Tamil Bayan Points

31) முன்னர் சொன்னதை மாற்றிச் சொல்வது ஏன்?

நூல்கள்: பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்

Last Updated on March 5, 2022 by

சூனியத்தின் மூலம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்த முடியாது; அதிகபட்சமாக கணவன் மனைவியரிடையே பிரிவை ஏற்படுத்த முடியும் என்று முன்னர் நாம் கூறினோம். எழுதினோம். இப்போது கணவன் மனைவிக்கு மத்தியில் சூனியத்தின் மூலம் எந்தப் பிரிவையும் ஏற்படுத்த முடியாது என்று சொல்கிறோம்.

சூனியக் கட்சியினர் இதைத் தான் தங்களின் பெரிய ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர்.

தவ்ஹீதின் அடிப்படையே இதுதான். மனிதன் குறைவான அறிவுள்ளவன். அதனால் அவனிடம் தவறுகள் ஏற்படாமல் இருக்காது. முன்னர் சொன்னதில் சிலவற்றைப் பின்னர் மாற்றிக் கொள்ளாத ஒரு நல்லறிஞர் கூட வரலாற்றில் இல்லை. தவறு என்று தெரிய வரும் போது அதை மாற்றிக் கொள்ள வேண்டும். இதுதான் இஸ்லாத்தின் அடிப்படை.

நாம் ஏன் மாற்றினோம்? இதை இந்த நூலை வாசிக்கும் யாரும் அறிந்து கொள்ளலாம். முன்னர் நாம் சொன்னது தவறு என்பதற்கும், இப்போது சொல்வது தான் சரியானது என்பதற்கும் ஆதாரங்கள் கிடைத்ததால் தான் மாற்றினோம்.

சூனியத்தால் கணவன் மனைவியைப் பிரிக்க முடியும் என்று சொன்னாலும் சூனியத்தால் நபியை மனநோயாளியாக ஆக்க முடியும் என்று சொன்னாலும் சூனியக்காரனுக்கு அல்லாஹ்வைப் போல் ஆற்றல் உள்ளது என்ற கருத்தைத் தருகிறது.

சூனியத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்று ஏராளமான வசனங்களில் சொல்லப்படுவதற்கு மாற்றமாக நமது முந்திய நிலைபாடு இருந்ததால் அதைச் சரி செய்துள்ளோம்.

இது வரவேற்கத்தக்க மாற்றம் தான் இதில் குறை காண முகாந்திரம் இல்லை.

அனைத்தையும் முழுமையாக ஆராய்ந்து விட்டுப் பிறகு இதை முதலில் சொல்லி இருக்கலாமே என்றும் கேட்கின்றனர்.

இது ஒரு முஸ்லிம் கேட்கின்ற கேள்வியாக இல்லை.

இப்போது நாம் சொன்னவை தவறு என்று ஆதாரத்துடன் நிரூபித்தால் அதை மாற்றிக் கொள்ளத் தயங்க மாட்டோம். சுட்டிக்காட்டியவர்களுக்கு நன்றி சொல்லவும் வெட்கப்பட மாட்டோம்.

இது எல்லா இமாம்களுக்கும் ஏற்பட்டிருக்கின்றது.

அபு ஹனீஃபா, ஷாஃபி உள்ளிட்ட எல்லா இமாம்களுக்கும் பழைய சொல், புதிய சொல் என்று நிறைய உள்ளன.

அபு ஹனிஃபா சொல்லிவிட்டு மாற்றிக் கொண்ட கருத்துக்கள்.

ஷாஃபி சொல்லிவிட்டு மாற்றிக் கொண்ட கருத்துக்கள்.

இப்படி ஏராளமான எண்ணக்கையில் பட்டியல்களே இருக்கின்றன.

நல்லவர்களுக்குத் தவறு ஏற்பட்டால் நாம் தவறுதலாகச் சொல்லி விட்டோம். இதனையே இன்னும் மக்கள் பின்பற்றுவார்களே என்று பதறிக் கொண்டு மாற்றிக் கொள்வார்கள்.

கெட்டவர்களிடம் தவறு நேர்ந்தால் ஒன்றைச் சொல்லி விட்டோம். மாற்றினால் மரியாதை போய் விடும் என்று அதில் பிடிவாதமாக இருந்து வழி கெடுப்பார்கள். தவறென்று ஆதாரத்துடன் நிரூபித்திருந்தாலும் அதனை மாற்ற மாட்டார்கள்.

மாற்றுவது என்ற புகழத்தக்க ஒரு செயலை, ஏதோ தவறாகச் சித்தரிக்கின்றனர்.

நோன்பு துறக்கும் போது ஓதும் தஹபள்ளமவு என்ற துஆவை காலங்காலமாக ஓதிக் கொண்டிருந்தோம். அதில் அறிவிப்பாளர்களில் ஒரே பெயரில் இரண்டு நபர்கள் இருக்கின்றார்கள். ஒருவர் நம்பகமானர். இன்னொருவர் பலவீனமானவர். நாம் பலவீனமானவரைச் சரியானவர் என்று நினைத்துக் கொண்டு இந்த துஆ சரியானது என்று சொல்லி வந்தோம்.

ஆள்மாறாட்டம் நடந்திருப்பது பின்னர் தான் தெரிந்தது. உடனே நம் கூறியது தவறு என்று ஆன்லைன் பி.ஜே இணைதளம் மூலமாகவும், ஏகத்துவம் இதழ் மூலமாகவும், பிரசுரங்கள் மூலமாகவும் மற்றும் மேடை போட்டும் மக்களிடத்தில் சொன்னோம்.

இதற்காக நாம் என்றுமே தயங்கியதில்லை. தவறு என்று தெரிந்தால் உடனே அதனை திருத்திக் கொள்வோம்.

சஹாபாக்கள் கல்லை வணங்கியவர்கள்தான். பின்னர் இஸ்லாத்திற்கு வந்தார்கள். நீங்கள் ஏன் கல்லை வணங்கினீர்கள். அப்பவே இஸ்லாத்திற்கு வந்திருக்கலாமே என்று கேட்க முடியுமா?

இவர்கள் வாதப்படி காஃபிர்களே இஸ்லாத்திற்கு வர முடியாது.

தர்ஹாவை வணங்கியவர்கள் இஸ்லாத்திற்கு வந்தால் நேற்று தர்ஹாவை வணங்கிவிட்டு, இப்போது தவறென்று சொல்கின்றீர்கள். நேற்றே இதைச் சொல்லியிருக்க வேண்டியது தானே என்று சொன்னால். நேற்று தெரியவில்லை. இன்று தெரிந்து கொண்டோம். அவ்வளவுதான் பதில்.