Tamil Bayan Points

09) குர்ஆன் வசனம் காணாமல் போகுமா?

நூல்கள்: பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்

Last Updated on October 18, 2022 by Trichy Farook

குர்ஆன் வசனம் காணாமல் போகுமா?

அடுத்து இன்னொரு செய்தியைப் பாருங்கள்.

3670 حدثنا يحيى بن يحيى قال قرأت على مالك عن عبد الله بن أبى بكر عن عمرة عن عائشة أنها قالت كان فيما أنزل من القرآن عشر رضعات معلومات يحرمن. ثم نسخن بخمس معلومات فتوفى رسول الله -صلى الله عليه وسلم- وهن فيما يقرأ من القرآن.

பத்து தடவைகள் பால் அருந்தினால் தான் பால்குடி உறவு உண்டாகும் என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது ஐந்து தடவைகள் என்று மாற்றப்பட்டது. இவ்வசனம் குர்ஆனில் ஓதப்பட்டு வந்த காலத்தில் தான் அல்லாஹ்வின் தூதர் (அவர்கள் மரணித்தார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : முஸ்லிம்-2876 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ஒரு வசனம் திருக்குர்ஆனில் இருந்தது என்று ஆயிஷா (ரலி) கூறியதாக இந்தச் செய்தி கூறுகிறது.

நபியவர்கள் மரணிக்கும் வரை திருக்குர்ஆனில் இப்படி ஒரு வசனம் இருந்திருந்தால் இப்போதும் அந்த வசனம் திருக்குர்ஆனில் இருக்க வேண்டும். ஆனால் இப்படி ஒரு வசனம் திருக்குர்ஆனில் இல்லை.

இதிலிருந்து தெரிவது என்ன? நபியவர்கள் காலத்தில் ஓதப்பட்டு வந்த வசனம் அதன் பின்னர் மாற்றப்பட்டு விட்டது என்ற கருத்தைத் தான் இது தருகிறது.

திருக்குர்ஆனில் ஒரு வசனத்தை மாற்றுவதாக இருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலமாகத் தான் அல்லாஹ் மாற்றுவான். அவர்கள் மரனித்த பின்னர் எந்த வசனத்தையும் மாற்ற முடியாது.

இப்போதுள்ள எந்த ஒரு குர்ஆன் பிரதியிலும் அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்ட்டு வரும் உஸ்மான் (ரலி) அவர்களின் பழங்காலப் பிரதியிலும் இது போன்ற வசனம் கிடையாது.

15:9 اِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَاِنَّا لَهٗ لَحٰـفِظُوْنَ‏

நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.

திருக்குர் ஆன் 15:9

அல்லாஹ் திருக்குர்ஆனைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்று இருக்கும் போது திருக்குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்ற கருத்தைத் தரும் இந்தச் செய்தி கட்டுக் கதையாகத் தான் இருக்க முடியும். இந்தச் செய்தியை நம்பினால் திருக்குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று நம்புவதாக ஆகும்..

ஹதீஸை நாம் ஏற்றுக் கொள்ள அறிவிப்பாளரின் வரிசை மட்டும் சரியாக இருப்பது போதாது. அது குர்ஆனுடன் மோதாமலும் இருக்க வேண்டும்.

எனவே இந்தச் செய்தி முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது திருக்குர்ஆனில் இருந்த ஒரு வசனத்தைப் பின்னர் யாரோ மாற்றி விட்டார்கள் என்ற் கருத்தைத் தருவதால் இந்தச் செய்தி உண்மையாக இருக்க முடியாது. இது கட்டுக்கதையாகத் தான் இருக்க முடியும்.

இது தான் ஹதீஸ்களைப் புரிந்து கொள்ளும் சரியான வழியாகும்.