Tamil Bayan Points

03) குறைகளை கவனித்து ஹதீஸ்களின் வகைகள்

முக்கிய குறிப்புகள்: ஹதீஸ் கலை

Last Updated on March 14, 2022 by Trichy Farook

அறிவிப்பாளர்களிடம் ஏற்படும் குறைகளால் மறுக்கப்படும் செய்திகள்

மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது)

ஏற்கப்படாத ஹதீஸ்கள் வரிசையில் முதலிடத்தில் இருப்பது, மவ்ளூவு என்ற வகை ஹதீஸ்களாகும்.

ஒரு அறிவிப்பாளர் நபியின் மீது பொய்யாக இட்டுக்கட்டிக் கூறுபவர் என்று விமர்சிக்கப் பட்டிருந்தால் அவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் ”மவ்ளூவு” என்று கூறப்படும்.

மவ்ளூவு என்றால் இட்டுக்கட்டப்பட்டது என்று பொருள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாதவற்றை – செய்யாதவற்றை – அங்கீகரிக்காதவற்றை அவர்கள் பெயரால் கூறுவது இட்டுக்கட்டப்பட்டது எனப்படும்.

திருக்குர்ஆனுக்கும், நிரூபிக்கப்பட்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் நேர் முரணாகவும், எந்த வகையிலும் விளக்கம் கொடுக்க முடியாதவையாகவும் அமைந்தவை.

புத்தியில்லாதவனின் உளறலுக்கு நிகராக அமைந்தவை.

அறிவிப்பாளரில் ஒருவரோ, பலரோ பெரும் பொய்யர் என்று நிரூபிக்கப்பட்டிருப்பது.

இட்டுக்கட்டியவர்கள் பிற்காலத்தில் திருந்தி, தாம் இட்டுக்கட்டியதை ஒப்புக் கொள்ளுதல் அல்லது வசமாக மாட்டிக் கொள்ளும் போது ஒப்புக் கொள்ளுதல்.

மேற்கண்ட அம்சங்களில் ஒன்று இருந்தால் கூட அது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். அதை ஏற்கக் கூடாது. அதன் அடிப்படையில் அமல் செய்யக் கூடாது.

இதில் அறிஞர்களுக்கிடையே எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை.

ஹதீஸ்களில் இட்டுக்கட்டியதற்கான காரணங்கள்

1. இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்தல்

2. ஆர்வக் கோளாறு

3. தனி மரியாதை பெறுவதற்காக

4. மன்னர்களை மகிழ்விக்க

5. இயக்க வெறி

6. பேச்சைப் பிழைப்பாக்க

7. சுயலாபத்திற்காக

8. மூளை குழம்பியவர்களின் உளறல்கள்

இது போன்ற காரணங்களினால் ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டன.

உதாரணம்

கத்தரிக்காய் சாப்பிடுவது எல்லா நோய்களுக்கும் மருந்தாகும். (நக்துல் மன்கூல், பாகம் 1, பக்கம் 2)

பருப்பை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது இதயத்தை மென்மையாக்கும். (அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ, பாகம் 1, பக்கம்161)

பெண்களிடம் ஆலோசனை கேளுங்கள். ஆனால் அதற்கு மாற்றமாக நடங்கள். (அல்ஃபவாயிதுல் மவ்லூஆ, பாகம் 1, பக்கம்99)

ஆலிமுக்கு முன்னால் மாணவர்கள் அமர்ந்தவுடன் அவனுக்கு அல்லாஹ் தனது அருளின் எழுபது வாசல்களைத் திறந்து விடுகின்றான். அவரை விட்டு எழும் போது அன்று பிறந்த பாலகனைப் போன்று அவன் எழுகின்றான். அவன் கற்ற ஒவ்வொரு எழுத்துக்காகவும் ஒரு ஷஹீதுடைய நன்மை அல்லாஹ் தருவான். (நூல்: தன்ஸீஹுஷ் ஷரீஅத்துல் மர்ஃபூஆ, பாகம் 1, பக்கம் 283)

ஸவ்ர் குகையில் சிலந்தி வலை பின்னியது. புறா முட்டையிட்டது பற்றிய அனைத்தும் பொய்யானவை. (நூல்: மீஅத்து ஹதீஸ் மினல் அஹாதீஸில் லயீஃபா வல் மவ்லூஆ, பாகம் 1, பக்கம் 4)

இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் சில உதாரணங்களைத் தான் இங்கு குறிப்பிட்டுள்ளோம். இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அம்பலப்படுத்தும் வகையில் நல்லறிஞர்கள் தனியாக நூற்களையே எழுதியுள்ளனர்.

இப்னு ஜவ்ஸீ, முல்லா அலீ காரி, சுயூத்தி, ஷவ்கானி, தஹபீ, சுப்கீ போன்ற அறிஞர்களின் நூற்கள் இவற்றில் பிரபலமானவையாகும்.

தங்களின் முழு வாழ்நாளையும் இந்த ஆய்வுக்காக அர்ப்பணித்து இட்டுக்கட்டப் பட்டவைகளை இந்த நல்லறிஞர்கள் இனம் காட்டிச் சென்றார்கள்.

இந்தப் பொய்களை இவர்கள் களையெடுக்கும் முயற்சியில் இறங்காதிருந்தால் இஸ்லாத்திற்கும் ஏனைய மார்க்கங்களுக்கும் வித்தியாசம் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும்.

ஆனால் இன்றைக்கும் கூட மார்க்க அறிஞர்கள் இந்தப் பொய்களை மேடைகளிலும் ஜும்ஆப் பிரசங்கங்களிலும் கூறி வருகின்றார்கள் என்பது தான் வேதனை.

 

மத்ரூக் – (விடப்படுவதற்கு ஏற்றது)

மவ்ளுவு எனும் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களுக்கு அடுத்த நிலையில் அமைந்தவை மத்ரூக் எனப்படும் ஹதீஸ்களாகும்.

அறிவிப்பாளர்களில் பொய்யர் என்று சந்தேகிக்கப்பட்டவர் இடம் பெறுவது மத்ரூக் எனப்படும். ஹதீஸ்களில் இவர் பொய் கூறினார் என்பது நிரூபிக்கப்படாவிட்டாலும் பொதுவாக அவர் பொய் பேசக்கூடியவர் என்று நிரூபிக்கப்பட்டிருந்தால் அவர் அறிவிக்கும் ஹதீஸ்களும் மத்ரூக் எனப்படும்.

மவ்ளுவு (இட்டுக்கட்டப்பட்ட) ஹதீஸ்களுக்கும் மத்ரூக் எனும் ஹதீஸ்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் மவ்ளுவு என்றால் அறிவிப்பாளர் பொய்யர் என்று சந்தேகமற நிரூபிக்கப்பட்டிருக்கும். மத்ரூக் என்பதில் பொய்யர் என்று நிரூபிக்கப்பட்டிருக்காது. எனினும் பரவலாக அவர் மேல் பொய்யர் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருக்கும்.

இதற்கு பின்வரும் செய்தியை உதாரணமாகக் கூறலாம்

அலீ (ரலி), அம்மார் (ரலி) அறிவிப்பதாக வருகிறது. “நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ரு தொழுகையில் குனூத் ஓதுபவர்களாக இருந்தார்கள். அரஃபா காலைத் தொழுகையில் தக்பீர் கூறி அதனை அய்யாமுத் தஷ்ரீக்குடைய இறுதி நாளின் அஸர் தொழுகையில் முடிப்பவர்களாக இருந்தார்கள்”

இந்தச் செய்தி நஸாயீ மற்றும் தாரகுத்னியில் இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் “அம்ருப்னு ஸமிர்” என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பொய்யரென சந்தேகிக்கப் பட்டவர் ஆவார். எனவே இந்தச் செய்தி “மத்ரூக்” எனும் நிலையில் உள்ளதாகும்.

மவ்ளுவு, மத்ரூக் ஆகிய இரண்டுமே அடியோடு நிராகரிக்கப்படும் என்பதில் எந்த அறிஞரும் மாற்றுக் கருத்து கொள்ளவில்லை.

 

முன்கர், மஃரூஃப்

ஒரு அறிவிப்பாளர் வெறுக்கத்தக்க தவறிழைக்க கூடியவராகவோ, அல்லது அதிகம் கவனமற்றவராகவோ, பெரும்பாவங்கள் செய்பவராகவோ இருந்தால் அவருடைய அறிவிப்பு முன்கர் என்று கூறப்படும்.

இதற்கு பின்வரும் செய்தியை உதாரணமாகக் கூறலாம்.

“கனியாத பேரீத்தங்காயை சாப்பிடுங்கள். ஏனென்றால் ஆதமுடைய மகன் அதனைச் சாப்பிட்டால் ஷைத்தான் கோபம் கொள்கிறான்”

இந்தச் செய்தி நபியவர்கள் கூறியதாக இப்னுமாஜாவில் (3321) இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராக ”அபுஸ் ஸுகைர் யஹ்யா இப்னு முஹம்மது” என்பார் இடம் பெற்றுள்ளார். இந்தச் செய்தியை இமாம் நஸாயி அவர்கள் ”முன்கர் என்றும் இதனை அபுஸ் ஸுகைர் தனித்து அறிவிக்கிறார்” என்றும் குறை கூறியுள்ளார்கள்.

முன்கர் என்பதற்குப் பின்வருமாறும் விளக்கம் கூறப்படும்.

ஒரு ஆசிரியரிடமிருந்து கற்ற பல மாணவர்கள் ஒரு செய்தியை எப்படி அறிவிக்கின்றார்களோ அதற்கு முரணாக ஒரே ஒருவர் அறிவித்தால் அவர் நம்பகமானவராகவும் இருந்தால் அதை ஷாத் என்று அறிந்தோம். மற்றவர்களை விட உறுதி குறைந்தவராக, நினைவாற்றல் குறைவானவராக அந்த ஒருவர் இருந்து விட்டால் அது முன்கர் எனப்படும்.

ஒரு ஹதீஸ் பற்றி முன்கர் என்று கூறப்பட்டால் அதை அறிவிக்கும் ஒருவர் பலவீனமாக உள்ளார் என்பதும் அதற்கு மாற்றமாக அதே ஆசிரியர் வழியாக நம்பகமான மற்ற மாணவர்கள் அறிவித்துள்ளனர் என்பதும் பொருள்.

ஷாத் என்ற நிலையில் அமைந்த ஹதீஸ்களையே ஆதாரமாகக் கொள்வதில்லை எனும் போது முன்கர் என்ற நிலையில் அமைந்த ஹதீஸைப் பற்றி சொல்லத் தேவையில்லை.

முன்கர் என்ற நிலையில் இல்லாத ஹதீஸ்கள் மஃரூஃப் என்று கூறப்படும்.

அதாவது ஒரு ஆசிரியரிடமிருந்து ஐந்து மாணவர்கள் அறிவிக்கின்றனர். ஐவரில் நால்வர் அறிவிப்பதற்கு மாற்றமாக ஒருவர் மட்டும் அறிவிக்கின்றனர். அந்த நால்வர் நம்பகமானவர்களாக இருப்பது போல் இந்த ஒருவர் நம்பகமானவராக இல்லை என்றால் இந்த ஒருவர் அறிவிப்பது முன்கர் என்போம். அந்த நால்வர் அறிவிப்பது மஃரூஃப் என்போம். மஃரூஃப் என்பது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் ஒரு வகையாகும்.

இதற்கு பின்வரும் செய்தியை உதாரணமாகக் கூறலாம்.

“யார் தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தை நிறைவேற்றி, ஹஜ் செய்து, நோன்பு நோற்று, இன்னும் விருந்தினரை உபசரிக்கின்றாரோ அவர் சுவனம் புகுவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: அல் முஃஜமுல் கபீர் (12692)

இந்த செய்தியை அபூ இஸ்ஹாக் என்பாரிடமிருந்து ”ஹுபைய்யிப் இப்னு ஹபீப் அஸ்ஸய்யாத்” என்பார் மட்டுமே நபியவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார். இவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார். ஆனால் மற்ற நம்பகமானவர்கள் அபூ இஸ்ஹாக் வழியாக இப்னு அப்பாஸின் சொந்தக் கூற்றாகவே அறிவிக்கின்றனர். எனவே நம்பகமானவர்களுக்கு முரணாக பலவீனமானவர் அறிவிப்பதினால் இந்தச் செய்திக்கு ”முன்கர்” என்றும் நம்பகமானவர்களின் அறிவிப்பு ”மஃரூஃப்” என்றும் கூறப்படும்.

 

அல்மசீது ஃபீ முத்தஸிலில் அஸானித்

(முறிவில்லாத அறிவிப்பாளர் தொடரில் அறிவிப்பாளர்களை அதிகப்படுத்தி அறிவித்தல் )

ஒரு ஹதீஸ் குறிப்பிட்ட அறிவிப்பாளர் தொடரில் அறிவிக்கப்பட்டிருக்கும். அந்த அறிவிப்பாளர் தொடர் முறிவில்லாத அறிவிப்பாளர் தொடராகவும் இருக்கும். இந்நிலையில் மற்றொரு அறிவிப்பாளர் அதே செய்தியை அறிவிப்பாளர்களை அதிகப்படுத்தி அறிவிப்பார். இத்தகைய செய்திக்குத்தான் ”அல்மசீது ஃபீ முத்தஸிலில் அஸானீத்” என்று கூறப்படும்.

இதற்கு பின் வரும் ஹதீஸை உதாரணமாகக் கூறலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மண்ணறைகளின் மீது அமராதீர்கள், இன்னும் அதை நோக்கித் தொழாதீர்கள்.

நூல்: முஸ்லிம் (1613), திர்மிதி (971)

இந்த ஹதீஸ் முஸ்லிமுடைய அறிவிப்பில் பின்வரும் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ளது.

1. அபூ மர்ஸதில் கனவீ (ரலி) 2. வாஸிலா இப்னு அஸ்கஃ 3. புஸ்ர் இப்னு உபைதில்லாஹ் 4. இப்னு ஜாபிர் 5. அல்வலீத் இப்னு முஸ்லிம் 6. அலி இப்னு ஹுஜ்ர்.

மேற்கண்ட முஸ்லிமுடைய அறிவிப்பில் வாஸிலா என்ற அறிவிப்பாளரின் மாணவராக புஸ்ர் இப்னு உபைதுல்லாஹ் இடம் பெற்றுள்ளார்.

ஆனால் இதே செய்திக்கான திர்மிதியின் அறிவிப்பாளர் தொடரைக் காண்போம்.

1. அபூ மர்ஸதில் கனவீ (ரலி) 2. வாஸிலா இப்னு அஸ்கஃ 3.அபூ இத்ரீஸ் அல் ஹவ்லானீ 4. புஸ்ர் இப்னு உபைதில்லாஹ் 5. அப்துர் ரஹ்மான் இப்னு யஸீத் 6. அப்துல்லாஹ் இப்னு முபாரக்.

இந்த அறிவிப்பில் வாஸிலா என்பாரின் மாணவராக அபூ இத்ரீஸ் என்பார் இடம் பெற்றுள்ளார். அவரின் மாணவராகத்தான் புஸ்ர் இப்னு உபைதில்லாஹ் வருகின்றார்.

திர்மிதி உடைய அறிவிப்பில் அபூ இத்ரீஸ் என்ற அறிவிப்பாளர் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளார்.

இவ்வாறு “அபூ இத்ரீஸ்” என்ற அறிவிப்பாளரை அதிகப்படுத்தி அறிவிப்பவர் “இப்னுல் முபாரக்” என்ற அறிவிப்பாளர் ஆவார்.

இவரை விட மிக உறுதியான அறிவிப் பாளர்கள் அனைவரும் வாஸிலா உடைய மாணவராக புஸ்ர் இப்னு உபைதுல்லாஹ் என்பாரைத்தான் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் அதிகப்படியான அறிவிப்பாளர் வரும் அறிவிப்பு தவறான அறிவிப்பு என்றும், தவறிழைத்தவர் இப்னுல் முபாரக் என்பவர்தான் என்பதும் அறியப்படுகிறது.

 

அர்முர்ஸலுல் ஹஃபிய்யு

அதே நேரத்தில் மிக உறுதியான அறிவிப்பாளர் ஸனதில் ஒருவரை அதிகப்படுத்தி அறிவிக்கின்றார்.

அவரை விட நம்பகத் தன்மையில் குறைந்தவர் அதிகப்படியான அறிவிப்பாளர் இல்லாமல் அறிவிக்கின்றார். இந்நிலையில் நம்பகத் தன்மையில் குறைந்தவர் அறிவிக்கும் அறிவிப்பு வெளிப்படையில் எவ்வித குறைகளும் இல்லாவிட்டாலும் அறிவிப்பாளர் தொடர் முறிவடைந்த செய்தியாகவே கருதப்படும்.

நம்பகத்தன்மையில் குறைவானவரின் அறிவிப்பு முறிவுடையது என்பது அவரை விட உறுதியானவரின் அறிவிப்பை வைத்தே முடிவு செய்யப்படுகிறது. அறிவிப்பாளர் தொடரில் ஏற்பட்டுள்ள முறிவு மறைமுகமாக இருப்பதால் இது போன்ற குறைகளுக்கு ”அல்முர்ஸலுல் ஹஃபிய்யு” (மறைமுகமான முர்ஸல்) என்று கூறப்படும்.

மஜ்ஹுல் (யாரென அறியப்படாதவர்கள்)

ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் வரலாற்றுக் குறிப்பு இருக்க வேண்டும். அவ்வாறில்லாதவர்கள் மஜ்ஹுல் எனப்படுவர்.

இஸ்மாயீலின் மகன் ஈஸா என்பவர் அறிவித்ததாக நம்பகமானவர் கூறுகின்றார். நமது சக்திக்கு உட்பட்டு தேடிப் பார்த்தால் அப்படி ஒருவர் பற்றிய எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். இவர் மஜ்ஹுல் எனப்படுவார்.

அல்லது இப்படி ஒருவர் இருந்ததாகத் தெரிகின்றது. ஆனால் அவர் எப்போது பிறந்தார்? எப்போது மரணித்தார்? அவரது நம்பகத்தன்மை எத்தகையது? அவரது நினைவாற்றல் எப்படி? என்ற எந்த விபரமும் கிடைக்கவில்லை எனில் இவரும் மஜ்ஹுல் தான்.

ஒருவர் நம்பகமானவர் தானா? என்பதைத் தீர்மானிப்பதற்கு தேவையான தகவல் கிடைக்கப் பெறாத ஒவ்வொருவரும் மஜ்ஹுல் எனப்படுவர்.

இத்தகையோர் அறிவிக்கும் ஹதீஸ்களும் ஆதாரமாகக் கொள்ளப்படாது. இதன் அடிப்படையில் எந்தச் சட்டமும் எடுக்கப்படக் கூடாது.

 

பித்அத் – தவறான கொள்கை

நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு இஸ்லாம் என்ற பெயரில் உருவான காரியங்களே பித்அத் எனப்படும்.

ஹதீஸ்களை அறிவிக்கும் அறிவிப்பாளர் பித்அத்தான காரியங்களைச் செய்பவராக இருந்தால் அவருடைய ஹதீஸ்கள் எப்போது ஏற்கப்படும். எப்போது மறுக்கப்படும் என்பதை ஹதீஸ் கலை அறிஞர்கள் விளக்கியுள்ளனர்.

இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றும் பித்அத்தான காரியங்களைச் செய்யும் அறிவிப்பாளரின் அறிவிப்பு ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப்படாது.

ஒருவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றாத பித்அத்தான காரியங்களைச் செய்தால் அவருடைய அறிவிப்பு இரண்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏற்றுக் கொள்ளப்படும்.

1. அவர் தன்னுடைய பித்அத்தை நியாயப்படுத்தி அதன் பக்கம் மக்களை அழைப்பவராக இருக்கக் கூடாது. இவ்வாறு அழைப்பு விடுப்பவராக இருந்தால் அவருடைய எந்த அறிவிப்பும் ஏற்றுக் கொள்ளப்படாது.

2. தன்னுடைய பித்அத்துகளை நியாயப் படுத்தும் விதத்தில் அறிவிப்பவராக இருந்தால் அவருடைய அறிவிப்பு ஏற்றுக் கொள்ளப்படாது.