Tamil Bayan Points

01) அறிமுகம்

நூல்கள்: பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்

Last Updated on March 5, 2022 by

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம் என்ற தலைப்பில் 2014 ஆம் ஆண்டு ரமளான் மாதத்தில் பத்து நாட்கள் நான் தொடர் உரை நிகழ்த்தினேன். இந்த உரையை நூல் வடிவில் வெளியிட வேண்டும் என்று பல சகோதரர்கள் கேட்டுக் கொண்டதால் நூல் வடிவில் அதைத் தொகுத்துத் தந்துள்ளேன்.

உரை நடையை அப்படியே எழுத்தாக ஆக்கினால் அது வாசிப்பவர்களை ஈர்க்காது. அதைத் தவிர்ப்பதற்காக உரையின் கருத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு எழுத்து நடைக்கு மாற்றப்பட்டுள்ளது.

உரையில் ஆதாரங்களை எடுத்துக் காட்டும்போது அதன் கருத்துக்களை மட்டுமே எடுத்துச் சொல்வோம். ஆனால் எழுத்து நடையில் நேரடியான மொழிபெயர்ப்பை அப்படியே எழுதி அதன் பின்னர் கருத்துக்களை முன் வைக்க முடியும். இது அதிகப் பயன் தரும். எனவே எல்லா ஆதாரங்களுக்கும் நேரடியான மொழி பெயர்ப்பு தரப்படுள்ளது.

திருக்குர்ஆன் வசனத்திற்கு அரபு மூலம் இல்லாமல் மொழிபெயர்ப்பை மட்டும் குறிப்பிடலாம். அனைவரிடமும் திருக்குர்ஆன் உள்ளதால் வசன எண்ணைக் கொண்டு மூலத்தைப் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் ஹதீஸ் நூல்கள் அனைவரிடமும் இருக்காது என்பதால் எல்லா ஹதீஸ்களும் அரபு மூலத்துடன் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உரை நிகழ்த்தும்போது முன்னர் சொன்னதை அடிக்கடி திரும்பத் திரும்பக் கூறும் அவசியம் ஏற்படும். ஒரு நூலாக வெளியிடும்போது பல முறை திரும்பக் குறிப்பிடும் அவசியம் ஏற்படாது. எனவே திரும்பத் திரும்பக் குறிப்பிடுவதை இதில் தவிர்த்துள்ளேன்.

உரை நடையில் தலைப்புவாரியாக செய்திகளைப் பிரித்துக் கூறினாலும் தலைப்புக்கு சம்மந்தமில்லாத செய்திகளும் நுழைந்து விடும். நூல் வடிவில் இதைத் தவிர்த்து தனித்தனி தலைப்புகளாக செய்திகளைத் தர முடியும்.

உரையின் போது சொல்லாமல் விடுபட்ட செய்திகளும், சொல்ல மறந்த செய்திகளும் இந்த நூலில் கூடுதலாலகச் சேர்க்கப்பட்டுள்ளன.

சூனியக்காரனுக்கு அற்புதம் செய்யும் ஆற்றல் உள்ளது என்று நம் சமுதாயத்தில் பலர் நம்புகின்றனர். நபிகள் நாயகத்துக்கே சூனியம் செய்ய்யப்பட்டது என்றும் நம்புகிறார்கள்.

இந்த நம்பிக்கை நம்முடைய இறை நம்பிக்கையையும், இறைத்தூதர்கள் பற்றிய நம்பிக்கையையும் பெரிதும் பாதித்து இஸ்லாத்தை விட்டே நம்மை அப்புறப்படுத்தும் பாரதூரமான விஷயமாகும். இப்படி நம்புவது அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தலாகும் என்பதால் இந்த தலைப்பு குறித்து முஸ்லிம்கள் தெளிவாக அறிந்து வைத்திருக்க வேண்டும்.

அதற்கு இந்த நூல் உதவும் என்று நம்புகிறேன். இந்த நூல் மூலம் சூனியம் குறித்த தெளிவை முஸ்லிம் சமுதாயம் பெற வேண்டும் என்று அல்லாஹ்வை இறைஞ்சுகிறேன்.

அன்புடன்

பீ.ஜைனுல் ஆபிதீன்