Tamil Bayan Points

கடனாளிக்கு ஜகாத் கடமையா?

கேள்வி-பதில்: ஜகாத்

Last Updated on December 30, 2016 by Trichy Farook

கடனாளிக்கு  ஜகாத் கடமையா?

இல்லை.

கடன் இருந்து அதை நிறைவேற்றும் அளவுக்குப் பொருளாதாரமோ அல்லது இதர சொத்துக்களோ இல்லை என்றால் அவருக்கு ஸகாத் கடமையில்லை.

ஏனென்றால் கடன்பட்டவர் ஸகாத்தை வாங்கும் நிலையில் இருக்கின்றார். ஸகாத்தைப் பெறும் நிலையில் இருப்பவர் பிறருக்கு ஸகாத்தை வழங்க முடியாது.

إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّهِ وَاِبْنِ السَّبِيلِ فَرِيضَةً مِنْ اللَّهِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ

யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
அல்குர்ஆன் (9 : 60)

1393حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَحِلُّ الصَّدَقَةُ لِغَنِيٍّ إِلَّا لِخَمْسَةٍ لِغَازٍ فِي سَبِيلِ اللَّهِ أَوْ لِعَامِلٍ عَلَيْهَا أَوْ لِغَارِمٍ أَوْ لِرَجُلٍ اشْتَرَاهَا بِمَالِهِ أَوْ لِرَجُلٍ كَانَ لَهُ جَارٌ مِسْكِينٌ فَتُصُدِّقَ عَلَى الْمِسْكِينِ فَأَهْدَاهَا الْمِسْكِينُ لِلْغَنِيِّ حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَعْنَاهُ رواه أبو داود

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஐந்து நபர்களைத் தவிர வேறு எந்த செல்வந்தருக்கும் ஸகாத் பொருள் ஆகுமானதல்ல. (அவர்கள் யாரென்றால்) அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர். ஸகாத்தை வசூலிக்கும் பணியாளர். கடன்பட்டவர். தனது செல்வத்தைக் கொடுத்து ஸகாத் பொருளை விலைக்கு வாங்கிக்கொண்டவர். ஏழை அண்டை வீட்டார் ஒருவருக்கு வழங்கப்பட்ட ஸகாத் பொருளை அந்த ஏழையிடமிருந்து அன்பளிப்பாக பெற்ற செல்வந்தர்.
அறிவிப்பவர் : அபூசயீத் (ரலி) அவர்கள்
நூல் : அபூதாவுத் (1393)

“அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன. கடனைத் தவிர!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)முஸ்லிம் 3498

எனவே கடன் வாங்கியவர் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவது தான் அவருடைய முதல் கடமை.

ஒருவருடைய சொத்துக்கள் அவர் பட்ட கடனை விட அதிகமாக இருந்தால் கடன் எவ்வளவு உள்ளதோ அதைக் கழித்துவிட்டு மீதமுள்ள சொத்தின் மதிப்பைக் கணக்கிட வேண்டும். எஞ்சியுள்ள சொத்துக்கள் ஸகாத் கடமையாகுவதற்குரிய அளவு (நிஸாப்) அல்லது அதை விடவும் அதிகமாக இருந்தால் எஞ்சியுள்ள இந்தச் சொத்துக்களுக்கு ஸகாத் கொடுக்க வேண்டும்.

உதாரணமாக ஒருவரிடம் 50 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளது. இவருக்கு 5 லட்சம் கடன் உள்ளது என்றால் இந்த 5 லட்சத்தைக் கழித்துவிட்டு மீதமுள்ள 45 லட்சங்களுக்கு ஸகாத் கொடுக்க வேண்டும்.