Tamil Bayan Points

09) புகாரியின் பிரதிகளில் உள்ள கருத்து வேறுபாடுகள்

முக்கிய குறிப்புகள்: ஹதீஸ் கலை

Last Updated on March 23, 2022 by Trichy Farook

புகாரியின் பிரதிகளில் உள்ள கருத்து வேறுபாடுகள்

புகாரி இமாமின் மாணவரான முஹம்மத் பின் யூசுஃப் அல்ஃபரப்ரீ என்பவரிடமிருந்து பல மாணவர்கள் புகாரி நூலைப் பிரதி எடுத்துள்ளனர். அவர்களில் பின்வரும் மாணவர்கள் முக்கியமானவர்கள்.

இப்ராஹீம் பின் அஹ்மத் அல்முஸ்தம்லீ

அப்துல்லாஹ் பின் அஹ்மத் அல்ஹமவீ

முஹம்மத் பின் மக்கீ குஷ்மீஹனீ

அபூ அலீ அஷ்ஷப்பூவீ

இப்னு ஸகன் அல் பஸ்ஸார்

அபூ ஸைத் அல்மரூஸீ

அபூஅஹ்மத் அல்ஜுர்ஜானீ

இவர்களிடம் இருந்த பிரதிகளில் சில கூடுதல் குறைவான செய்திகளும் வாசக மாற்றங்கள் இருந்துள்ளன. இவை மிக குறைவானதே. ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் புகாரியின் விரிவுரை நூலான ஃபத்ஹுல் பாரியில் பல இடங்களில் இதை சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

فتح الباري – ابن حجر – (1 / 8)

أن رواية أبي إسحاق المستملى ورواية أبي محمد السرخسي ورواية أبي الهيثم الكشمهينى ورواية أبي زيد المروزي مختلفة بالتقديم والتأخير مع إنهم انتسخوا من أصل واحد

அபூஇஸ்ஹாக் அல்முஸ்தம்லீ அவர்களின் அறிவிப்பும், அபீ முஹம்மத் அஸ்ஸர்கஸீ அவர்களின் அறிவிப்பும், அபில் ஹைஸம் அல்குஷ்மீஹனீ அவர்களின் அறிவிப்பும், அபீ ஸைத் அல்மரூஸீ அவர்களின் அறிவிப்பும் முன் பின் வார்த்தைகள் இடம்பெற்று மாறுபட்டு உள்ளது. இவர்கள் அனைவரும் ஒரு பிரதியிலிருந்துதான் காப்பி எடுத்துள்ளார்கள்.

(பத்ஹுல் பாரி, பாகம் 1, பக்கம் 8)

வார்த்தையில் கூடுதல் குறைவு

புகாரியின் பிரதிகளில் சில பிரதிகளில் சில வார்த்தைகள் கூடுதலாகவும் சில பிரதிகளில் குறைவாகவும், வேறு சில வார்த்தைகளாகவும் இடம்பெற்றுள்ளன. சில வார்த்தைகள் முற்றிலும் இல்லாமலும் இடம்பெற்றுள்ளன. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

فتح الباري – ابن حجر – (1 / 36)

قوله ولا تشركوا به شيئا وسقط من رواية المستملى الواو فيكون تأكيدا لقوله وحده

புகாரி 7ஆவது ஹதீஸ் இடம்பெறும் செய்தியில் وَلاَ تُشْرِكُوا بِهِ شَيْئًا என்ற வார்த்தையின் முதலில் உள்ள வாவ் என்ற சொல் முஸ்தம்லீ அவர்களின் அறிவிப்பில் இடம்பெறவில்லை.

(பத்ஹுல் பாரி, பாகம் 1, பக்கம் 8)

الباري – ابن حجر – (1 / 41)

وفي رواية الكشميهني سقف بكسر القاف على ما لم يسم فاعله وفي رواية المستملى

புகாரி 7ஆவது ஹதீஸ் இடம்பெறும் செய்தியில்

وَكَانَ ابْنُ النَّاظُورِ صَاحِبُ إِيلِيَاءَ وَهِرَقْلَ سُقُفًّا عَلَى نَصَارَى

என்ற வாசகத்தில் இடம்பெறும் ஸுகுஃபன் என்ற சொல், முஸ்தம்லீ அறிவிப்பில் ஸுகுஃபுன் என்று இடம் பெற்றுள்ளது.

(பத்ஹுல் பாரி, பாகம் 1, பக்கம் 41)

فتح الباري – ابن حجر – (1 / 43)

قوله فأذن هي بالقصر من الإذن وفي رواية المستملى وغيره بالمد ومعناه أعلم

புகாரி 7ஆவது ஹதீஸில் இடம்பெறும் செய்தியில்

فَأَذِنَ هِرَقْلُ لِعُظَمَاءِ الرُّومِ

என்ற வாசகத்தில் இடம்பெறும் அதின என்ற சொல், முஸ்தம்லீ அறிவிப்பில் ஆதன என்று இடம் பெற்றுள்ளது.

(பத்ஹுல் பாரி, பாகம் 1, பக்கம் 43)

فتح الباري – ابن حجر – (1 / 140)

قوله كتاب العلم بسم الله الرحمن الرحيم باب فضل العلم هكذا في رواية الأصيلي وكريمة وغيرهما وفي رواية أبي ذر تقديم البسملة

புகாரியின் கல்வி என்ற அத்தியாயத்திற்கு பிறகு பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று அஸீலீ, கரீமா ஆகியோர் அறிவிப்பிலும் அவரல்லாதோர் அறிவிப்பிலும் இடம்பெற்றுள்ளது. அபூதர் அவர்களின் அறிவிப்பில் கல்வி அத்தியாயத்தின் ஆரம்பத்திலேயே பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று இடம்பெற்றுள்ளது.

(பத்ஹுல் பாரி, பாகம் 1, பக்கம் 140)

فتح الباري – ابن حجر – (1 / 158)

قوله أي يوم هذا سقط من رواية المستملى والحموي السؤال عن الشهر

புகாரி 7ஆவது ஹதீஸ் இடம்பெறும் செய்தியில் ‘‘இது எந்த மாதம்” என்ற வாசகம் அல்முஸ்தம்லீ, அல்ஹமவீ ஆகியோர் அறிவிப்பில் இடம்பெறவில்லை.

(பத்ஹுல் பாரி, பாகம் 1, பக்கம் 158)

فتح الباري – ابن حجر – (2 / 553)

وكان بن عمر يسجد على غير وضوء كذا للأكثر وفي رواية الأصيلي بحذف غير

புகாரி ஜும்ஆ அத்தியாயம், இணை வைப்பவர்களுடன் முஸ்லிம்கள் ஸஜ்தா செய்தல் என்ற பாடத்தில் இப்னு உமர் (ரலி) அவர்கள் உளு இல்லாமல் ஸஜ்தா செய்வார்கள் என்று அதிகமான அறிவிப்புகளில் இடம்பெற்றுள்ளது. ஆனால் அஸீலீ அவர்களின் அறிவிப்பில் கைர்  இல்லாமல் என்ற வாசகம் இடம்பெறாமல் உள்ளது. (உளுவுடன் ஸஜ்தா செய்வார்கள் என்று இடம்பெற்றுள்ளது.)

(பத்ஹுல் பாரி, பாகம் 2, பக்கம் 553)

فتح الباري – ابن حجر – (13 / 62)

 ( قوله باب قول النبي صلى الله عليه و سلم للحسن بن علي ان ابني هذا لسيد )

 في رواية المروزي والكشميهني سيد بغير لام

புகாரியின்

ان ابني هذا لسيد

என்ற வாசகத்தில் ல ஸய்யிதுன் என்ற வாசகத்தில் இடம்பெறும் ல என்ற சொல் மரூஸீ அறிவிப்பில் இடம்பெறவில்லை.

(பத்ஹுல் பாரி, பாகம் 13, பக்கம் 62)

فتح الباري – ابن حجر – (3 / 620)

قوله إذا بلغ المدينة في رواية السرخسي إذا دخل

புகாரி ஹஜ் அத்தியாயம், மதீனாவை அடைந்ததும் இரவு நேரத்தில் வீட்டிற்குச் செல்லக்கூடாது என்ற (16வது) பாடத்தில் இடம்பெறும் வாசகத்தில் ‘பலக’ (அடைந்ததும்) என்ற சொல்லுக்கு பதிலாக ‘தகல’ (நுழைந்ததும்) என்ற வாசகம் ஸர்கஸீ அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.

(பத்ஹுல் பாரி, பாகம் 13, பக்கம் 620)

(فتح الباري – ابن حجر – (1 / 466

قوله يوم العيدين وفي رواية المستملى والكشميهني يوم العيد بالافراد

புகாரி 351ஆவது ஹதீஸில் இரண்டு பெருநாள் என்ற வரும் இடத்தில் முஸ்தம்லீ, குஷ்மீஹனீ அறிவிப்புகளில் பெருநாள் என்று ஒருமையாக இடம்பெற்றுள்ளது.

(பத்ஹுல் பாரி, பாகம் 1, பக்கம் 466)

فتح الباري – ابن حجر – (8 / 113)

قوله غزوت مع رسول الله صلى الله عليه و سلم العسرة كذا للأكثر وفي رواية السرخسي العسيرة بالتصغير

புகாரி 4417ஆவது ஹதீஸில் உஸ்ரா என்று அதிகமானோர் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது. ஸர்கஸீ அறிவிப்பில் உஸைரா என்று இடம்பெற்றுள்ளது.

(பத்ஹுல் பாரி, பாகம் 8, பக்கம் 113)

فتح الباري – ابن حجر – (2 / 107)

 599 – قوله في حديث أنس كان المؤذن إذا أذن في رواية الإسماعيلي إذا أخذ المؤذن في أذان المغرب

புகாரி 625 ஹதீஸில் ‘‘தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) பாங்கு சொல்லத் தொடங்கி” என்ற வாசகத்திற்கு பதிலாக இஸ்மாயீலியின் அறிவிப்பில் ‘‘மஃரிப் தொழுகையின் பாங்கிற்கு முஅத்தின் (பாங்கு) சொல்லும் போது” என்று இடம்பெற்றுள்ளது.

(பத்ஹுல் பாரி, பாகம் 8, பக்கம் 113)

فتح الباري – ابن حجر – (1 / 28)

قوله فقلت زملوني زملوني وفي رواية الأصيلي وكريمة زملوني مرة واحدة

புகாரி 4ஆவது ஹதீஸில் ‘‘என்னைப் போர்த்துங்கள், என்னைப் போர்த்துங்கள்’’ என்ற இடம்பெற்றுள்ளது. அஸீலீ, கரீமா அறிவிப்பில் ‘‘என்னைப் போர்த்துங்கள்’’ என்று ஒரு தடவை இடம்பெற்றுள்ளது.

(பத்ஹுல் பாரி, பாகம் 1, பக்கம் 28)

فتح الباري – ابن حجر – (1 / 64)

( قوله باب كذا )  هو في روايتنا بلا ترجمة وسقط من رواية الأصيلي أصلا

(புகாரி, தயம்மும் அத்தியாயம், பாடம் எண் 9ல்) பாடம் என்று மட்டும் இடம்பெற்றுளள்ளது. அதன் கீழ் எந்த கருத்தும் இடம்பெறவில்லை. அஸீலீ அவர்களின் அறிவிப்பில் பாடம் என்ற வாசகம்கூட இடம்பெறவில்லை.

(பத்ஹுல் பாரி, பாகம் 1, பக்கம் 64)

فتح الباري – ابن حجر – (6 / 271)

قوله أخرجوا المشركين من جزيرة العرب ووقع في رواية الجرجاني أخرجوا اليهود والأول أثبت

புகாரி 3168வது அறிவிப்பில் ‘‘இணைவைப்பவர்களை அரபு தீப கற்பத்திலிருந்து வெளியேற்றி விடுங்கள்”  என்ற வாசகத்தில் இணைவைப்பவர்கள் என்ற இடத்தில் ஜுர்ஜானீ அறிவிப்பில் யூதர்கள் என்று இடம்பெற்றுள்ளது.

(பத்ஹுல் பாரி, பாகம் 6, பக்கம் 271)

(فتح الباري – ابن حجر – (8 / 538

قوله على لسان الساحر أو الكاهن في رواية الجرجاني على لسان الآخر بدل الساحر وهو تصحيف

புகாரி 4800வது அறிவிப்பில் ‘‘இறுதியில் (கேட்டவர்) சூனியக்காரனின் அல்லது குறி சொல்பவனின் நாவில் போட்டுவிடுகின்றார்கள்” என்ற வாசகத்தில் உள்ள சூனியக்காரர் என்ற இடத்தில் மற்றொருவர் என்று ஜுர்ஜானீ அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.

 (பத்ஹுல் பாரி, பாகம் 8, பக்கம் 538)

அறிவிப்பாளர் பெயர்களில் மாற்றம்

புகாரியின் பிரதிகளில் சில பிரதிகளில் பெயர்களில் மாற்றமாக இடம்பெற்றுள்ளது. தந்தை பெயர், இயற்பெயர் என்று சில மாற்றமாக இடம்பெறுகிறது. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

فتح الباري – ابن حجر – (1 / 96)

 – قوله حدثنا عمرو بن خالد هو بفتح العين وسكون الميم وهو أبو الحسن الحراني نزيل مصر أحد الثقات الاثبات وفي رواية أبي ذر عن الكشميهني عمر بن خالد بضم العين وفتح الميم وهو تصحيف نبه عليه من القدماء أبو على الغساني وليس في شيوخ البخاري من اسمه عمر بن خالد

புகாரி 40வது ஹதீஸ் இடம்பெறும் அம்ர் பின் காலித் என்ற அறிவிப்பாளருக்கு மாற்றமாக உமர் பின் காலித் என்று குஷ்மீஹனீ அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.

(பத்ஹுல் பாரி, பாகம் 1, பக்கம் 96)

فتح الباري – ابن حجر – (8 / 319)

قوله قال أبو هريرة فأذن معنا على كذا للآكثر وفي رواية الكشميهني وحده قال أبو بكر فأذن معنا وهو غلط فاحش مخالف لرواية الجميع وإنما هو كلام أبي هريرة قطعا فهو الذي كان يؤذن بذلك

புகாரியின் 4656வது ஹதீஸில் அலீ (ரலி) அவர்கள் அறிவிப்புச் செய்தார்கள் என்ற செய்தியை அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்கள் என்று அதிகமானவர்களின் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது. ஆனால் குஷ்மீஹனீ அறிவிப்பில் மட்டும் அபூபக்ர் அறிவித்ததாக இடம்பெற்றுள்ளது.

(பத்ஹுல் பாரி, பாகம் 8, பக்கம் 319)

فتح الباري – ابن حجر – (1 / 244)

قوله عن عبيد الله بالتصغير بن أبي يزيد مكي ثقة لا يعرف اسم أبيه ووقع في رواية الكشميهني بن أبي زائدة وهو غلط

புகாரி 143வது ஹதீஸில் உபைதுல்லாஹ் பின் அபீ யஸீத் என்ற அறிவிப்பாளர் இடம்பெறுகிறார். குஷ்மீஹனீ அறிவிப்பில் அபீ யஸீத் என்பதற்கு பதிலாக அபீ ஸாயிதா என்று இடம்பெற்றுள்ளது.

(பத்ஹுல் பாரி, பாகம் 1, பக்கம் 244)

فتح الباري – ابن حجر – (1 / 333)

قوله عمرو بن ميمون الجزري كذا للجمهور وهو الصواب وهو بفتح الجيم والزاي بعدها راء منسوب إلى الجزيرة وكان ميمون بن مهران والد عمرو نزلها فنسب إليها ولده ووقع في رواية الكشميهني وحده الجوزي بواو ساكنة بعدها زاى وهو غلط

புகாரி 229 அறிவிப்பில் இடம்பெறும் அம்ர் பின் மைமூன் அல்ஜஸரீ என்று பெரும்பான்மையோர் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது. குஷ்மீஹனீ அறிவிப்பில் மட்டும் (ஜஸரீ என்பதற்குப் பதிலாக) ஜவ்ஸீ என்று இடம்பெற்றுள்ளது.

(பத்ஹுல் பாரி, பாகம் 1, பக்கம் 333)

இதுபோன்ற சில மாற்றங்கள் புகாரியின் பிரதிகளில் இடம்பெற்றுள்ளது. எனினும் இதில் எது சரியானது? எது தவறானது என்பதை அறிஞர்கள் தக்க சான்றுகளுடன் விளக்கியுள்ளனர்.

அன்றைய கால எழுத்து முறைகளில் இதுபோன்ற தவறுகள் வருவது சாதாரணமே! எனினும் அறிஞர்கள் இதில் அதிகக் கவனம் செலுத்தி சரியானதை இந்த சமூகத்திற்குக் கொடுத்துச் சென்றுள்ளனர். எனவே புகாரி, முஸ்லிம் மற்றும் ஹதீஸ் நூல்களை முற்றிலும் புறக்கணிக்க எந்த ஆதாரமும் இல்லை.

எம்.ஐ. சுலைமான்