Tamil Bayan Points

இளைஞர்களை சீரழிக்கும் செல்போன் போதை

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

Last Updated on September 15, 2023 by Trichy Farook

இளைஞர்களை சீரழிக்கும் செல்போன் போதை

நவீன விஞ்ஞான சாதனங்களால் மனிதனுக்கு பயன் இருந்தாலும் அதை சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்றால் நம்மை அது நரகத்தின் அதள பாதாளத்தில் கொண்டு போய்விடும்.அந்த நவீன சாதனங்களில் ஒன்று தான் செல்போன். இது இன்றைய இளைய சமுதாயத்தை நாமாக்கும் சாதனமாக உள்ளது.

எல்லா இடங்களிலும் செல்போன் பயன்பாடுதான்.

அங்காடி, பஸ், பஸ் நிலையம், ரெயில், ரெயில்நிலையம், கல்லூரி, பள்ளி கூடங்களில், பீச்சு, பார்க், பாத்ரூம் என்று எல்லா இடத்திலும் இதுதான் நிலை.

செல்போன் ஏன் போதை

பிள்ளைகள் அதிகமான நேரங்களை செல்போனில் தான் செலவிடுகிறார் வீடியோகேம், ப்ளூவெல், பப்ஜி , ரம்மி போன்ற விளையாட்டால் ஆர்வம் அதிகமாக அதற்கு அடிமை ஆகிறார்கள். இதற்கு முன்னர் தடை செய்யப்பட்ட ‘ப்ளு வேல்’ என்ற விளையாட்டால் பல இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்டதையும் சிலர் பெற்றோர்களை கூட கொலை செய்ததையும். நாம் கேள்விப்பட்டோம், பப்ஜி’ என்ற ஆன்லைன் விளையாட்டுதான் பெருவாரியாக மாணவர்கள் விளையாடும் கம்ப்யூட்டர் விளையாட்டு என்றும், 40 கோடி இளைஞர்கள் உலகளவில் விளையாடுகிறார்கள் என்றும், அதில் 8 கோடி பேர் இந்தியர்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

இது தடை செய்யப்பட்ட ஒரு கம்ப்யூட்டர் விளையாட்டு. ஆனால் இளைஞர்கள் எந்த தடையுமின்றி விளையாடுகிறார்கள். இந்தியாவில் 25 கோடி மக்கள் இந்த கைப்பேசி வீடியோ விளையாட்டு விளையாடி உலகில் முதல் ஐந்து இடத்தில் நாம் இருக்கிறோம்.

ரம்மீ (சீட்டாட்டம் ) சூதாட்டம்

ரம்மி வாங்கிய பலிகள்…

கோவையில் (10 – 2020) அன்று ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் சீரநாயக்கன் பாளையம் வங்கி ஊழியர் மதன் பாபு தூக்கு போட்டுதற்கொலை

திருச்சி அனலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். திருச்சி மைய காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தார். ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி 3 லட்ச ரூபாயை இழந்தார். கடன் கொடுத்த நண்பர்கள் நெருக்கடி கொடுக்கவே அந்த அழுத்தம் தாங்க முடியாமல் ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள மாட்டுக் கொட்டகையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை செங்குன்றம் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் தினேஷ். திருமணத்திற்கு முன்பே ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகியுள்ளார், ஓராண்டுக்கு முன்பு திருமணமாகி மனைவி 4 மாத கர்ப்பிணி. இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் 8 லட்சம் ரூபாயை இழந்துள்ளார். கடன் நெருக்கடி முற்றவே குடும்பத்தினர் சில சொத்துக்களை விற்று கடனை அடைத்துள்ளனர். அப்படியும் கடன் தீராததால் மனஉளைச்சலுக்கு ஆளாகி, செப்டம்பர் 14ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தருமபுரியைச் சேர்ந்த 28 வயதான வெங்கடேஷ், சேலம் தலைவாசல் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் படை காவலராக பணிபுரிந்து வந்தார். சக காவலரிடம் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மியில் இழந்துள்ளார். கடன் நெருக்கடி தாங்க முடியாமல் செப்டம்பர் 21ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பல கல்லூரி மாணவர்கள் இந்த விளையாட்டில் உயிரை இழந்துள்ளனர்

புதுச்சேரியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால், இளைஞர் ஒருவர் தீ குளித்து தற்கொலை செய்துக்கொண்டார்

மேலும் பப்ஜி விளையாட்டால் ஏற்பட்ட விபரீதங்களாக

  • பெற்றோர்கள் திட்டியதால் பள்ளிக்கு செல்லாமல் காட்டுப் பகுதிகளுக்கு 2 இளைஞர்கள் சென்று பப்ஜி விளையாடினர்!
  • தேர்வுக்கு படிக்காமல் பப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருந்த மகனை பெற்றோர்கள் கண்டித்ததால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டான்!
  • பப்ஜி விளையாட்டை தடுத்து நிறுத்தியதால் மகன், பெற்றோர்களை கொடூரமாக கொலை செய்தான்!
  • நீண்ட நேரம் பப்ஜி விளையாடிய மாணவர் கடுமையான மன அழுத்தத்தால் மாரடைப்பால் உயிரிழப்பு!
  • தொடர்ந்து ஆறு மணிநேரம் பப்ஜி கேம் விளையாடியதால் சிறுவன் உயிரிழப்பு!
  • பத்தாம் வகுப்பு மாணவர் பப்ஜி விளையாடியதால் மனநலம் பாதிக்கப்பட்டார்!
  • கணவர் நீண்ட நேரம் பப்ஜி விளையாடியதால் மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டதால், மனைவி விவாகரத்து கொடுத்து பிரிந்து விட்டார்!
  • 14 வயது பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சக சிறுவனை கத்தியால் குத்தினான்!
  •  நீண்ட நேரம் பப்ஜி விளையாடிய இளைஞர் தண்ணீர் என்று நினைத்து அமிலத்தை எடுத்து குடித்து விட்டார்
ِ وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ

உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்!

(அல்குர்ஆன்: 2:195)

وَلَا تَقْتُلُوا أَنفُسَكُمْ

உங்களையே நீங்கள் கொன்று விடாதீர்கள்!

(அல்குர்ஆன்: 4:29)

உடல்ரீதியான பாதிப்பு

  • இரவில் தூக்கமின்மை
  • பகலில் தூக்கக் கிறக்கம் தலைவலி,
  • கண் எரிச்சல், கண்கோளாறுகள்
  • விரல் எழும்பு தேய்மானம்
  • வகுப்பைப் புறக்கணித்தல் போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுவது, கல்வி கேள்விகுறி 
  • தற்கொலை எண்ணங்கள் தோன்றுவது 
  • பிறரைத் தாக்க வேண்டும் என்ற குற்ற உணர்வு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 
وَإِنَّ لِعَيْنِكَ عَلَيْكَ حَقًّا

உங்களின் உடலுக்கு செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன. உங்களின் கண்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளும் இருக்கின்றன.

நூல்: புகாரி-1975 

குற்றவாளிகளிடம் “உங்களை நரகத்தில் சேர்த்தது எது?” என்று விசாரிப்பார்கள்.

وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ

(வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம்.

(திருக்குர்ஆன்:74:45.)

وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ

வீணானதைப் புறக்கணிப்பார்கள்.

(அல்குர்ஆன்: 23:3)

எல்லா போதைகளையும் விட ஒரு கொடிய போதை செல்போன் போதை தான். மிகவும் அபாயகரமானது

உணவு போதை, சினிமா போதை, கிரிக்கெட் போதை, புகை போதை, மது போதை, பாலியல் போதை என்ற வரிசையில் இன்று இளைஞன் சீரழிவது இந்த கைப்பேசி போதையால்தான். மற்ற எல்லா போதைகளையும் விட கொடிய ஒரு நோய் இது என்று சந்தேகமின்றி கூறிவிடலாம்.

மற்ற விளையாட்டில் ஆர்வம் காட்டல்

மாணவர்களே இது வேண்டாம் நீங்கள் விளையாட வேண்டியது கைப்பந்து, கூடைப்பந்து, ஓட்டம், நீச்சல் போன்ற நிஜமான விளையாட்டுகள். மொபைல் கேம் என்ற போலி விளையாட்டு விபரீதமானது. அது உங்கள் நிகழ்காலத்தை கொல்லும். எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும்.

இந்த கொடிய செல்போன் போதையில் இருந்து இளைர்களை மீட்டேடுப்போம். அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக.!