Tamil Bayan Points

உளு நீங்குவது போல உணர்ந்தால்?

கேள்வி-பதில்: இதர சட்டங்கள்

Last Updated on March 31, 2018 by

உளு நீங்குவது போல உணர்ந்தால்?

காற்றுப்பிரிந்த சப்தம் கேட்டால் அல்லது துர்நாற்றத்தை நுகர்ந்தால் மட்டும் உளு முறிந்துவிட்டது.

உளூ முறியாமலேயே உளூ முறிந்துவிட்டது போன்று ஊசலாட்டம் பலருக்கு ஏற்படுவதுண்டு. இந்த ஊசலாட்டம் ஷைத்தானால் ஏற்படுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். உளூ முறிந்துவிட்டது என நமக்கு உறுதியாகத் தெரிந்தாலே மீண்டும் நாம் உளூ செய்ய வேண்டும்.

காற்றுப்பிரிந்த சப்தத்தை நாம் கேட்டால் அல்லது துர்நாற்றத்தை நுகர்ந்தால் உளூ முறிந்துவிட்டது என்று முடிவு செய்யலாம். இதுபோன்ற சான்றுகள் ஏதும் இல்லாமல் உளூ முறிந்தது போன்ற எண்ணம் உள்ளத்தில் எழுந்தால் இந்த சந்தேகத்தை நாம் பொருட்படுத்தக்கூடாது. உளூவுடன் இருப்பதாகவே முடிவு செய்துகொள்ள வேண்டும்.

137 حَدَّثَنَا عَلِيٌّ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ حَدَّثَنَا الزُّهْرِيُّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ح وَعَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ عَنْ عَمِّهِ
أَنَّهُ شَكَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّجُلُ الَّذِي يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَجِدُ الشَّيْءَ فِي الصَّلَاةِ فَقَالَ لَا يَنْفَتِلْ أَوْ لَا يَنْصَرِفْ حَتَّى يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيحًا رواه البخاري

அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “தொழும்போது காற்றுப் பிரிவது போன்ற உணர்வு ஒருவருக்கு ஏற்படுகிறது (இதனால் உளூ முறிந்துவிடுமா?)” என்று முறையிட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “(காற்றுப் பிரிவதன்) சப்தத்தைக் கேட்காத வரை அல்லது நாற்றத்தை உணராத வரை (தொழுகையிலிருந்து) திரும்ப வேண்டாம்” என்றார்கள். புகாரி (137)

எனவே உளூ களைந்தது போன்ற உணர்வு உங்களுக்கு ஏற்பட்டால் அதை கண்டுகொள்ளாதீர்கள். சப்தம் அல்லது நாற்றத்தின் மூலம் தெளிவாகத் தெரிந்தாலே மீண்டும் உளூ செய்துகொள்ளுங்கள்