Tamil Bayan Points

3) பொருட்களை தூய்மையாக்கவே

நூல்கள்: ஜகாத் ஓர் ஆய்வு

Last Updated on November 11, 2023 by Trichy Farook

பொருட்களைத் தூய்மைப்படுத்தவே ஜகாத்

ஜகாத் கடமையாக்கப்பட்ட நோக்கம் என்ன என்பது இஸ்லாத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அந்த நோக்கம் நமது முடிவை மேலும் வலுப்படுத்துகின்றது.

தங்கத்தையும் வெள்ளியையும் அல்லாஹ்வின் பாதையில் யார் செலவிடாமல் இருக்கின்றார்களோ அவர்களுக்குக் கடுமையான வேதனை பற்றி எச்சரிப்பீராக (9:34) என்ற வசனம் அருளப்பட்டவுடன் அது முஸ்லிம்களுக்கு பெரிய பாரமாகத் தெரிந்தது. உடனே உமர் (ரலி) அவர்கள், ‘உங்கள் சிரமத்தை நான் நீக்குகின்றேன்’ என்று கூறி விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே! இந்த வசனம் உங்கள் தோழர்களுக்குப் பெரிய பாரமாகத் தெரிகின்றது’ என்று கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘உங்கள் செல்வத்தில் எஞ்சியதைத் தூய்மைப் படுத்துவதற்காகவே தவிர வேறு எதற்கும் அல்லாஹ் ஜகாத்தைக் கடமையாக்கவில்லை’ என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அபூதாவூத்-1664 (1417)

எஞ்சிய பொருட்களைத் தூய்மைப் படுத்துவதற்காகவே தவிர அல்லாஹ் ஜகாத்தைக் கடமையாக்கவில்லை என்ற நபிகள் நாயகத்தின் இந்தக் கூற்று நமது முடிவை வலுப்படுத்தும் தெளிவான சான்றாக அமைந்துள்ளது.

பொருள்களைச் சுத்தமாக்கவே ஜகாத் என்ற கருத்தில் எந்த நபிமொழியும் அறவே கிடையாது என்று மாற்றுக் கருத்துடைய வர்கள் மறுப்புப் புத்தகம் வெளியிட்டார்கள்.

ஆனால் இவர்கள் கூறியதற்கு மாற்றமாக மேற்கண்ட ஹதீஸ் அமைந்துள்ளது.

பொருட்களைச் சுத்தப்படுத்தும் ஒரே நோக்கத்திற்காகத் தான் ஜகாத் கடமை என்றால் ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் கொடுக்கத் தேவையில்லை என்பது மிகத் தெளிவு.

மேற்கண்ட ஹதீஸிற்கு மாற்றுக் கருத்துடையவர்கள் வேறு விளக்கம் கொடுத்துத் திசை திருப்புகின்றனர்.

‘உங்கள் செல்வத்தில் எஞ்சியதைத் தூய்மைப் படுத்துவதற்காகவே தவிர’ என்று நாம் பொருள் வைத்திருக்கின்றோம்.

‘உங்கள் செல்வத்தில் எஞ்சியதை அனுமதிப்பதற்காகவே தவிர’ என்று தான் இதற்குப் பொருள் கொள்ள வேண்டும் என்று மாற்றுக் கருத்துடையவர்கள் வாதிடுகின்றனர். இதில் இடம் பெறும் லியுதய்யிப’ என்ற சொல்லுக்கு இது தான் பொருள் எனவும் கூறுகின்றனர்.

தய்யிப்’ என்பதன் நேரடிப் பொருள் தூய்மைப்படுத்துதல் என்பது தான். அனுமதிக்கப்பட்டவை என்பது அதன் நேரடிப் பொருள் அல்ல.

திருக்குர்ஆனில் 2:168, 5:88, 8:69, 16:14, 3:38, 4:43, 5:87, 4:160, 5:4, 7:58, 7:157, 9:72, 61:12, 10:22 ஆகிய வசனங்களில் தய்யிப் என்ற சொல் தூய்மை’ என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு வாதத்துக்காக இவர்கள் செய்த பொருளை ஏற்றுக் கொண்டாலும் அதுவும் நமது கருத்தை வலுப்படுத்தும் ஆதாரமாகவே அமைந்துள்ளது.

எஞ்சிய பொருட்களை அனுமதிப்பதற்காகவே அல்லாஹ் ஜகாத்தைக் கடமையாக்கினான்’ என்ற இவர்களின் பதவுரைப் படி ஜகாத் கொடுக்கும் வரை ஒரு பொருள் அனுமதிக்கப்படாத நிலையில் இருக்கும் என்பதும், ஜகாத் கொடுத்து விட்டால் அனுமதிக்கப் பட்டதாக ஆகி விடும் என்பதும் கருத்தாகும். ஜகாத் கொடுத்ததன் மூலம் அனுமதிக்கப்பட்டதாக ஆன பின், அனுமதிக்கப்பட்டதாக ஆவதற்கு மீண்டும் ஏன் ஜகாத் கொடுக்க வேண்டும்? அனுமதிக்கப்பட்டதாக ஆக்குவதற்குத் தானே ஜகாத் கொடுக்க வேண்டும் என்று இந்த ஹதீஸுக்கு இவர்கள் கொண்ட விளக்கமும் கூறுகின்றது. ஒருமுறை ஜகாத் கொடுத்தவுடன் அனுமதிக்கப்பட்டதாக ஆகி விட்டதால் மீண்டும் கொடுக்கத் தேவையில்லை என்பது இப்போதும் நிரூபணமாகின்றது.

மேலும் மேற்கண்ட ஹதீஸ் பலவீனமானது என்றும் இவர்கள் கூறுகின்றனர்.

முஜாஹித் என்பாரிடமிருந்து ஜஃபர் பின் இயாஷ் அறிவிப்பதாக மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் அமைந்துள்ளது. ஆனால் ஜஃபர் பின் இயாஷ் என்பவர் முஜாஹிதிடமிருந்து எதையும் செவியுற்றதில்லை’ என்று ஷுஃபா கூறுவதால், இது தொடர்பு அறுந்த செய்தி என்று இதற்குக் காரணம் கூறுகின்றனர்.

ஷுஃபா அவர்கள் இவ்வாறு கூறினாலும், ஷுஃபா அவர்களுக்குப் போதிய விபரம் கிடைக்காததால் இவ்வாறு கூறி விட்டார்கள்.

ஜஃபர் பின் இயாஷ், ‘நான் முஜாஹிதிடம் கேட்டேன்’ என்ற சொல்லைப் பயன்படுத்திப் பல ஹதீஸ்களை அறிவித்துள்ளார். இது போன்ற செய்திகள் புகாரி 4940, 4310 ஆகிய இலக்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட நம்பகமான அறிவிப்பாளர் நானே நேரடியாக முஜாஹிதிடம் கேட்டேன்’ என்று கூறியிருக்கும் போது, இதில் சம்பந்தப்படாத ஷுஃபா அவர்களின் கூற்றை ஆதாரமாகக் கொள்ள முடியாது. முஜாஹிதிடம் ஜஃபர் செவியுற்றது ஷுஃபாவுக்குத் தெரியவில்லை என்று தான் முடிவு செய்ய வேண்டும்.

மற்றொரு குறைபாடும் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதாக மாற்றுக் கருத்துடையவர்கள் வாதிக்கின்றனர்.

இதன் அறிவிப்பாளர் தொடர் பின்வருமாறு அமைந்துள்ளது.

1. நூலாசிரியர் அபூதாவூத்

2. உஸ்மான் பின் அபீஷைபா

3. யஹ்யா

4. யஃலா

5. கைலான்

6. ஜஃபர் பின் இயாஸ்

7. முஜாஹித்

8. இப்னு அப்பாஸ் (ரலி)

9. உமர் (ரலி)

10. நபிகள் நாயகம் (ஸல்)

மேற்கண்ட ஒவ்வொரு அறிவிப்பாளரும் தமக்கு அடுத்த அறிவிப்பாளரிடமிருந்து இதை அறிவிக்கின்றார்கள்.

இந்தப் பட்டியலில் கைலான் (5) என்பவர் ஜஃபர் பின் இயாஸ் (6) என்பாரிடமிருந்து அறிவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இவ்விருவருக்கும் இடையில் சந்திப்பு ஏதும் இல்லை. எனவே இது தொடர்பு அறுந்த (முன்கதி) ஹதீஸாகும் என்று மறுப்பு கூறுகின்றனர்.

இருவரிடையே சந்திப்பு இல்லை என்று கூறுவோர் அதற்கான காரணத்தைக் கூற வேண்டும். அவ்வாறு கூறாமல் அல்பானி கூறி விட்டார் என்பதைத் தான் ஆதாரமாகக் காட்டுகின்றார்கள்.

நாஸிருத்தீன் அல்பானியை விடப் பல மடங்கு ஹதீஸ்களை ஆய்வு செய்த இப்னு ஹஜர், தஹபீ, இப்னு மயீன், யஹ்யா பின் ஸயீத் உள்ளிட்ட பல அறிஞர்கள் செய்துள்ள விமர்சனங்களை நிராகரிக்கும் இவர்கள் நமது காலத்தில் வாழ்ந்து மறைந்த நாசிருத்தீன் அல்பானியின் ஆய்வில் மட்டும் தவறே ஏற்படாது என்ற தவறான நம்பிக்கையில் இந்த ஹதீஸைத் தொடர்பு அறுந்தது என்று கூறுகின்றார்கள்.

அல்பானி அவர்கள் சிறந்த அறிஞர் என்றாலும் மனிதர் என்ற அடிப்படையில் அவரிடமும் தவறுகள் ஏற்படவே செய்யும். இது போன்ற குறைபாடுகளுக்கு அப்பாற்பட்ட எந்த ஹதீஸ் கலை அறிஞரும் கிடையாது. நாஸிருத்தீன் அல்பானி அவர்கள் சரி என்று சொல்லி விட்டால் அதைக் கண்ணை மூடிக் கொண்டு ஏற்க வேண்டும் என்ற நம்பிக்கை பலரிடம் காணப்படுகின்றது. ஆனால் அல்பானி அவர்கள் ஆதாரப்பூர்வமான ஹதீஸைப் பலவீனமானது என்றும், பலவீனமான ஹதீஸை ஆதாரப்பூர்வமானது என்றும், ஹதீஸில் இல்லாததை இருக்கின்றது என்றும் கூறியதற்கு ஆதாரம் உள்ளது.

இந்த அறிவிப்பு, தொடர்பு அறுந்தது என்பதற்கு அல்பானி எடுத்து வைக்கும் காரணம் இது தான்.

ஜஃபர் பின் இயாஸ்

உஸ்மான் பின் கத்தான்

கைலான்

என்ற அறிவிப்பாளர் வரிசையில் இதே ஹதீஸ் ஹாகிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கைலானுக்கும் ஜஃபருக்கும் இடையே உஸ்மான் பின் கத்தான் இடம் பெற்றுள்ளார். ஆனால் அபூதாவூத் அறிவிப்பில் ஜஃபர் பின் இயாஸ்

கைலான்

என்ற அறிவிப்பாளர் வரிசையில் பதிவு செய்யப்பட்டுள்ளது

அபூதாவூத் அறிவிப்பில் உஸ்மான் பின் கத்தான் விடுபட்டுள்ளார். எனவே இது தொடர்பு அறுந்த ஹதீஸாகும் என்று அல்பானி கூறுகின்றார்.

ஆனால் ஹாகிமில் இடம் பெறும் அறிவிப்பாளர் உஸ்மான் பின் கத்தான் பலவீனமானவர் என்பதால் இது ஏற்கத்தக்க ஹதீஸ் அல்ல.

பலவீனமான இந்த அறிவிப்பின் இடையில் ஒருவர் நுழைக்கப்பட்டதால் அபூதாவூதின் ஆதாரப்பூர்வமான அறிவிப்பில் அவர் விடுபட்டுள்ளார் என்று முடிவு செய்வது அர்த்தமற்ற ஆய்வாகும்.

உண்மையில் கைலான் என்பார் ஜஃபர் பின் இயாஸைச் சந்திக்க இயலுமா என்றால் நிச்சயம் முடியும். ஏனெனில் கைலானின் மரணம் ஹிஜிரி 132ஆம் ஆண்டாகும். ஜஃபர் பின் இயாஸின் மரணம் 126வது ஆண்டாகும்.

(தக்ரீபுத் தஹ்தீப் 1/443)

(தக்ரீபுத் தஹ்தீப் 1/139)

இருவரின் மரணத்திற்கிடையே ஆறு வருட இடைவெளி தான் உள்ளது. ஒருவரையொருவர் சந்திப்பதற்கு ஏற்ற காலத்தை விட இது பன்மடங்கு அதிகமாகும்.

மேலும் ஜஃபர் பின் இயாஸ் பஸராவையும், கைலான் கூஃபாவையும் சேர்ந்தவர்கள். அருகருகே உள்ள இவ்வூர்களைச் சேர்ந்தவர்கள் சந்திப்பதில் எந்த வியப்பும் இல்லை.

ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெறும் ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவை என்பதை அறிந்து வைத்திருக்கிறோம். இரண்டு அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருந்து, இருவரும் ஒரே காலத்தில் வாழ்ந்திருப்பதற்கும், இருவரும் சந்தித்திருப்பதற்கும் சாத்தியமிருக்குமானால் ஒருவரிடமிருந்து மற்றவர் கேட்டார் என்பதற்கு அதுவே போதுமானதாகும் என்று முஸ்லிம் இமாம் தமது முன்னுரையில் குறிப்பிடுகின்றார்கள். இந்த அளவு கோலின் படியே தமது ஹதீஸ்களை முஸ்லிமில் பதிவு செய்துள்ளார்கள். ஹதீஸ் கலை அறிஞர்களும் இதை ஏற்றுள்ளார்கள். எனவே கைலான், ஜஃபரிமிருந்து செவிமடுத்தார் என்பதை மறுக்க முடியாது.

மேலும் ஹதீஸ் கலை நூற்களில் ஜஃபரின் மாணவர்கள் பட்டியலில் கைலான் சேர்க்கப்பட்டுள்ளார். அது போல் கைலானின் ஆசிரியர் பட்டியலில் ஜஃபர் சேர்க்கப்பட்டுள்ளார். இருவரும் சந்திக்கவில்லை என்று கூறுவதற்கு எந்த முகாந்திரமும், ஆதாரமும் இல்லை. யாருமே ஒப்புக் கொள்ளாத தவறான அளவு கோலின் படி அல்பானி செய்த தவறான முடிவு இது.

பலவீனமான ஹதீஸை வைத்து பலமான ஹதீஸை நிராகரிக்கும் விந்தையையும் இவர்கள் நியாயப்படுத்துகின்றார்கள்.

பொருட்களைத் தூய்மைப்படுத்தவே ஸகாத் என்பதை மேலும் சில ஹதீஸ்களும் வலுப்படுத்துகின்றன.

மர்மம் என்ன?

நாங்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் வெளியில் புறப்பட்டோம். அப்போது ஒரு கிராமவாசி, ‘யார் தங்கத்தையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் இருக்கிறார்களோ…என்ற வசனத்தைப் பற்றி எனக்கு அறிவியுங்கள்’ எனக் கூறினார். அதற்கு இப்னு உமர் (ரலி), ‘யார் அவற்றைப் பதுக்கி வைத்து அதற்கான ஜகாத்தைக் கொடுக்காமல் இருக்கின்றாரோ அவருக்குக் கேடு தான். இவ்வசனம் ஜகாத் கடமையாக்கப்படுவதற்கு முன்புள்ளதாகும். ஜகாத் பற்றிய வசனம் அருளப்பட்டதும் செல்வங்களைப் பரிசுத்தமாக்கக் கூடியதாக ஜகாத்தை அல்லாஹ் ஆக்கி விட்டான்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: காலித் பின் அஸ்லம். நூல்: புகாரி 1404

ஜகாத் என்பது பொருட்களைத் தூய்மையாக்குவதற்குத் தான் என்ற அபூதாவூதின் 1917 ஹதீஸை நபித்தோழர்களும் கூட இவ்வாறு விளங்கியிருந்தார்கள் என்பதற்கு மேற்கண்ட ஹதீஸ் சான்றாகும்.

இவ்வாறு நாம் கூறும் போது, நபித்தோழர்களின் கருத்தை எப்படி ஆதாரமாகக் காட்டலாம் என்று, புரிந்தும் புரியாதது போல் சிலர் பேசுகின்றார்கள். ஆதாரமாகக் காட்டுவது வேறு, ஆதாரத்தின் மூலம் நிரூபிக்கப்பட்ட ஒன்றை வலுப்படுத்துவதற்காக எடுத்துக் காட்டுவது வேறு என்பதைப் புரியாமல் திசை திருப்புகின்றனர்.

நபித் தோழரின் இந்தக் கூற்றை நாம் ஆதாரமாகக் காட்டவில்லை. அபூதாவூதில் இடம் பெறும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றை ஆதாரமாகக் காட்டி, மேலதிக விளக்கத்திற்காகத் தான் மேற்கண்ட இப்னு உமரின் கூற்றை எடுத்துக் காட்டியுள்ளோம். ஆனால் ஸஹாபாக்களின் கூற்று, இஸ்லாத்தின் மூன்றாவது ஆதாரம் என்ற கருத்துடையவர்கள் இந்த மூன்றாவது ஆதாரத்தை (?) மறுப்பதன் மர்மம் என்ன என்பது நமக்குப் புரியவில்லை.

அழுக்கும் மறுப்பும்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினர் ஜகாத் வாங்குவது ஹராம் என்பதை நாம் அறிவோம். இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கும், தமது குடும்பத்தாருக்கும் ஜகாத்தை ஏன் ஹராமாக்கிக் கொண்டார்கள் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) விளக்கும் போது, ‘இவை மனிதர்களின் அழுக்குகள்’ என்று குறிப்பிட்டார்கள். (முஸ்லிம் 1784)

இந்த ஹதீஸிலிருந்து, ஜகாத் மனிதர்களைத் தான் தூய்மைப்படுத்தும், பொருட்களைத் தூய்மைப்படுத்தாது என்று சிலர் வாதத்தை எடுத்து வைக்கின்றனர். ஆனால் சிந்தித்துப் பார்த்தால் இது அவர்களுக்கே எதிரான வாதம் என்பது தெளிவாகும்.

மனிதர்களின் அழுக்கு என்றால் மனிதர்களின் உடலிலிருந்து நீக்கப்பட்ட அழுக்கு என்பது அதன் பொருள் அல்ல.

ஜகாத் கொடுத்த பின் மீதமுள்ள பொருட்கள் தூய்மையானது என்றால் ஜகாத்தாக வெளியேற்றப்பட்டது அசுத்தம் என்றாகின்றது. மனிதர்களுடைய அசுத்தமான பொருட்கள் என்ற கருத்தில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், மனிதர்களின் அழுக்கு என்ற வாசகத்தைப் பயன்படுத்தியுள்ளார்கள். ஜகாத்தின் நோக்கம் பொருட்களைத் தூய்மைப்படுத்துவது தான் என்பதை இது மேலும் உறுதி செய்கின்றது.

மனிதர்களைத் தூய்மைப்படுத்துமா?

இன்னும் சிலர் ஜகாத் கொடுப்பது மனிதர்களைத் தூய்மைப்படுத்தும் என்ற கருத்தில் வந்துள்ள ஆதாரங்களைக் காட்டி, பொருட்களைத் தூய்மைப்படுத்தும் என்ற கருத்தை இருட்டடிப்பு செய்ய முயல்கின்றனர்.

(முஹம்மதே!) அவர்களின் செல்வங்களில் தர்மத்தை எடுப்பீராக! அதன் மூலம் அவர்களைத் தூய்மைப்படுத்தி, பரிசுத்தமாக்குவீராக! (அல்குர்ஆன் 9:103)

ஸகாத் கொடுப்பது மனிதர்களைச் சுத்தப்படுத்தும் என்பதால் பொருட்களைச் சுத்தப்படுத்தாது என்றாகி விடுமா?

புதிய துணியை ஊசி தைக்கும் என்று கூறினால் கிழிசலைத் தைக்காது என்று இதற்குப் பொருள் கொள்ள முடியுமா?

ஜகாத் மனிதர்களைத் தூய்மைப்படுத்தும் என்று மேற்கண்ட வசனம் சொல்வதால் அதையும் நாம் நம்ப வேண்டும். பொருட்களைத் தூய்மைப்படுத்தும் என்று முன்னர் நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ் கூறுவதால் அதையும் நம்ப வேண்டும். இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல!

ஜகாத் மனிதர்களையும் தூய்மைப்படுத்தும்; பொருட்களையும் தூய்மைப்படுத்தும் என்றே நாம் கூறுகின்றோம்.

வாரிசுச் சொத்துக்கு ஜகாத் ஏன்?

ஜகாத் கொடுப்பதால் பொருள் தூய்மையாகி விடும் என்றால் ஸகாத் கொடுக்கப்பட்ட பொருள் வாரிசு முறையில் மகனுக்குக் கிடைத்தால் அவன் ஏன் ஜகாத் கொடுக்க வேண்டும்? என்ற அற்புதமான (?) கேள்வியைக் கேட்கின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஜகாத் பொருள் ஹராம். அது அசுத்தம் என்பதை அனைவரும் அறிவோம். ஜகாத்தாக நபித் தோழருக்குக் கிடைத்த பொருளை – அழுக்கை – அந்த நபித் தோழர் வாங்கிக் கொண்டு நபிகள் நாயகத்துக்கு அன்பளிப்பாகக் கொடுக்கின்றார்கள். அதைப் பெற்றுக் கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அது உனக்குத் தான் தர்மம். எனக்கு அன்பளிப்பு’ என கூறினார்கள். (புகாரி 1493, 2577, 2578, 5097, 5279)

மனிதர்களின் அழுக்காக இருந்த பொருள் ஒரு கையிலிருந்து மறு கைக்கு மாறியவுடன் எப்படி அழுக்கு என்ற நிலையிலிருந்து மாறி விட்டதோ அது போல் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பொருள் கிடைக்கும் போது அவர் தன் பங்குக்குத் தூய்மைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அழுக்காகவே வந்து சேரும்.

அழுக்காக ஆன பொருள் எப்படி தூய்மையாகி விட்டது? என்று இவர்கள் நபிகள் நாயகத்தையே கேட்பார்கள் போலும்.

‘ஜகாத் கொடுப்பது பொருட்களைத் தூய்மைப்படுத்தும்’ என்பதை நாம் துணை ஆதாரமாகத் தான் இங்கு சமர்ப்பித்துள்ளோம். ஒரு வாதத்திற்கு ஜகாத் கொடுப்பது, பொருட்களைத் தூய்மைப்படுத்தாது என்று வைத்துக் கொண்டாலும் ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுக்கத் தேவையில்லை என்ற அடிப்படையான நமது நிலைபாட்டிற்கு எந்தப் பாதிப்பும் வந்து விடாது.

மற்றும் சிலர், ஜிஸ்யா மட்டும் வருடா வருடம் வாங்க வேண்டும் என்று ஹதீஸ் உள்ளதா? அதை மட்டும் ஏன் ஏற்றுக் கொள்கிறீர்கள்? என்பது போல் சில கேள்விகளைக் கேட்கிறார்கள்.

நம்முடைய நிலைபாடு என்ன என்று புரியாமல் தான் இவ்வாறு கேட்கிறார்கள்.

ஒரு வாதத்துக்காக ஜிஸ்யா பற்றி வருடா வருடம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை என்று வைத்துக் கொள்வோம். அப்படி இருந்தால் ஜகாத்துக்கு எடுத்த முடிவைத் தான் அதற்கும் எடுப்போம்.

ஏற்கனவே எடுத்த முடிவை ஆதாரமாகக் கொண்டு வேறு ஒரு முடிவை நாம் எடுக்க மாட்டோம்.