ஏகத்துவாதிகளே எங்கே செல்கின்றீர்கள்?
பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்Last Updated on September 16, 2023 by Trichy Farook
ஏகத்துவாதிகளே எங்கே செல்கின்றீர்கள்?
வஹியை மட்டும் பின்பற்றும் ஏகத்துவாதிகளே! இதோ உங்களுக்கு வஹியின் மூலம் கிடைப்பெற்ற அழகிய உபதேசத்தை பாரீர்!
குழப்பங்கள் தோன்றும் முன்!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இருள் மிகுந்த இரவின் பகுதிகளைப் போன்ற குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் விரைந்து (நற்)செயல்கள் புரிந்துகொள்ளுங்கள். (அக்குழப்பங்களின்போது) காலையில் இறை நம்பிக்கையாளனாக இருக்கும் ஒரு மனிதன் மாலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான்.
மாலையில் இறைநம்பிக்கையாளனாக இருக்கும் ஒருவன் காலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான். இவ்வுலகின் அற்ப சுகங்களுக்காகத் தனது மார்க்கத்தையே அவன் விற்றுவிடுவான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,
நூல்: முஸ்லிம்-186
மனிதர்கள் நஷ்டத்தில் இருக்கின்றனர்!
காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் நட்டத்தில் இருக்கிறான்.
யாரைத் தவிர?
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர.
சிந்திக்க வேண்டாமா?
அல்லாஹ்வும் அவனது தூதரும் நல்லறங்கள் விஷயத்தில் இந்த அளவிற்கு வலியுறுத்தி இருக்கும் பொழுது இன்றைய ஏகத்துவாதிகளே! தாங்களின் நல்லறங்கள் விஷயத்தில் சுயபரிசோதனை செய்து பாருங்கள்?
ஏகத்துவாதிகளே எச்சரிக்கை!
நபி ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக ஷைத்தான் உங்களுடைய இப்பூமியில் அவன் வணங்கப்படுவதில் நிராசையடைந்துவிட்டான். ஆனால் நீங்கள் அற்பமாகக் கருதுபவற்றில் உங்களை (வழிகெடுப்பதில்) திருப்தியாக உள்ளான்.
நூல்: அஹ்மத்-8810
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அரேபிய தீபகற்பத்தில் தொழுகையாளர்கள் தன்னை வணங்குவார்கள் என்ற நம்பிக்கையை ஷைத்தான் இழந்து விட்டான். எனினும் அவர்களிடையே பிளவை உருவாக்குவான்.
அறிவிப்பாளர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ்(ரலி) ,
நூல்: முஸ்லிம்-5417 , 5418
எனவே ஷைத்தான் ஏகத்துவாதிகளை ஷிர்க்கான காரியங்களில் வழிகெடுக்க முற்பட மாட்டான், ஆனால் ஏகத்துவாதிகளின் நல்லறங்களையும், நன்மைகளையும் அற்பமானவைகளை கொண்டே முடக்குவான்; மேலும் அவன் மகிழ்ச்சியுறும் விதமாய் நாம் அற்பமாக கருதும் சில விஷயங்களில் அவனுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள். ஆகவே, தத்தமது நல்லறங்களிலும், மார்க்க விசயங்களையும் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்.
அந்நாளில் மதிப்பீடு செய்தல் உண்மை. (நன்மையின்) எடைகள் கனமாக இருப்போரே வெற்றி பெற்றோர்.
குழப்பம் செய்வோரை புறக்கணிப்போம்!
ஏகத்துவாதிகளே! எங்கே சென்றது அந்த தெளிந்த சிந்தனையும், தெளிந்த பார்வை உடனான சுய சிந்தனையுடன் கொண்டு நன்மையை ஏவி, தீமையை தடுத்து தத்தமது நல்லமல்களிலும் போட்டியிட்ட தருணங்கள்.
இன்று எதை நோக்கி நாம் பயணிக்கின்றோம்? இதற்கு காரணம் நாம் இல்லையா? அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று நமது சுய சிந்தனையை குறைத்ததின் விளைவு என்று இன்னுமா நாம் விளங்க வில்லை? ஆம்! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது.
நீங்கள் புறக்கணித்தால் குழப்பம் செய்வோரை அல்லாஹ் அறிந்தவன்.
எனவே கொள்கையை வளர்க்க நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தருணமிது. தேவைகளற்ற ஷைத்தானிய சூழ்ச்சிகளுக்கும், பித்னாக்களுக்கும் களம் அமைத்து கொடுத்து எந்தவொரு ஏகத்துவவாதியும் தங்களை பழிகேடாக ஆக்கி கொள்ளாமல், நாம் இதற்கு முன் என்பதுகளில் இருந்து எந்த மறுமை வெற்றிக்கு பாடுபட்டோமோ, அதற்கான களமான, தாவா களத்திலும், நல்லறங்களிலும் நமது சிந்தனைகளை மடை மாற்றுவோமாக, இன்ஷா அல்லாஹ்!
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரை அவர்களது இறைவன் தனது அருளில் நுழைப்பான். இதுவே தெளிவான வெற்றி.