பிஸ்மில்லாஹ் என்று மட்டும் சொல்லலாமா?
கேள்வி-பதில்: இதர சட்டங்கள்Last Updated on March 30, 2018 by
பிஸ்மில்லாஹ் என்று மட்டும் சொல்லலாமா?
சொல்லலாம்.
திருக்குர்ஆனைத் துவக்குவ்தற்கு அல்லாஹ் கற்றுத்தந்த படி பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று கூறினாலும் அதுவும் சரிதான். பிஸ்மில்லாஹ் என்று மட்டும் கூறினாலும் சரிதான்.
முதல் சொற்றொடரில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதுடன் அவனது இரண்டு பண்புகளையும் சேர்த்துக் கூறி புகழ்வதும் அடங்கியுள்ளது. இரண்டாவது சொற்றொடரில் அல்லாஹ்வின் பெயரைக் கூறி துவங்குதல் மட்டும் உள்ளது.
உமர் பின் அபீ ஸலமா (ரலி) அவர்கள் கூறியதாவது “நான் நபி (ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத் தட்டில் (இங்கும் அங்குமாக) அளாவிக் கொண்டிருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல்! உன் வலக் கரத்தால் சாப்பிடு! உனது கைக்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்துச் சாப்பிடு” என்று சொன்னார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது.
நூல் : புகாரி 5376
அல்லாஹ்வின் பெயரைக் கூறு என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பொதுவாக சொல்லி உள்ளதால் பிஸ்மில்லாஹ் என்று மட்டும் கூறினாலும் அந்தக் கட்டளைக்கு செயல் வடிவம் கிடைத்து விடும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் பெயர் கூறப்படாத உணவை ஷைத்தான் ஆகுமாக்கிக் கொள்கிறான்.
அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)
நூல்: முஸ்லிம் 4105
அல்லாஹ்வின் பெயரைக் கூற வேண்டும் என்பதே நபி (ஸல்) அவர்களின் உத்தரவு. நாம் பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால்) என்று கூறிவிட்டால் இந்த உத்தரவைச் செயல்படுத்தி விடுகின்றோம்.
பின்வரும் செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹ் என்ற வார்த்தையை மட்டும் கூறியுள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
“உங்களில் ஒருவர் உணவு சாப்பிட (ஆரம்பிக்கும்) போது பிஸ்மில்லாஹ் என்று கூறட்டும். ஆரம்பத்தில் (பிஸ்மில்லாஹ்) கூற மறந்து விட்டால் “பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வ ஆகிரிஹி” என்று கூறட்டும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: திர்மிதி 1781
சுலைமான் நபி அவர்கள் கடிதம் எழுதும் போது பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று கூறியதாக 27:30 வசனத்தில் அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான். நூஹ் நபி அவர்கள் கப்பலில் ஏறும் போது பிஸ்மில்லாஹ் என்று மட்டும் சொன்னதாக 11:41 வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்.
எனவே இரண்டும் மார்க்கத்தில் உள்ள வழிமுறை தான்