Tamil Bayan Points

பெண்கள் இஃதிகாஃப் இருக்கலாமா?

கேள்வி-பதில்: இதர சட்டங்கள்

Last Updated on November 22, 2016 by Trichy Farook

பெண்கள் இஃதிகாஃப் இருக்கலாமா?

பெண்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கலாம் என்பதற்குப் பின்வரும் செய்திகள் ஆதாரமாக உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமளானிலும் இஃதிகாஃப் இருப்பார்கள். சுப்ஹுத் தொழுததும் இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் சென்று விடுவார்கள். அவர்களிடம் இஃதிகாஃப் இருப்பதற்கு நான் அனுமதி கேட்டேன். எனக்கு அவர்கள் அனுமதி அளித்தார்கள். அங்கே நான் ஒரு கூடாரத்தை அமைத்துக் கொண்டேன். இதைக் கேள்விப்பட்ட ஹஃப்ஸா (ரலி) ஒரு கூடாரத்தை அமைத்தார். இதனைக் கேள்விப்பட்ட ஸைனப் (ரலி) மற்றொரு கூடாரத்தை அமைத்துக் கொண்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலைத் தொழுகையை முடித்துவிட்டுத் திரும்பிய போது நான்கு கூடாரங்களைக் கண்டு, “இவை என்ன?” என்று கேட்டார்கள். அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இவ்வாறு செய்வதற்கு நற்செயல் புரியும் எண்ணம் தான் இவர்களைத் தூண்டியதா? இவர்கள் நன்மையைத் தான் நாடுகிறார்களா? இவற்றை நான் காண முடியாதவாறு அகற்றுங்கள்!” என்று சொன்னவுடன் அவை அகற்றப்பட்டன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (அந்த வருடம்) ரமளானில் இஃதிகாஃப் இருக்காமல் ஷவ்வால் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி (2041)

பள்ளியில் நெருக்கடி ஏற்படும் அளவில் அதிகமான கூடாரங்களை அமைத்துக் கொண்டதைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள். இஃதிகாஃப் இருப்பதை அவர்கள் தடை செய்யவில்லை என்பதை இதில் இருந்து அறியலாம்.

ஆயிஷா (ரலி) இஃதிகாஃப் இருக்க அனுமதி கோரிய போது நபியவர்கள் அனுமதி வழங்குகிறார்கள். இதிலிருந்து இஃதிகாஃப் என்ற வணக்கத்தைப் பெண்களும் செய்யலாம் என்பதை அறிய முடிகின்றது.

மேலும் நபியவர்கள் தனது மனைவி ஒருவருடன் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்கும் போது அவர்களின் மனைவியரில் ஒருவரும் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரீ (309)

அன்னிய ஆணுடன் எந்த ஒரு பெண்ணும் தனியாக இருக்கக் கூடாது என்பதால் இதைத் தவிர்க்க இஃதிகாஃப் இருக்கும் பெண்ணுக்குத் துணையாக இன்னொரு பெண்ணோ அல்லது மஹ்ரமான ஆணோ இஃதிகாஃப் இருப்பது நல்லது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நபிகளாரின் மனைவியைத் தவிர வேறு எந்தப் பெண்களும் இஃதிகாஃப் இருந்ததாக நாம் அறிந்த வரை ஹதீஸ்களில் இடம் பெறவில்லை.

நபிகளாரின் மனைவிகள் இஃதிகாஃப் இருந்ததிலிருந்து கூடுதல் பட்சமாக பின்வரும் சட்டத்தை நாம் எடுக்கலாம்.

பள்ளிவாசலில் பெண்கள் இஃதிகாஃப் இருக்க வசதிகள் இருக்குமானால் கணவனுடன் அவர்கள் இஃதிகாஃப் இருக்கலாம். ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நபியவர்களுடன் தான் அவர்களது மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள்.

பெண்கள் இஃதிகாஃப் தொடர்பாக அறிஞர்களிடையே உள்ள கருத்துக்களில் மேலே நாம் சொன்ன கருத்தே ஹதீஸுக்குப் பொருத்தமாக அமைந்துள்ளது.

பெண்கள் வீட்டில் இஃதிகாஃப் இருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் அதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் கிடையாது. இந்த வணக்கத்தைப் பள்ளிவாசலில் தான் நிறைவேற்ற வேண்டும்.

“பெண்கள் வீட்டில் இஃதிகாஃப் இருப்பது பித்அத் (நூதன பழக்கம்)” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறியுள்ளார்கள்.

(நூல்: பைஹகீ 8356)

ரமளான் அல்லாத காலங்களில் இஃதிகாஃப்

இஃதிகாஃப் என்பதற்கு தங்குதல் என்பது பொருள். இறையில்லத்தில் இறைவனை வணங்குவதற்காக மாத்திரம் தங்குவதற்கு இஃதிகாஃப் என்று சொல்லப்படுகிறது. இவ்வணக்கத்தைச் செய்பவர்கள் அவசியமான தேவைகளுக்குத் தவிர மற்ற விஷயங்களுக்கு பள்ளியை விட்டும் வெளியே செல்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த வணக்கத்தை ரமளான் மாதத்தில் மட்டும் தான் நிறைவேற்ற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிடவில்லை. ரமளான் அல்லாத காலங்களிலும் இஃதிகாஃப் இருக்கலாம்.

உமர் (ரலி) அவர்கள் ஒரு இரவு இஃதிகாஃப் இருப்பதாக நேர்ச்சை செய்தார்கள். அவர்கள் கால நேரம் குறிப்பிடாமல் பொதுவாகவே நேர்ச்சை செய்தார்கள். அதை நிறைவேற்றுமாறு நபியவர்கள் உத்தரவிட்டார்கள்.

2032 حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ عُبَيْدِ اللَّهِ أَخْبَرَنِي نَافِعٌ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ عُمَرَ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كُنْتُ نَذَرْتُ فِي الْجَاهِلِيَّةِ أَنْ أَعْتَكِفَ لَيْلَةً فِي الْمَسْجِدِ الْحَرَامِ قَالَ فَأَوْفِ بِنَذْرِكَ رواه البخاري

மஸ்ஜிதுல் ஹராமில் ஓர் இரவு இஃதிகாஃப் இருப்பதாக அறியாமைக் காலத்தில் நான் நேர்ச்சை செய்திருந்தேன்’ என்று உமர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “உமது நேர்ச்சையை நிறைவேற்றும்” என்றார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரி (2032)

மேலும் நபியவர்கள் ஷவ்வால் மாதத்திலும் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள்.

2041حَدَّثَنَا مُحَمَّدٌ هُوَ ابْنُ سَلَامٍ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلِ بْنِ غَزْوَانَ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْتَكِفُ فِي كُلِّ رَمَضَانٍ وَإِذَا صَلَّى الْغَدَاةَ دَخَلَ مَكَانَهُ الَّذِي اعْتَكَفَ فِيهِ قَالَ فَاسْتَأْذَنَتْهُ عَائِشَةُ أَنْ تَعْتَكِفَ فَأَذِنَ لَهَا فَضَرَبَتْ فِيهِ قُبَّةً فَسَمِعَتْ بِهَا حَفْصَةُ فَضَرَبَتْ قُبَّةً وَسَمِعَتْ زَيْنَبُ بِهَا فَضَرَبَتْ قُبَّةً أُخْرَى فَلَمَّا انْصَرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ الْغَدَاةِ أَبْصَرَ أَرْبَعَ قِبَابٍ فَقَالَ مَا هَذَا فَأُخْبِرَ خَبَرَهُنَّ فَقَالَ مَا حَمَلَهُنَّ عَلَى هَذَا آلْبِرُّ انْزِعُوهَا فَلَا أَرَاهَا فَنُزِعَتْ فَلَمْ يَعْتَكِفْ فِي رَمَضَانَ حَتَّى اعْتَكَفَ فِي آخِرِ الْعَشْرِ مِنْ شَوَّالٍ رواه البخاري

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமளானிலும் இஃதிகாஃப் இருப்பார்கள். சுப்ஹுத் தொழுததும் இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் சென்று விடுவார்கள். அவர்களிடம் இஃதிகாஃப் இருப்பதற்கு நான் அனுமதி கேட்டேன். எனக்கு அவர்கள் அனுமதி அளித்தார்கள். அங்கே நான் ஒரு கூடாரத்தை அமைத்துக் கொண்டேன். இதைக் கேள்விப்பட்ட ஹஃப்ஸா (ரலி) ஒரு கூடாரத்தை அமைத்தார். இதனைக் கேள்விப்பட்ட ஸைனப் (ரலி) மற்றொரு கூடாரத்தை அமைத்துக் கொண்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலைத் தொழுகையை முடித்துவிட்டுத் திரும்பிய போது நான்கு கூடாரங்களைக் கண்டு, “இவை என்ன?” என்று கேட்டார்கள். அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இவ்வாறு செய்வதற்கு நற்செயல்புரியும் எண்ணம் தான் இவர்களைத் தூண்டியதா? இவர்கள் நன்மையைத் தான் நாடுகிறார்களா? இவற்றை நான் காண முடியாதவாறு அகற்றுங்கள்!” என்று சொன்னவுடன் அவை அகற்றப்பட்டன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (அந்த வருடம்) ரமளானில் இஃதிகாஃப் இருக்காமல் ஷவ்வால் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி (2041)

எனவே இஃதிகாஃப் என்ற வணக்கத்தை ரமளான் அல்லாத காலங்களிலும் நிறைவேற்றலாம்.

ரமளான் மாதத்தில் கடைசி பத்து இரவுகளில் ஏதாவது ஒரு இரவு லைலத்துல் கத்ர் இரவாக இருக்கும் என்பதால் இந்தப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பது சிறந்தது.

813حَدَّثَنَا مُوسَى قَالَ حَدَّثَنَا هَمَّامٌ عَنْ يَحْيَى عَنْ أَبِي سَلَمَةَ قَالَ انْطَلَقْتُ إِلَى أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ فَقُلْتُ أَلَا تَخْرُجُ بِنَا إِلَى النَّخْلِ نَتَحَدَّثُ فَخَرَجَ فَقَالَ قُلْتُ حَدِّثْنِي مَا سَمِعْتَ مِنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي لَيْلَةِ الْقَدْرِ قَالَ اعْتَكَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشْرَ الْأُوَلِ مِنْ رَمَضَانَ وَاعْتَكَفْنَا مَعَهُ فَأَتَاهُ جِبْرِيلُ فَقَالَ إِنَّ الَّذِي تَطْلُبُ أَمَامَكَ فَاعْتَكَفَ الْعَشْرَ الْأَوْسَطَ فَاعْتَكَفْنَا مَعَهُ فَأَتَاهُ جِبْرِيلُ فَقَالَ إِنَّ الَّذِي تَطْلُبُ أَمَامَكَ فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطِيبًا صَبِيحَةَ عِشْرِينَ مِنْ رَمَضَانَ فَقَالَ مَنْ كَانَ اعْتَكَفَ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلْيَرْجِعْ فَإِنِّي أُرِيتُ لَيْلَةَ الْقَدْرِ وَإِنِّي نُسِّيتُهَا وَإِنَّهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ فِي وِتْرٍ وَإِنِّي رَأَيْتُ كَأَنِّي أَسْجُدُ فِي طِينٍ وَمَاءٍ وَكَانَ سَقْفُ الْمَسْجِدِ جَرِيدَ النَّخْلِ وَمَا نَرَى فِي السَّمَاءِ شَيْئًا فَجَاءَتْ قَزْعَةٌ فَأُمْطِرْنَا فَصَلَّى بِنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى رَأَيْتُ أَثَرَ الطِّينِ وَالْمَاءِ عَلَى جَبْهَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَرْنَبَتِهِ تَصْدِيقَ رُؤْيَاهُ رواه البخاري

அபூசயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் முதல் பத்து நாட்கள் “இஃதிகாஃப்’ இருந்தார்கள். அவர்களுடன் நாங்களும் இஃதிகாஃப் இருந்தோம். அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, “நீங்கள் தேடக் கூடிய (லைலத்துல் கத்ர் ஆன)து உங்களுக்கு எதிர் வரும் (நாட்களில் உள்ளது” என்றார்கள். ஆகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடுப்பத்து நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தோம். அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து “நீங்கள் தேடக்கூடியது உங்களுக்கு எதிர் வரும் (நாட்களில் உள்ளது)” என்று கூறினார்கள்.

ரமளான் இருபதாம் நாள் காலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (எங்களிடையே) சொற்பொழிவாற்றினார்கள். அதில் (பின்வருமாறு) குறிப்பிட்டார்கள்:

யார் நபியுடன் இஃதிகாஃப் இருந்தார்களோ அவர்கள் (பள்ளிவாசலுக்கே) திரும்பவும் வரட்டும். ஏனெனில் லைலத்துல் கத்ர் இரவு பற்றி எனக்கு(க் கனவில்) காட்டப்பட்டது; அதை நான் மறக்கடிக்கப்ட்டு விட்டேன். நிச்சயமாக அது கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படையான நாளில் உள்ளது. நான் ஈரமான களி மண்ணில் சஜ்தாச் செய்வது போன்று கனவு கண்டேன். (அன்று மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் கூரை, பேரீச்ச மட்டையினால் வேயப்பட்டிருந்தது. வானத்தில் (மழைக்கான அறிகுறி) எதையும் நாங்கள் காணவில்லை. (இவ்வாறிருக்க) திடீரென ஒரு மேகம் வந்து மழை பொழிந்தது. அன்று எங்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய நெற்றியின் மீதும் மூக்கு ஓரத்திலும் ஈரமான களிமண் படிந்திருக்கக் கண்டேன்.

புகாரி (813)