Tamil Bayan Points

ஜும்மா உரையில் கலீபாக்களின் பெயர் கூற வேண்டுமா?

கேள்வி-பதில்: பித்அத்

Last Updated on September 7, 2020 by

ஜும்மா உரையில் அபூபக்ர், உமர், உஸ்மான், அலி ஆகிய நபித்தோழர்களின் பெயர்களைக் கூறி துஆச் செய்வது நபிவழியா?

அபூபக்ர் (ரலி) உள்ளிட்ட நான்கு கலீபாக்களின் பெயர்களையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முஸ்லிம் உறவினர்களின் பெயர்களையும் வாசித்து வாரம் தோறும் குத்பாவில் துஆச் செய்யும் வழக்கம் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் இருக்கவில்லை. இருந்திருக்கவும் முடியாது.

மேற்கண்ட தோழர்கள் கலீபாக்களாக நியமிக்கப்பட்ட காலத்திலும் இப்படி ஒரு நடைமுறை அவர்களால் அமுல்படுத்தப்படவில்லை. மிகவும் பிற்காலத்தில் வந்தவர்கள் தான் இப்படி ஒரு வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

ஜும்மா உரையில் நபித்தோழர்களின் வரலாறைக் கூற நேர்ந்தால் அவர்கள் பெயரைக் குறிப்பிடும் போது அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொள்வானாக என்று துஆச் செய்யலாம். ஆனால் ஒவ்வொரு வாரமும் அந்த நபித்தோழர்களின் பெயர்களைக் குறிப்பிட்டே ஆக வேண்டும் என்பதும், அவர்களுக்காக துஆச் செய்வதும் ஜும்மாவின் விதிமுறைகளில் ஒன்றாகும் என்ற நிலையை ஏற்படுத்துவது பித்அத்தாகும். இது பாவமான செயலாகும். இதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

இன்றைக்கு சுன்னத் வல் ஜமாஅத் என்று சொல்லிக் கொள்பவர்கள் மக்களுக்குப் புரியாத அரபு பாஷையில் ஒவ்வொரு ஜும்ஆவிலும் இதை மந்திரமாக ஓதிவருகின்றனர்.

இதை ஒவ்வொரு ஜும்ஆவிலும் ஓத வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை. நபி (ஸல்) அவர்கள் ஆற்றிய உரையில் இது போன்று ஒரு தடவை சொன்னதாகக் கூட சான்றுகள் இல்லை. எனவே இது மார்க்கத்தில் இல்லாத பித்அத்தாகும்.