Tamil Bayan Points

2) சக்திக்கு ஏற்ப கடமை

நூல்கள்: இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

Last Updated on April 15, 2023 by

சக்திக்கு ஏற்ப கடமை

இஸ்லாம் மார்க்கம் மக்களுக்கு ஒரு வாழ்க்கை நெறியாக அமைந்துள்ளது. இந்த மார்க்கத்தின் கடமைகள் அனைத்தும், “சக்திக்கு அப்பாற்பட்ட சிரமம் இல்லை’ என்ற அடிப்படையிலேயே அமைந்துள்ளன.

அதாவது இஸ்லாம் கூறும் ஒரு கடமையை, செயலைச் செய்வதற்குப் போதிய சக்தி இல்லாத நிலையில் ஒருவர் அந்தக் கடமையைச் செய்யாவிட்டால் அவர் மீது குற்றம் ஏற்படாது. இதைத் திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் சுட்டிக் காட்டுகின்றது.

எவரையும் அவரது சக்திக்கு உட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.

அல்குர்ஆன் 2:286

திருக்குர்ஆனின் 2:233, 2:236, 5:6, 6:152, 7:42, 23:62, 65:7 ஆகிய வசனங்களிலும் இதே கருத்து கூறப்பட்டுள்ளது.

பின்வரும் ஹதீஸ் இது தொடர்பாக மேலும் விளக்கத்தைத் தருகின்றது.

“வானங்களில் உள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. உங்களுக்குள் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலோ, மறைத்துக் கொண்டாலோ அல்லாஹ் அது பற்றி உங்களை விசாரிப்பான்” எனும் (2:284) வசனம் அருளப்பட்ட போது மக்களின் உள்ளத்தில் முன்பு ஏற்பட்டிராத (கலக்கம்) ஒன்று ஏற்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள், “செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்; எங்களை ஒப்படைத்தோம் என்று நீங்கள் சொல்லுங்கள்” என்று கூறினார்கள்.

உடனே (மக்கள் அவ்வாறு செய்யவே) அவர்களது உள்ளத்தில் அல்லாஹ் நம்பிக்கையை ஊட்டினான். மேலும், “எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். அவர் செய்த நன்மை அவருக்குரியது. அவர் செய்த தீமையும் அவருக்குரியதே! “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதே!” (என்று பிரார்த்தியுங்கள்) எனும் (2:286) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 179

நாம் வாழ்கின்ற காலம், நாடு, பிரதேசம் ஆகியவற்றைப் பொறுத்து இஸ்லாத்தின் சில கட்டளைகளை நிறைவேற்ற முடியாமல் போகலாம். உண்மையிலேயே இயலாத போது அதைச் செய்யாவிட்டால் அல்லாஹ் கேள்வி ஏதும் கேட்க மாட்டான்.

அல்லது ஒருவரது உடல் நிலை, நோய், முதுமை போன்றவை காரணமாக சில கட்டளைகளைச் செயல்படுத்த முடியாமல் போகும். உண்மையாகவே அவருக்கு இயலவில்லை என்ற நிலையில் செயல்படுத்தாதிருந்தால் அவரை அல்லாஹ் குற்றம் பிடிக்க மாட்டான்.

இஸ்லாம் கூறும் அனைத்துச் சட்டங்களுக்கும், வணக்க வழிபாடுகளுக்கும் இது பொருந்தக் கூடியது என்பதால், இந்த மார்க்கத்திலுள்ள அனைத்துச் சட்டங்களும் எளிமையானவை என்பதற்கு இதுவே சிறந்த ஆதாரமாகும்.

நினைத்தாலே நன்மை! செய்தால் தான் தீமை!

மனித சுபாவம் தீமையின் பால் ஈர்க்கப்படும் தன்மையுடையதாக இருக்கிறது. ஓர் அழகிய பெண் நம் கண் முன்னே நகரும் போது எத்தனையோ தவறான எண்ணங்கள் அலைமோதி விட்டுச் செல்கின்றன. இப்படி மனித மனத்தில் தோன்றுபவை எல்லாம் பாவமாகப் பதியப்பட்டால் மனிதனின் கதி என்னவாகும்?

நம்முடைய மனம் எண்ணுகின்ற நல்லவற்றையும், தீயவற்றையும் கொஞ்சம் பட்டியல் போட்டுப் பார்த்தோம் என்றால் தீயவை தான் மிகைத்து நிற்கும். நரகத்திற்குச் செல்வதற்கு வேறெந்த தீமையான செயல்களும் தேவையில்லை. நமது உள்ளத்தில் தோன்றுகின்ற தவறான எண்ணங்களே போதும். இப்படிப்பட்ட மனித உள்ளத்தின் சுபாவத்தை நன்கு அறிந்த வல்ல நாயன் அளிக்கும் சலுகையைப் பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் (வானவர்களிடம்) கூறுகின்றான்: என் அடியான் ஒரு தீமையைச் செய்ய நாடினால் அதை அவன் செய்யாத வரை அவனுக்கெதிராக அதைப் பதிவு செய்யாதீர்கள். அதை அவன் செய்து விட்டால் செய்த குற்றத்தை மட்டுமே பதிவு செய்யுங்கள். அதை அவன் எனக்காக விட்டு விட்டால் அதை அவனுக்கு ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள். அவன் ஒரு நன்மை புரிய எண்ணி, அதைச் செய்யாவிட்டாலும் கூட அவனுக்கு ஒரு நன்மையை எழுதுங்கள். அதை அவன் செய்து விட்டாலோ அதை அவனுக்குப் பத்து நன்மைகளிலிருந்து எழுநூறு நன்மைகளாக எழுதுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூற்கள்: புகாரி 7501, முஸ்லிம் 183

மலக்குகளுக்கு அல்லாஹ் இடுகின்ற இந்தக் கட்டளை மனித சமுதாயத்தின் மன நிலையை அறிந்த மாபெரும் படைப்பாளனின் மகத்தான பேரருட்கொடையாகும்.

இத்தகைய எளிய மார்க்கத்தை அளித்த இறைவா உனக்கே புகழனைத்தும் என்று போற்றி நிற்போமாக!

இஸ்லாம் கொடிய மார்க்கமல்ல! எளிய மார்க்கமே!

தீவிரவாதம் என்றால் அது திருப்பி விடப்படுவது இஸ்லாத்தை நோக்கித் தான்! பயங்கரவாதம் என்றால் பார்க்கப்படுவது இஸ்லாம் தான்! சுருங்கக் கூறின் இஸ்லாம் ஒரு கொடிய மார்க்கம் என்று ஊடகங்கள் சித்தரித்துக் கொண்டிருக்கின்றன.

உண்மையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை உன்னிப்பாகக் கவனிப்பவர்கள் அறிந்து கொள்ளலாம்.

தொழுகைக்கான பள்ளிவாசலில் சிறுநீர் கழித்த ஒருவரிடம் நபி (ஸல்) அவர்கள் நடந்து கொண்ட விதத்தைப் பாருங்கள்.

ஒரு கிராமவாசி பள்ளிவாச-ல் சிறுநீர் கழித்து விட்டார். உடனே மக்கள் அவரைப் பிடித்தனர். நபி (ஸல்) அவர்கள், “அவரை விட்டு விடுங்கள். அவர் கழித்த சிறுநீர் மீது ஒரு வாளி தண்ணீரை ஊற்றி விடுங்கள். நீங்கள் நளினமாக எடுத்துச் சொல்லக் கூடியவர்களாக அனுப்பப்பட்டுள்ளீர்கள். கடினமாக எடுத்துச் சொல்பவர்களாக நீங்கள் அனுப்பப்படவில்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர-)

நூல்: புகாரி 220

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இங்கு எளிமையைப் போதிக்கிறார்கள்; இனிமையைப் போதிக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்த போது ஒரு மனிதர் தாறுமாறாக நடந்து கொள்கிறார். தொழுது முடித்ததும் தன்னை நபி (ஸல்) அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்க்கிறார். ஆனால் அவரது எதிர்பார்ப்புக்கு மாற்றமாக, நபியவர்களின் இதமான பேச்சில் தன்னையே பறி கொடுக்கிறார்; அன்னாரைப் பார்த்து பரவசப்பட்டு நிற்கிறார்.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருக்கும் போது கூட்டத்தில் ஒருவர் தும்மினார். உடனே நான், “யர்ஹமுகுமுல்லாஹ் – அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக’ என்று சொன்னேன். உடன் மக்கள் என் மீது தங்கள் பார்வைகளைச் செலுத்தினர். “(உங்கள்) தாய் தொலைந்து போகட்டும்! உங்கள் செய்தி என்ன? என்னையே பார்க்கிறீர்களே!” என்று நான் கேட்டேன். அதற்கு நபித்தோழர்கள் என்னை (கண்டிக்கும் விதமாக) தங்கள் தொடைகளில் கைகளால் அடித்துக் காட்டினர். அவர்கள் என்னைப் பேசாமல் இருக்கச் சொல்கிறார்கள் என்று அறிந்து மவுனமாகி விட்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் (கடுமையாகப் பிடிப்பார்கள் என்று நினைத்தேன்) என் தாயும் தந்தையும் அவர்களுக்கு அர்ப்பணமாகட்டும். அவர்களை விட அழகிய முறையில் போதிக்கும் ஓர் ஆசிரியரை அவர்களுக்கு முன்னரும் பின்னரும் நான் கண்டதே இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் என்னை அரற்றவில்லை; என்னை அடிக்கவில்லை; என்னை ஏசவுமில்லை. “நிச்சயமாக இது தொழுகை! இதில் மக்கள் பேச்சு எதுவும் பேசுதல் முறையாகாது. நிச்சயமாக தொழுகை என்பது இறைவனைத் துதித்தல், அவனைப் பெருமைப்படுத்துதல், குர்ஆன் ஓதுதல் ஆகியவை மட்டும் அடங்கியதாகும்” என்று கூறினார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

அறிவிப்பவர்: முஆவியா பின் ஹகம்(ர-)

நூல்: முஸ்-ம் 836

இங்கும் நபி (ஸல்) அவர்களின் எளிய அணுகுமுறையைக் கண்டு வியந்து நிற்கிறோம்.

“நபி (ஸல்) அவர்கள் மீது மரணம் உண்டாகட்டும்’ என்று யூதர்கள் தங்கள் வெறுப்பை அள்ளிக் கொட்டுகின்றனர். அந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் காட்டிய நளினமான, இனிய நடைமுறையைப் பாருங்கள்.

யூதர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அஸ்ஸாமு அலைக்கும் (உங்களுக்கு மரணம் நேரட்டும்)” என்று (முகமன்) கூறினர். உடனே நான், “(அது) உங்களுக்கு நேரட்டும். மேலும் அல்லாஹ் தனது கருணையிலிருந்து உங்களை அப்புறப்படுத்தி, உங்கள் மீது அல்லாஹ் கோபம் கொள்ளட்டும்” என்று (அவர்களுக்குப் பதில்) சொன்னேன். (அப்போது) நபி (ஸல்) அவர்கள், “ஆயிஷா! நிதானம்! நளினமாக நடந்து கொள். மேலும் வன்மையுடன் நடந்து கொள்வதிலிருந்தும் அருவருப்பாகப் பேசுவதிலிருந்தும் உன்னை நான் எச்சரிக்கிறேன்” என்று சொன்னார்கள்.

அப்போது நான், “அவர்கள் சொன்னதை நீங்கள் செவியேற்க வில்லையா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ கேட்கவில்லையா? (வஅலைக்கும் – அவ்வாறே உங்கள் மீது உண்டாகட்டும் என்று) அவர்களுக்கு நான் பதிலளித்து விட்டேன். அவர்களுக்காக நான் செய்த பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும். எனக்காக அவர்கள் செய்த பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப் படாது” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 6030

இப்போது சொல்லுங்கள்! இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா? அல்லது நற்குணங்களால் பரப்பப்பட்டதா? இஸ்லாம் ஒரு கொடிய மார்க்கமா? அல்லது எளிய மார்க்கமா? என்பதைப் புரிந்து கொள்ள இது போன்ற ஏராளமான சம்பவங்களை நபி (ஸல்) அவர்களின் வாழ்விலிருந்து நாம் எடுத்துக் காட்ட முடியும்.

கொலைக் குற்றத்திலும் ஓர் எளிய சலுகை

உலக நாடுகளிலுள்ள சட்டங்கள் அனைத்தும் கொலைக் குற்றத்திற்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை கொடுக்கின்றன. இந்தத் தண்டனையை அரசாங்கமே நிறைவேற்றுகின்றது.

ஆனால் இஸ்லாம் மார்க்கம் மட்டுமே இந்த உரிமையை பாதிக்கப் பட்டவர்களின் குடும்பத்தாரிடம் கொடுக்கின்றது. குற்றவாளியைத் தண்டிப்பதும், மன்னிப்பதும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தைப் பொறுத்தது என்று தெளிவாக அறிவித்து விடுகின்றது.

நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக (கொலை செய்த) சுதந்திரமானவன், அடிமைக்காக (கொலை செய்த) அடிமை, பெண்ணுக்காக (கொலை செய்த) பெண், என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காகப் பழி வாங்குவது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. கொலையாளிக்கு (கொல்லப் பட்டவனின் வாரிசாகிய) அவனது (கொள்கைச்) சகோதரன் மூலம் ஏதேனும் மன்னிக்கப்படுமானால் நல்ல விதமாக நடந்து அழகிய முறையில் (நஷ்ட ஈடு) அவனிடம் வழங்க வேண்டும். இது உங்கள் இறைவன் எளிதாக்கியதும், அருளுமாகும். இதன் பிறகு யாரேனும் வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.

அல்குர்ஆன் 2:178

இப்போது கொலையுண்டவரின் குடும்பத்தினர், கொலையாளியை மன்னித்து விட்டால், அதற்காக ஈட்டுத் தொகை வாங்கிக் கொண்டு விடுதலை செய்யச் சொல்கிறது. இதை இறைவன் நமக்கு எளிமையாக்கிய அருட்கொடை என்று கூறுகிறான்.

குற்றவியல் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்று உலகுக்கு உணர்த்தி நிற்கின்றது.