மாட்டார்.

ஏனெனில் தனது நல்லடியார்களில் பலரை சித்தீக் (உண்மை என்று நம்புபவர்)

சாலிஹ் (நல்லவர்)

ஷஹீது (உயிர்த்தியாகி)

வலீ (நேசர்)

அப்து (அடியார்)

அவ்வாப் (நம்மையே நோக்கி நின்றவர்)

ஹலீம் (பொறுமையாளர்)

ரஹீம் (இரக்கமுள்ளவர்)

ரவூஃப் (அன்பாளர்)

என்றெல்லாம் புகழும் இறைவன் யாரையும் குத்பு என்றோ குத்புல் அக்தாப் என்றோ புகழ்ந்துரைக்கவில்லை.

அண்ணலாரும் தமது சமுதாயத்தவர்களில் யாரையும் இவ்வாறு புகழ்ந்துரைத்திடவில்லை. சில அரபி மொழி அகராதி நூல்களில் குத்பு என்ற வார்த்தைக்கு தலைவர் என்ற பொருள் தரப்பட்டிருக்கிறது.

ஆனால் குணங்குடி மஸ்தான் என்பவர் அப்துல்காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களைப் புகழ்ந்து

அண்ட கோடிகளுமோர் பந்தெனக் கைக்குள்

அடக்கி விளையாட வல்லீர்

அகிலமோர் ஏழினையும் ஆடுங்கரங்கு போல்

ஆட்டி விளையாட வல்லீர்

மண்டலத் தண்டரை அழைத்தருகிருத்தியே

வைத்து விளையாட வல்லீர்

மண்ணகமும், விண்ணகமும் அணுவைத்துளைத்ததில்

மாட்டி விளையாட வல்லீர்

கண்டித்த கடுகில் எழு கடலைப் புகட்டிக்

கலக்கி விளையாட வல்லீர்

கருதரிய சித்தெலாம் வல்லநீர் அடிமை என்

கண்முன் வரு சித்தில்லையோ

நண்டளந் திடுநாழியாவனோ தேவரீர்

நற்குணங் குடிகொண்ட பாத்துஷாவான குரு

நாதன் முஹ்யித்தீனே!

என்று பாடியிருப்பதிலிருந்து வெறும் தலைவர் என்ற பொருளில் இவர்களின் அபிமானிகள் இவர்களைக் குத்பு என்று அழைக்கவில்லை. இவ்வையகமே சுழல்வது இவர்களால் தான் என்ற பொருளில் தான் இவ்வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள் என்பது மிகத் தெளிவாகப் புரிகிறது.

வானம் பூமியின் அச்சாணி

கவிதையின் முதல் அடி

يا قـطب أهل السما والأرض غوثهما

வானம் பூமி இரண்டிலும் வாழ்பவர்களின் குத்பு அவர்களே! என்று துவங்குகிறது. இதிலிருந்து தான் இக்கவிதையையே யா குத்பா’ குத்பை அழைத்துப் பாடப்பட்ட கவிதை என்று குறிப்பிடுகின்றனர்.

வானத்தில் வாழ்பவர்கள் என்பதற்கு மலக்குகள் (வானவர்கள்) என்பதைத் தவிர வேறு பொருளிருக்க முடியாது. அப்படியானால் வானவர்களின் தலைவரே! அல்லது வானவர்களுக்கும் அச்சாணி போன்றவரே! என்பது பொருளாகிறது. வானவர் தலைவர்களான ஜிப்ரீல் (அலை) மீக்காயில் (அலை) போன்றவர்களுக்கும் இவர் தலைவரா? அவர்களுக்கெல்லாம் இவர் தலைவர், அச்சாணி போன்றவர் என்பது வரம்பு மீறிய புகழ் அல்லவா?

அதே போன்று பூமியில் வாழ்பவர்கள் என்பதில் நபிமார்கள், அண்ணலாரின் அன்புத் தோழர்கள், இமாம்கள் அனைவரும் அடங்குவர். அவர்கள் அனைவருக்கும் இவர் தலைவர் என்பதையோ அவர்களுக்கெல்லாம் அச்சாணி போன்றவர் என்பதையோ ஒரு முஸ்லிம் எப்படி ஏற்க முடியும்? இது இஸ்லாத்தின் கொள்கைக்கே முரணான ஒன்றில்லையா? இதுவல்ல அதன் பொருள் என்றால் அதற்கு என்ன தான் பொருள்? சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் தருவார்களா?

மகத்தான ரட்சகர்

يا غــوث الأعظم كل الدهر والحين

எல்லாக் காலங்களிலும், நேரங்களிலும் (எங்களைக்) காப்பாற்றும் மகத்தான ரட்சகரே!

என்பது யாகுத்பாவின் மற்றொரு வரியாகும். எப்போதோ இவ்வுலகை விட்டுப் பிரிந்து விட்ட ஒரு மனிதரை இவ்வாறு கூவி அழைப்பது இஸ்லாமியக் கொள்கைக்கு எவ்வளவு முரணானது? மிகப் பெரும் தீர்க்கதரிசிகளில் ஒருவரான ஈசா (அலை) அவர்கள் தமது சமூகத்தவரின் குற்றங்கள் பற்றி மறுமையில் விசாரிக்கப்படும் போது,

‘மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும்,

என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்!’ என நீர் தான் மக்களுக்குக் கூறினீரா?’ என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும் போது, ‘நீ தூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன்’ என்று அவர் பதிலளிப்பார். ‘நீ எனக்குக் கட்டளையிட்ட படி எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்!’ என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன்.’.’அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்’ (எனவும் அவர் கூறுவார்)

(அல்குர்ஆன்: 5:116, 117, 118)

எனத் திருக்குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகிறான்.

இதிலிருந்து ஒருவர் எவ்வளவு பெரிய மனிதராயிருப்பினும் இவ்வுலகை விட்டுப் பிரிந்த பின்னர் யாருக்கும் எதுவும் செய்து விடவோ, காப்பாற்றிக் கரை சேர்த்திடவோ இயலாது என்பது திட்டவட்டமாகத் தெகிறது.

இன்றளவும் உயிருடன் உள்ள தீர்க்கதரிசியின் நிலையே இதுவென்றால் அவர்களை விடத் தரத்தால் பலமடங்கு குறைந்த ஒருவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்த பின்னர் பிறரது செயல்களுக்குப் பொறுப்பேற்கவோ, அவர்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்திடவோ இயலாது என்பது திட்டவட்டமாகத் தெகிறது.

நான் உங்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்றும் கூறுவீராக! அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்ற மாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காண மாட்டேன்’ என்றும் கூறுவீராக
(அல்குர்ஆன்: 72:21, 22)

‘அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்’ என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன்: 7:188)

அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

(அல்குர்ஆன்: 35:13,14)

என்பன போன்ற திருவசனங்கள் இறைவனல்லாத எவராக இருப்பினும், அவர்கள் வாழ்வு, சாவு முதல் அனைத்துப் பிரச்சனைகளும் இறைவனின் அதிகாரத்திற்குட்பட்டவை தான் என்பதையும், அவனைத் தவிர எவருக்கும் எந்த விதமான சுய அதிகாரமும் கிடையாது என்பதையும், மறைவானவற்றை அறிந்திட எவராலும் இயலாது என்பதையும் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தி விடுகின்றன.

‘எல்லாக் காலங்களிலும், நேரங்களிலும் எங்களைக் காப்பாற்றும் மகத்தான இரட்சகரே’ என்று மரணித்தவரை அழைத்திட எவ்வாறு ஒரு முஸ்லிம் மனந்துணிவான்?

இறைவனைத் தவிர எவரை அழைத்துப் பிரார்த்தனை செய்தாலும் அவ்வாறு பிரார்த்திக்கப்படுபவர் நபியாக ஆனாலும், நல்லடியாராக இருந்தாலும் அவர்களும் இறைவனின் அடிமைகளே. ஒருக்காலும் அவர்கள் இரட்சகராக முடியவே முடியாது. இந்த அடிப்படையை உணராத காரணத்தாலேயே ‘எல்லாக் காலங்களுக்கும் மகத்தான இரட்சகரே’ என்று இந்தக் கவிஞனும், இவனது அபிமானிகளும் அழைக்கத் துணிந்து விட்டனர்.

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

(அல்குர்ஆன்: 7:194)

அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது.

(அல்குர்ஆன்: 7:197)

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.

(அல்குர்ஆன்: 22:73)

‘வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால்’அல்லாஹ்’ என்று கூறுவார்கள். ‘அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்!’ என்று கேட்பீராக! ‘அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள்’ என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 39:38)

திருக்குர்ஆனின் இந்த வசனங்களையும், இது போன்ற கருத்தில் வருகின்ற ஏராளமான வசனங்களையும் மீண்டும் ஒரு முறை கவனியுங்கள்! இந்த வசனங்கள் கூறும் உண்மைக்கு மாறாக யாகுத்பா’வின் மேற்கண்ட வரிகள் அமைந்திருப்பதை உணர முடியும்.

‘எவராக இருந்தாலும் அவரும் அல்லாஹ்வின் அடிமையே. அணுவத்தனையும் அவர்களுக்கு அதிகாரம் இல்லை. தங்களுக்கே கூட சுயமாக அவர்களால் உதவிக் கொள்ள முடியாது. ஈயைப் படைக்கும் அளவுக்குக் கூட அவர்களுக்கு ஆற்றல் இல்லை’ என்ற போதனைகளையும் ‘எல்லாக் காலங்களிலும் மகத்தான இரட்சகரே’ என்ற இந்தப் புலம்பலையும் ஒரு நேரத்தில் ஒருவன் எப்படி நம்ப முடியும்?

இந்த வரியை நம்பினால் அவன் இறை வசனங்களை மறுக்கிறான். இறை வசனங்களை நம்பினால் அவன் இந்த யாகுத்பாவை மறுக்க வேண்டும்.

மகத்தான இரட்சகரே’ என்று அழைப்பது ஒரு புறமிருக்கட்டும். சாதாரணமாக அவரது பெயரைச் சொல்லியாவது அழைக்கலாம்? என்றால் அதற்கும் கூட திருக்குர்ஆன் அனுமதி தரவில்லை.

சுமார் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் அப்பெரியார். அவர் மரணித்து தொள்ளாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிருந்து கொண்டு அழைத்தால் அதை அவரால் செவியுறவே முடியாது.

இறந்தோரைச் செவியுறச் செய்ய உம்மால் முடியாது! செவிடர்கள் பின்வாங்கி ஓடினால் அழைப்பை அவர்களுக்குச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது.

(அல்குர்ஆன்: 30:52)

உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை.

(அல்குர்ஆன்: 35:22)

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்’ என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 16:20,21)

இறைவனின் இவ்வளவு தெளிவான போதனைகளுக்குப் பிறகும் என்றோ மரணித்து விட்ட அப்துல் காதிர் (ரஹ்) அவர்கள் கூப்பாடுகளைக் கேட்பார்கள் என்று நம்புவது இந்த வசனங்களை மறுத்ததாக ஆகாதா?