Tamil Bayan Points

13) குர்பானியின் சட்டங்கள் சட்ட சுருக்கம்

நூல்கள்: சட்டங்களின் சுருக்கம்

Last Updated on December 21, 2023 by

  • குர்பானி கொடுக்க நாடியவர் துல்ஹஜ்ஜு மாதம் பிறை ஒன்று முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம், முடி இவற்றில் எதையும் வெட்டக் கூடாது. நஸயீ-4361
  • வசதியுள்ளவர்கள் அவசியம் நிறைவேற்ற வேண்டும். புகாரி-955
  • கடன் வாங்கி குர்பானி கொடுத்தல் கூடாது.
  • பெருநாள் தொழுகைக்கு முன்பே குர்பானிப் பிராணியை அறுப்பது கூடாது. புகாரி-954
  • தொழுகைக்கு முன் குர்பானி கொடுத்திருந்தாலும் தவறாகக் கொடுத்ததினால் திரும்பக் கொடுக்க வேண்டும். புகாரி-5500

குர்பானிப் பிராணிகள்

  • ஒட்டகம், ஆடு, மாடு இம்மூன்றும் குர்பானி கொடுக்கத் தகுதியான பிராணிகள். (அல்குர்ஆன்: 22:28)  
  • தெளிவாகத் தெரியும் நொண்டி, பார்வைக் குறை, நோய், எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு, ஆகிய பிராணியைத் குர்பானி கொடுப்பது கூடாது. குறை மறைமுகமாக சிறிய அளவில் இருந்தால் பிரச்சனையில்லை. திர்மிதீ-1417
  • காயடிக்கப்பட்ட பிராணிகளை குர்பானி கொடுப்பதற்கு எந்த தடையும் இல்லை.
  • முஸின்னா, முஸின்னாவைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆடு, மாடு, ஒட்டகத்தில் பல் விழுந்தவை முஸின்னா என்று சொல்லப்படும். இரண்டு வருடம் பூர்த்தியான ஆடு, மாடுகள் முஸின்னா எனப்படும். ஆனால் ஒட்டகத்தில் ஐந்து வருடம் பூர்த்தியடைந்தால் தான் முஸின்னா என்பர். புகாரி-5560
  • அடுத்து ஜத்வு, ஜத்வு என்பது ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் பூர்த்தியடைந்திருக்க வேண்டும். முஸின்னா இல்லையானால் அல்லது ஆட்டை, மாட்டை வாங்குவதற்குரிய வசதியில்லையானால் ஜத்வு வகையைக் குர்பானி கொடுக்கலாம். நஸயீ-4382
  • குட்டியை ஈன்று பால் கொடுத்துக் கொண்டிருக்கும் பிராணியை அறுக்க தடை. முஸ்லிம்-4143
  • குர்பானி பிராணியை கொடுமை படுத்துதல் கூடாது.

கூட்டுக் குர்பானி

  • ஒரு மாடு ஏழு நபருக்கும் ஒரு ஒட்டகம் ஏழு நபருக்கும் கூட்டுசேர போதுமானதாகும். அபூதாவூத்-2425
  • வேறு சில அறிவிப்பில் ஒரு ஒட்டகத்தில் 10 பேர் வீதமும் கூட்டு சேர அனுமதி உள்ளது. திர்மிதி-1421
  • ஒட்டகம், மாட்டில் மட்டும் தான் பலர் சேர்ந்து குர்பானி கொடுக்கலாம். ஆட்டில் ஒரு குடும்பம் மட்டுமே கொடுக்க வேண்டும்.

பிராணியை அறுத்தல்

  • கத்தியைக் கூர்மையாக வைத்துக் கொள்வதே அவசியம். முஸ்லிம்-3615
  • கருப்பும் வெள்ளையும் கலந்த இரு ஆடுகளைக் குர்பானி கொடுக்கும் போது நபிகளார் தம்முடைய பாதத்தை அவற்றின் கழுத்தில் வைத்தார்கள். புகாரி-5558
  • பிறகு பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறி அறுத்தார்கள். புகாரி-5565
  • ஒட்டகத்தைப் நிற்க வைத்து அதன் ஒரு காலை கயிற்றால் கட்டி வைத்துக் கொண்டு அறுக்க வேண்டும். புகாரி-1713
  • குடும்பத்தினர் ஆஜராக வேண்டும் என்பது அவசியமில்லை, விருப்பினால் இருக்கலாம்.
  • கிப்லாவை முன்னோக்கித் தான் அறுக்க வேண்டும் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவும் இல்லை.
  • ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை முடிந்த பின்பே குர்பானி கொடுக்க வேண்டும். அதற்கு முன்னர் கொடுத்தால் அது குர்பானியாகக் கணக்கில் கொள்ளப்படாது. புகாரி-5560
  • ஒரு ஆடு ஒரு குடும்பத்திற்கு குர்பானி கொடுப்பது போதுமானது. இப்னுமாஜா-3147
  • பெருமையை நாடாமல் ஏழைகளின் தேவையைக் கருதி எத்தனை பிராணி வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால் மாமிசத்தை வீண்விரையம் செய்யக்கூடாது.
  • நன்மையைக் கருதி அதிகமாக குர்பானி கொடுப்பது சிறந்தது என்றும் தனக்கு முடியாத பட்சத்தில் மற்றவரிடம் கொடுத்து குர்பானிப் பிராணியை அறுக்கச் சொல்லலாம்.முஸ்லிம்-2137
  • ஹாஜிகள் மினாவில் கொடுத்த குர்பானியே போதுமானதாகும், உள்ளூரில் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

பங்கிடுதல்

  • குர்பானி இறைச்சி தனது தேவைக்குப் போக சொந்தம், ஏழை, யாசிப்பவர்கள் இப்படி யாருக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் பங்கிடலாம். நிர்ணயம் எதுவுமில்லை.(அல்குர்ஆன்: 22:36)
  • மாமிசத்தில் நமக்குத் தேவையான அளவை எடுத்துக் கொள்ள அனுமதி உள்ளது. முஸ்லிம்-3649
  • குர்பானி மாமிசத்தைக் முஸ்லிமல்லாதவர்களுக்குக் கொடுக்க எந்தத் தடையுமில்லை.(அல்குர்ஆன்: 22:36)
  • குர்பானிப் பிராணியின் தோல் அல்லது இறைச்சியை உரித்தவருக்குக் கூலியாகக் கொடுத்தல் கூடாது. இதைத் தர்மமாக ஏழைகளுக்கு வழங்க வேண்டும். புகாரி-1716
  • பிராணிகளின் இரத்தம் ஹராம். (அல்குர்ஆன்: 2:173)
  • இறந்தவர்கள் சார்பாக குர்பானி கொடுப்பதற்கு ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் இல்லை. இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டப்படும் ஹதீஸ் பலவீனமானதாக இருப்பதுடன் ஆதாரப்பூர்மான ஹதீஸுடன் மோதுகிறது. திர்மிதீ-1425
  • அல்லாஹ் அல்லாதவர்களுக்குக் குர்பானிகொடுத்தல் கூடாது. அவ்வாறு அறுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியை சாப்பிடுவதும் தடுக்கப்பட்டுவிட்டது. முஸ்லிம்-3659

மாற்றப்பட்டச் சட்டம்

  • பஞ்சம் மிகைத்திருந்த போது மூன்று நாட்களுக்கு மேல் மாமிசத்தைச் சேமித்து வைக்கக் கூடாது என்று மக்களுக்குத் தடைவிதித்திருந்தார்கள். பின்பு எவ்வளவு நாள் வேண்டுமானாலும் சேமித்துக் கொள்வதற்கு சலுகை வழங்கினர்கள். புகாரி-5423

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *