திருக்குர்ஆன் பார்வையில் உணவு!
பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்Last Updated on September 16, 2023 by Trichy Farook
உணவு ஓர் அருட்கொடை:
உலகை படைத்து பரிபாலித்து பாதுகாத்து வரும் அல்லாஹ் மனித குலத்திற்கு இவ்வுலகில் இன்புற்று வாழ ஏராளமான அருட்கொடைகளை வாரி வழங்கியுள்ளான். அவன் வழங்கிய அருட்கொடைகளில் அடிப்படையானது மனிதன் உயிர் வாழ தேவையான உணவாகும்.
இவ்வுலகில் வாழக்கூடிய அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான உணவு வளங்களை ஏற்கனவே அவர்களுக்காக இப்பூமியில் ஏற்படுத்தியிருப்பதாக இறைவன் கூறுகிறான். உயிரினங்களில் யாரும் நமது உணவுகளை ஏற்பாடு செய்துகொண்டு பிறப்பதில்லை.
உதாரணத்திற்கு மீன் வகைகளில் ஒன்றான திமிங்கலம் ஒரு நாளைக்கு 32 டன்(3200 கிலோ) எடை அளவிற்கான மீன்களை தனது உணவாக உட்கொள்கிறது. அப்படியென்றால் எத்துனை கோடி உயரினங்களுக்கு அல்லாஹ் உணவளிக்கின்றான் என்று சிந்தித்தால் அல்லாஹ்வின் வல்லமை எளிதாக விளங்கும்.
எத்தனையோ உயிரினங்கள் தமது உணவைச் சுமந்து செல்வதில்லை. அல்லாஹ்வே அவற்றுக்கும், உங்களுக்கும் உணவளிக்கிறான். அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.
மனித வாழ்வின் அனைத்து தேவைகளுக்கும் தனது திருமறையின் மூலம் வழிகாட்டும் அல்லாஹ் “உணவு” குறித்தும் அதை எவ்வாறு தனது வல்லமையால் உற்பத்தி செய்கிறான் என்றும், நாம் எவ்வாறு அதை பயன்படுத்த வேண்டும், எதை உண்ண வேண்டும், எதனை உண்ணக்கூடாது என ஒவ்வொன்றையும் நமது நலன் கருதி பாகுபடுத்தி திருமறையில் எராளமான வசனங்களில் விவரிக்கின்றான்.
நீரின்றி அமையாது உலகு:
எந்த உணவு பொருள்களாக இருந்தாலும் அது உற்பத்தியாவதற்கு மிக முக்கிய ஆதாரம் “மழையாகும்”. இறைவனின் கருணையாம் மழை எனும் இவ்வருட்கொடை மட்டும் இல்லையென்றால் உலகில் எந்த உயிரும் வாழ முடியாது. மேலும் நிலத்தில் விளையும் அனைத்து விளைச்சல்களுக்கும் மழை நீரே ஆதாரமாகும். இது குறித்து அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்:
இரவு பகல் மாறி மாறி வருவதிலும் வானத்திலிருந்து அல்லாஹ் மழை செல்வத்தை இறக்கியதிலும், பூமி வறண்ட பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுவதிலும், காற்றுகளைத் திருப்பிவிடுவதிலும் விளங்கும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.
அவனே பூமியை உங்களுக்குத் தொட்டிலாக அமைத்தான். உங்களுக்காக அதில் பாதைகளை எளிதாக்கினான் வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி, அதன்மூலம் பல தரப்பட்ட தாவரங்களை ஜோடிகளாக வெளிப்படுத்தினோம்.
பல்வகை உணவுகள்:
மனிதனின் விருப்பத்தை அறிந்த அல்லாஹ் ஒரே விதமான உணவுவை ருசித்து சளித்து விடாமல் இருப்பதற்கு பல்வேறு உணவு வகைகளை பல சுவைகளில் ருசித்து இன்புற தானியங்களையும் கனிகளையும் படைத்திருப்பாதாக கூறுகிறான்.
படரவிடப்பட்ட, படரவிடப்படாத தோட்டங்களையும், பேரீச்சை மரங்களையும், மாறுபட்ட உணவான தானியங்களையும், (தோற்றத்தில்) ஒன்றுபட்டும் (தன்மையில்) வேறுபட்டும் உள்ள மாதுளை மற்றும் ஒலிவ மரங்களையும் அவனே படைத்தான். அவை பலன் தரும்போது அதன் பலனை உண்ணுங்கள்! அதை அறுவடை செய்யும் நாளில் அதற்குரிய (ஸகாத் எனும்) கடமையை வழங்கி விடுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான்.
பூமியில் அருகருகில் அமைந்த பல பகுதிகள் உள்ளன. திராட்சைத் தோட்டங்களும், பயிர்களும், கிளைகளுடையதும் கிளைகளே இல்லாததுமான பேரீச்சை மரங்களும் உள்ளன. ஒரே தண்ணீர் தான் அவற்றுக்குப் புகட்டப்படுகின்றது. (இவ்வாறு இருந்தும்) சுவையில் ஒன்றை விட மற்றொன்றைச் சிறந்ததாக்கியுள்ளோம். விளங்கும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
மனித சமுதாயத்தை படைத்த அல்லாஹ் மனிதன் ஒரே விதமான தாவர உணவை மட்டும் உண்ணாமல் இறைச்சியையும் உண்டு மகிழுவும் அதை செரிக்கும் விதமாக உடல் அமைப்பை கொண்டு மனிதனை படைத்துள்ளான்.
கடலிலிருந்து பசுமையான இறைச்சியை நீங்கள் உண்பதற்காகவும், அணிந்து கொள்ளும் நகையை நீங்கள் அதிலிருந்து வெளிப்படுத்திடவும், அவனது அருளைத் தேடவும், நீங்கள் நன்றி செலுத்திடவும் கடலை உங்களுக்கு அவனே பயன்படச் செய்தான். கப்பல்கள் அதைக் கிழித்துச் செல்வதை நீர் பார்க்கிறீர்!
தடை செய்யப்பட்ட உணவுகள்:
எண்ணற்ற உணவுகளை உண்பதற்கு அனுமதிக்கும் அல்லாஹ் மனிதனுடைய நலனுக்காக சில உணவுகளை உண்பதற்கு தடை விதிக்கிறான்.
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. கழுத்து நெரிக்கப்பட்டவை, அடிபட்டவை, (மேட்டிலிருந்து) உருண்டு விழுந்தவை, (தமக்கிடையே) மோதிக்கொண்டவை, வனவிலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடைசெய்யப்பட்டுள்ளன.) பலி பீடங்களில்அறுக்கப்பட்டவையும், அம்புகள் மூலம் குறி கேட்பதும் (உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.) இவை குற்றமாகும்.
விலங்குகளின் இறைச்சியோ, பறவைகளின் இறைச்சியோ அவைகளை மனிதன் உண்ணும் போது அவற்றை அறுத்து அவைகளின் உடலில் இருந்து முழவதுமாக இரத்தம் வெளியேறிய பிறகு மனிதன் உண்ணும் போது இரத்தத்தில் உள்ள அனைத்து விதமான கெட்ட கிருமிகளும் வெளியேறி சுத்தமான இறைச்சியை மனிதன் உண்ணுகிறான்.
இன்றைய அறிவியல் கூட அறுத்த விலங்குகளின், பறவைகளின் இரத்தம் முழவதும் வெளியேறி மாமிசங்கள் சுத்தமாகிறது என்று கூறுகிறது. ஆனால் 1400 வருடங்களுக்கு முன்பே அல்லாஹ் இறந்த, தாமாக செத்தவற்றை உண்ண வேண்டாம் அது மனிதனுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்.
அதுபோல பறவைகளின், விலங்குகளின் இரத்ததை உண்ண இஸ்லாம் தடை செய்கிறது. இரத்தத்தை மனிதன் சமைத்து உண்டால் பல்வேறு விதமான நோய்கள் உருவாகும் என்ற காரணத்தினால் தான் அல்லாஹ் தனது திருமறையில் தடை செய்கிறான். இன்றைய அறிவியலும் இதையே ஆய்வு செய்து கூறுகிறது.
அதே போல பன்றியின் இறைச்சியை உண்ண அல்லாஹ் தடை செய்துள்ளான். இன்றைய அறிவியல் உலகம் பன்றி இறைச்சியை உண்டால் அதில் உள்ள நாடப்புழுக்கள் மனிதனுடைய உடலில் பல்வேறு நோய் பாதிப்புகளை உண்டாக்கும் என்று எச்சரிக்கை செய்கிறது.
எல்லாவற்றையும் படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கு, மனிதன் எந்த உணவை உண்ண வேண்டும், எதை அவன் தவிர்க்க வேண்டும் என்பது தெரியும். அவற்றையே அவனது வேதமான திருக்குர்ஆனில் வலியுறுத்துகிறான்.
உணவுகளை வீணாக்க வேண்டாம்:
இன்று உலகில் பல நாடுகளில் மக்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் நிலையில் இன்னும் சில நாடுகளில் அதிமான உணவுகளை தங்களுக்கு என்று சேமித்து வைத்து அடுத்தவர்களுக்கு கொடுக்காமலும் வீண்விரயம் செய்து வருகின்றனர்.
இறைவன் கொடுத்த அருட்கொடையான உணவை மனிதனின் தேவைக்கு ஏற்ப எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் உணவை ஒரு போதும் வீணாக்க கூடாது என்பதையும் அல்லாஹ் தனது திருமறையில் எச்சரிக்கை செய்கிறான்.
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்கள் அலங்காரத்தைச் செய்து கொள்ளுங்கள்! உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.
இப்படி பல்வேறு விதமான உணவுகளை அல்லாஹ் மனிதனுக்கு வழங்கி தன் அருட்கொடைகளை பொழிகிறான். ஆனால் மனிதனோ எல்லாமே இயற்கையாகவே உற்பத்தியாகிறது என்று கூறி தன் இறைவனுக்கு நன்றி செலுத்த மறுக்கிறான். எனவே உணவு எனும் அருட்கொடை உலக மக்களின் பொதுவுடமை என்பதை உணர்ந்து அதை தேவைக்கேற்ப உண்டு தேவையுடையோருக்கும் கொடுத்து பொதுநலன் போற்றும் மக்களாக வாழ்வோமாக!