Tamil Bayan Points

07) முரண்படும் ஹதீஸ் பற்றி அறிஞர்கள்

முக்கிய குறிப்புகள்: ஹதீஸ் கலை

Last Updated on March 23, 2022 by Trichy Farook

முரண்படும் ஹதீஸ்கள் முடிவு தரும் அறிஞர்கள்

உலக மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக இறைவனால் இறுதித் தூதராக இவ்வுலகுக்கு அனுப்பப்பட்ட நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் திருமறைக் குர்ஆனை நமது வாழ்வியல் வழிகாட்டியாகவும் அதற்குரிய விளக்கமாகத் தமது வாழ்நாளையும் அமைத்துச் சென்றார்கள்.

நபி (ஸல்) அவர்களால் வழங்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தின் மூல ஆதாரமாகத் திகழ்வது வஹீ எனும் இறைச் செய்திகளாகும்.

اتَّبِعُوا مَا أُنْزِلَ إِلَيْكُمْ مِنْ رَبِّكُمْ وَلَا تَتَّبِعُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَ قَلِيلًا مَا تَذَكَّرُونَ (3)

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள் அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்.

(அல்குர்ஆன் 7:3)

மேற்கண்ட வசனம் இறைச் செய்தி மட்டும்தான் இஸ்லாத்தின் அடிப்படை என்பதை ஓங்கி உரைக்கின்றது.

இறைச் செய்திகள் திருக்குர்ஆன் என்ற ஒரு வழியிலும், அதற்கு விளக்கமாக நபியவர்கள் கூறிய செய்திகள் ஹதீஸ் என்ற இன்னொரு வழியிலும் நமக்குக் கிடைத்திருக்கின்றன.

இந்த இரண்டு ஆதாரங்களையும் இரண்டில் ஒன்று மற்றொன்றுடன் முரண்படாத வகையிலேயே இறைவன் அருளியிருக்கின்றான்.

ஏக இறைவனான அல்லாஹ்விடமிருந்து அருளப் பெற்ற திருமறைக்குர்ஆனுக்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்கள் பேசமாட்டார்கள் என்பது குர்ஆன் கற்றுத் தரும் பேருண்மையாகும்.

مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَى (2) وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى (3) إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى (4) عَلَّمَهُ شَدِيدُ الْقُوَى (5)

உங்கள் தோழர் (முஹம்மத்) பாதை மாறவில்லை. வழி கெடவுமில்லை. அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.

அல்குர்ஆன் 53:1, 2

நபி (ஸல்) அவர்கள் மார்க்க விஷயமாக எதனை எடுத்துச் சொன்னாலும் அது வஹீ – இறைச் செய்தியாகத் தான் இருக்கும். அவர்கள் மனோஇச்சைப்படி, தான் நினைத்தவற்றை யெல்லாம் பேசவோ, மார்க்கம் என்று கற்றுத் தரவோ மாட்டார்கள் என்பதை மேற்கண்ட அல்குர்ஆன் வசனம் நமக்குத் தெளிவாக உணாத்துகின்றது.

أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَيْرِ اللَّهِ لَوَجَدُوا فِيهِ اخْتِلَافًا كَثِيرًا (82)

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.

அல்குர்ஆன் 4:82

لَا يَأْتِيهِ الْبَاطِلُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهِ تَنْزِيلٌ مِنْ حَكِيمٍ حَمِيدٍ (42)

இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கோனிடமிருந்து அருளப்பட்டது.

அல்குர்ஆன் 41:42

திருக்குர்ஆனில் முரண்பாடு இருக்காது என்பதுதான் இறைவேதம் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது. முரண்பாடு இருப்பது போல் நமக்குத் தோன்றினால் அது நம்முடைய சிந்திக்கும் தன்மையில் ஏற்பட்ட குறைபாடாகத் தான் இருக்க முடியும்.

இதனால் தான் இவ்வசனத்தில் சிந்திக்க மாட்டீர்களா? என்றும் சிந்தித்தால் முரண்பாடு இல்லை என்பதை அறிந்து கொள்வீர்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

புரிந்து கொள்வதில் சிலருக்குத் தெளிவில்லாத காரணத்தால் தான் முரண்பட்ட இரு கருத்துக்களுக்கும் திருக்குர்ஆன் இடம் தருவது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.

திருக்குர்ஆனிலோ, ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலோ முரண்பாடு உள்ளது போல் தோன்றினால் அதை எப்படி சீர்படுத்திக் கொள்வது என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்

ஒட்டுமொத்தமாக திருக்குர்ஆன் எந்தக் கொள்கையை முன்வைக்கிறதோ அந்தக் கொள்கைக்கு மாற்றமாகப் பொருள் கொள்ளும் வகையில் ஒரு வசனம் நமக்குத் தெரிந்தால் அவ்வாறு பொருள் கொள்ளாமல் ஒட்டு மொத்த குர்ஆனிலிருந்து விளங்கும் கொள்கைக்கு ஏற்ற விளக்கத்தைத் தான் அந்த வசனத்துக்குக் கொடுக்க வேண்டும். இது குர்ஆனைச் சரியாக புரிந்து கொள்ளவதற்குரிய முக்கிய வழிமுறையாகும்.

அதுபோல் சில ஹதீஸ்கள் ஒட்டு மொத்த குர்ஆன் முன்வைக்கும் கொள்கைக்கு மாற்றமாக அமைந்திருக்கின்றன. எந்த வகையிலும் குர்ஆனுடன் ஒத்துப் போகும் வகையில் விளக்கம் கொடுக்க முடியாமல் அவை இருக்கும். அப்போது என்ன செய்வது?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனுக்கு விளக்கம் கொடுக்கவே அனுப்பப்பட்டார்கள்.

بِالْبَيِّنَاتِ وَالزُّبُرِ وَأَنْزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ (44)

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

திருக்குர்ஆன் 16:44

விளக்கம் கொடுக்க அனுப்பப்பட்ட நபியவர்கள், குர்ஆனுக்கு முரணாகப் பேசவோ, நடக்கவோ மாட்டார்கள். அப்படி அவர்கள் பேசியதாக அல்லது நடந்ததாக ஒரு செய்தி கிடைத்தால் அது எந்த நூலில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னது அல்ல. செய்தது அல்ல என்ற முடிவுக்கு நாம் வரவேண்டும். இது ஹதீஸ்களை மறுப்பதாக ஆகாது. இதையும் நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

திருக்குர்ஆன்

திருக்குர்ஆனைப் பொறுத்த வரை அது இறைவேதம் என்பதற்கு அனைத்து நபித்தோழர்களும் சாட்சிகளாக உள்ளனர்.

திருக்குர்ஆன் வசனங்களை ஓதிக்காட்டி “இது என் இறைவனிடமிருந்து வந்தது” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்கள் அவ்வாறு கூறினார்கள் என்பதற்கு ஒட்டுமொத்த நபித்தோழர்களும் சாட்சிகளாக இருந்தனர். எழுத்து வடிவில் பதிவு செய்தனர். பலர் மனனம் செய்தனர்.

ஹதீஸ்கள்

ஹதீஸ்களைப் பொறுத்தவரை எந்த ஒரு ஹதீஸையும் அனைத்து நபித்தோழர்களும் அறிவிக்கவில்லை. விரல் விட்டு எண்ணப்படும் சில ஹதீஸ்கள் அதிகபட்சம் ஐம்பது நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளன. மற்ற ஹதீஸ்கள் யாவும் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று நபித்தோழர்கள் வழியாகத்தான் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் என்பதற்கு ஒருவர் அல்லது இருவர் தான் சாட்சி கூறுகிறார்.

ஒட்டு மொத்த சமுதாயமே சாட்சி கூறுவதும், ஓரிருவர் சாட்சி கூறுவதும் சமமானதாக ஆகாது.

எவ்வளவு நம்பகமானவர்கள் என்றாலும் ஓரிருவர் அறிவிக்கும் செய்திகளில் தவறுகள் நிகழ வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் மட்டுமின்றி அதற்கு அடுத்த காலத்து ஒட்டுமொத்த மக்களும் “இதுதான் குர்ஆன்” என்று நபித்தோழர்கள் சொன்னதாக அறிவிக்கின்றனர். இப்படி ஒவ்வொரு கால கட்டத்திலும் உள்ள அனைவரும் இதுபோல் அறிவிக்கின்றனர்.

ஹதீஸ்களைப் பொறுத்தவரை ஓரிரு நபித்தோழர்கள் தான் அறிவித்துள்ளனர். நபித்தோழர் இப்படிச் சொன்னார் என்று அறிவிப்பதும் ஓரிருவர் தான். நூலாகத் தொகுக்கப்படும் காலம் வரை ஒருவரில் இருந்து ஒருவர் என்ற அடிப்படையில் தான் ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டன.

நம்பகமான அறிவிப்பாளர் தொடரில் நபியவர்கள் கூறியதாக ஒரு செய்தி வரும் என்றால் திருக்குர்ஆனுடன் மோதாத வரை இத்தகைய செய்திகளில் சந்தேகம் கொள்ளக் கூடாது. ஒரு ஹதீஸ் திருக்குர்ஆனுடன் மோதும்போது “இந்த அறிவிப்பில் எங்கோ தவறு நடந்துள்ளது” என்று முடிவு செய்து குர்ஆனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

நபித்தோழர்கள் அரைகுறையாகக் கேட்டதன் மூலம், அல்லது தவறாகப் புரிந்து கொண்டதன் மூலம் இந்தத் தவறு ஏற்பட்டு இருக்கலாம். அல்லது நபித்தோழர்களிடம் கேட்ட அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவரிடம் தவறு நிகழ்ந்திருக்கலாம். அல்லது அதற்கடுத்த தலைமுறையைச் சேர்ந்தவரிடம் தவறு ஏற்பட்டிருக்கலாம் எனறே முடிவு செய்ய வேண்டும்.

ஒரு ஹதீஸ் எந்த வகையிலும் திருக்குர்ஆனுடன் அறவே ஒத்துப் போகவில்லை: திருக்குர்ஆனுடன் நேரடியாக மோதுவது போல் அமைந்துள்ளது: இரண்டையும் எந்த வகையிலும் இணைத்து விளக்கம் கூற முடியாது என்றால் அது போன்ற சந்தர்ப்பங்களில் ஹதீஸை ஏற்று குர்ஆனை மறுத்து விடக்கூடாது. மாறாக குர்ஆனை ஏற்று அந்த ஹதீஸை நபிமொழி அல்ல என்று மறுக்க வேண்டும்.

அறிவிப்பாளர்கள் சரியாக இருந்தும் குர்ஆனுக்கு முரண்படும் செய்திகளை நாம் முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் என்பதை நாம் சுயமாகச் சொல்லவில்லை. இதனை அல்லாஹ்வுடைய தூதரே சொல்லி விட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியு மானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அதை(க் கூறுவதில்) நானே உங்களில் மிகத் தகுதி வாய்ந்தவன்.

என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்கள் உள்ளம் வெறுக்குமானால், இன்னும் உங்களது தோல்களும் முடிகளும் (அதற்குக் கட்டுப்படாமல் அதை விட்டு) விரண்டு ஓடுமானால் இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு (சாத்தியப்படுவதை விட்டும்) தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களில் நானே அதை விட்டும் மிக தூரமானவன்.

அறிவிப்பவர்: அபூஉஸைத் (ரலி) மற்றும் அபூஹுமைத் (ரலி)

நூல்: அஹ்மத்-16058 (15478)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பெயரால் சொல்லப்படும் செய்திகளில் பொய்யானவை கலந்து விடும் என்பதையும், அதை எவ்வாறு கண்டறிவது என்பதையும் இங்கே விளக்குகிறார்கள்.

நபியவர்களின் பேச்சில் தவறு ஏற்படும் என்று மேற்கண்ட நபிமொழி குறிப்பிடுவதாக சில வழிகேடர்கள் வாதிக்கின்றனர். இவ்வாறு கூறுவது அவர்களின் அறியாமையைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

நபியவர்கள் மார்க்கமாகப் பேசும் விஷயங்கள் வஹி எனும் இறைச் செய்தி ஆகும். அதில் ஒரு போதும் முரண்பட்ட விஷயங்கள் வரவே வராது. நபியவர்கள் ஒரு போதும் குர்ஆனுக்கு எதிராகப் பேசமாட்டார்கள் என்று நம்பிக்கை கொள்வதே சரியான கொள்கையாகும்.

அதே நேரத்தில் நபியவர்கள் கூறியதாக மற்றவர்கள் அறிவிக்கும் போது நபியவர்கள் கூறாதவற்றையும், தவறான செய்திகளையும் நபியவர்களின் பெயரால் அறிவித்துவிடுவார்கள். நபியவர்கள் பெயரால் அறிவிக்கப்படும் ஒரு செய்தி நபியவர்கள் கூறியிருக்கவே முடியாது என்று நிரூபணமாகும்போது அவற்றை ஏற்றுக் கொள்ளாது மறுக்க வேண்டும் என்பதே மேற்கண்ட நபிமொழியின் விளக்கமாகும்.

நபி (ஸல்) அவர்கள் சொன்ன செய்திகள் எவை? சொல்லாத செய்திகள் எவை? என்பதைக் கண்டறிவதற்காக அறிஞர்கள் ஹதீஸ் கலை என்ற விதிமுறைகளைக் கடைபிடித்தார்கள். இந்த விதிகளில்…

  • அறிவிப்பாளர் நம்பகமானவராக இருக்க வேண்டும்.
  • நினைவாற்றல் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • யாரிடமிருந்து அறிவிக்கின்றாரோ அவரை நேரடியாகச் சந்தித்திருக்க வேண்டும்.
  • மற்ற நம்பகமானவர்களுக்கு மாற்றமாக அறிவிக்கக்கூடாது

என்ற விதிமுறைகளும் உள்ளன. பெரும்பாலும் இவற்றை யாரும் மறுக்கமாட்டார்கள்.

ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதாக அமைய இந்த நிபந்தனைகளும் வேண்டும். இத்துடன் அதன் கருத்து குர்ஆனுக்கு மாற்றம் இல்லாத வகையிலும் இருக்க வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாஅத் கூறிவருகின்றது.

தங்களை ஸலபுகள், சுன்னத் வல்ஜமாஅத்தினர் என்று கூறிக் கொள்பவர்களும் மத்ஹபுவாதிகளும் நாம் கூறும் இந்தக் கருத்தை மறுத்து வருகின்றனர். இந்த விதியின் அடிப்படையில் இதற்கு முன்பு யாரும் ஹதீஸ்களை மறுத்ததில்லை. தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே புதிதாக மறுக்கின்றது என்ற தவறான விமர்சனத்தைச் செய்கிறார்கள்.

உண்மையை மறுக்கும் இவர்கள் உண்மையை உணர வேண்டும் என்பதற்காக அறிஞர்கள் சிலரது கூற்றுக்களை இங்கே குறிப்பிடுகிறோம். இந்த அறிஞர்கள், ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் சரியாக அமைவதுடன் அதன் கருத்தும் சரியாக இருக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறியுள்ளனர்.

நம்பகமான ஆட்கள் அறிவித்தால் அதில் தவறே வராது என்று மனித இயல்புக்கு மாற்றமாகச் சிந்திக்கும் இவர்களுக்கு இந்த அறிஞர்கள் மரண அடி தரும் வகையில் நாம் கூறும் விதியை தெள்ளத் தெளிவாகக் கூறியுள்ளனர்.

நம்பகமானவரின் அறிவிப்பு குர்ஆனுக்கு மாற்றமாக இருந்தால் அதை அறிவித்தவர்கள் நம்பகமானவராக இருந்தாலும் அது நிராகரிக்கப்படும் என்று ஆணித்தரமாகக் கூறியுள்ளனர்.

நாம் இங்கே குறிப்பிடும் அறிஞர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்கள் அல்ல. எராளமான ஹதீஸ்களை அறிவித்தவர்களும் இஸ்லாத்திற்குப் பெரும் பெரும் தொண்டுகளைச் செய்தவர்களும் இமாம் என்று மக்களால் அங்கீகரிக்கப்பட்டவர்களும் ஆவார்கள்.

இவர்களில் பலருடைய வாழ்க்கைக் குறிப்புகளைப் படித்தால் வியக்கும் அளவுக்கு இஸ்லாமிய சமுதாயத்தில் மிகப்பெரிய அந்தஸ்தைப் பெற்றவர்கள். இத்தகையவர்கள், இன்று தவ்ஹீத் ஜமாஅத் கூறும் விதியை நமக்கு முன்பே தெளிவுபடுத்தியுள்ளனர். அவர்கள் கூறுவதை இப்போது பார்ப்போம்.

நல்லறிஞர்களின் வழிமுறை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாக அறிவிக்கப்படும் இரண்டு செய்திகள் ஒன்றிற்கொன்று முரணாக இருக்குமென்றால் குர்ஆனுக்கு ஒத்த செய்தியையே நபியவர்கள் கூறியதாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என பல நல்லறிஞர்கள் வழிகாட்டியுள்ளனர்.

இமாம் ஷாஃபி

அவர்களில் மிக முக்கியமானவர் இமாம் ஷாஃபி அவர்கள் ஆவார்கள். இமாம் ஷாஃபி அவர்கள் தமது ”அர்ரிஸாலா” என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்கள்.

அதிகமான ஹதீஸ்களில் அவை உண்மையானவையா? பொய்யானவையா? என்பதை அறிவிப்பாளர் உண்மையாளரா? பொய்யரா? என்பதை அடிப்படையாக வைத்தே முடிவு செய்யப்படும். ஹதீஸாகக் கருதப் படுவதற்குத் தகுதியற்ற செய்தியை அறிவிப்பாளர் அறிவித்தால் அது பொய்யானது என்றும் நம்பகத்தன்மையில் மிக உறுதியான செய்திக்கோ, அல்லது அதிகமான அறிவிப்புகளுக்கு மாற்றமாக அறிவிப்பாளர் அறிவித்தால் அந்தச் செய்தி பொய் என்றும் மிக உறுதியான அந்த அறிவிப்பு உண்மை என்றும் மிகக் குறைவான குறிபிட்ட செய்திகளில் முடிவு செய்யப்படும்.

நூல்: அர்ரிஸாலா, பாகம்: 1, பக்கம்: 398

இரண்டு செய்திகள் முரண்பட்டால் மிக உறுதியான ஆதாரத்திற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் மிக உறுதியான ஆதாரத்திற்கு முரணான செய்தியை பொய் என்றே முடிவு செய்ய வெண்டும் என இமாம் ஷாஃபி அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள் என்பதை மேற்கண்ட அவருடைய கூற்றிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படும் செய்தியை எவ்வாறு உறுதிப்படுத்த வேண்டும் என்பதை இமாம் ஷாஃபி அவர்கள் தம்முடைய ”அல்உம்மு” என்ற நூலிலும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

ஒரு நம்பகமான அறிவிப்பாளர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து நம்பகமான அறிவிப்பாளர் வரிசையில் ஒரு செய்தியை அறிவித்தால் அது நபியவர்களிடமிருந்து வரும் உறுதியான அறிவிப்பாகும்.

ஒன்றுக்கொன்று முரண்பட்டு வரும் அறிவிப்புகளைத் தவிர நபியவர்கள் கூறிய எந்த ஒரு ஹதீஸையும் நாம் ஒரு போதும் விட்டுவிட மாட்டோம்.

நபியவர்கள் கூறியதாக வரும் ஹதீஸ்கள் முரண்பட்டால் அந்த முரண்பாடு இரண்டு வகைகளில் இருக்கும்.

ஒன்று : இரண்டு செய்திகளில் ஒன்று ”நாஸிஹ்” – புதிய சட்டமாகவும், மற்றொன்று ”மன்ஸுஹ்” – மாற்றப்பட்ட சட்டமாகவும் இருக்கும். இப்போது நாம் புதிய சட்டத்தை அமுல்படுத்துவோம். மாற்றப்பட்ட சட்டத்தை விட்டுவிடுவோம்.

மற்றொரு வகை : இரண்டும் ஒன்றிற்கொன்று முரண்படும். இரண்டில் எது புதிய சட்டம் என்பதற்கு எந்தச் சான்றும் இருக்காது. இப்போது இரண்டு அறிவிப்புகளில் எது உறுதியானதோ அதனை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இரண்டும் (உறுதித் தன்மையில்) சமமானதாக இருந்தால் இரண்டில் எது இறைவேதத்திற்கும், நபி வழிக்கும் ஒத்ததாக உள்ளதோ அதன் பக்கம் நான் சென்று விடுவேன்.

நூல்: அல்உம்மு, பாகம் 7, பக்கம் 201

நபியவர்கள் கூறியதாக நம்பகமான அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் செய்திகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருந்தால் குர்ஆனிற்கும், சுன்னாவிற்கும் ஒத்ததாக உள்ளதை ஏற்று மற்றொன்றை மறுத்து விட வேண்டும் என்பதே இமாம் ஷாஃபி அவர்களின் வழிமுறையாகும். அறிவிப்பாளர்களின் குறைகளை வைத்து மறுக்கப்படுவதைப் போன்று, கருத்தைக் கவனித்தும் ஹதீஸ்கள் மறுக்கப்படும் என்பதை இதன் மூலம் நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

தொழுது கொண்டிருப்பவருக்கு முன்னால் ஒரு பெண், அல்லது நாய், அல்லது கழுதை கடந்து சென்றால் தொழுகை முறிந்து விடும் என்று நபியவர்கள் கூறியதாக நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி ”ஒருவரின் சுமையை மற்றவர் சுமக்கமாட்டார்” (அல்குர்ஆன் 35:18) என்ற குர்ஆன் வசனத்திற்கு முரணாக இருப்பதினாலும், நபியவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது ஆயிஷா (ரலி) குறுக்கே படுத்திருப்பார்கள் என்ற ஹதீஸிற்கு முரணாக இருப்பதினாலும் இதனை இமாம் ஷாஃபி மறுத்துள்ளார்கள். இதன் விபரம் இமாம் ஷாஃபி அவர்களுக்குரிய இஹ்திலாஃபுல் ஹதீஸ், பாகம்: 8, பக்கம் 623ல் இடம் பெற்றுள்ளது.

மேலும் இறந்தவரின் குடும்பத்தினர் அழுவதினால் இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார் என்று நபியவர்கள் கூறியதாக நம்பகமானவர்கள் வழியாக அறிவிக்கப்படும் செய்தியையும் இமாம் ஷாஃபி அவர்கள் மறுத்துள்ளார்கள்.

இந்தச் செய்தியின் கருத்து ”ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான்” (அல்குர்ஆன் 6:164) “மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை” (அல்குர்ஆன் 53:39), ”அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார். அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார்” (அல்குர்ஆன் 99:7, 8), ”ஒவ்வொருவரும் தமது உழைப்புக்கேற்ப கூலி கொடுக்கப் படுவார்கள்” (அல்குர்ஆன் 20:15), ஆகிய இறை வசனங்கள் எந்த அடிப்படையைப் போதிக்கிறதோ அதற்கு எதிராக உள்ளது. இதனை மறுத்து ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தியே குர்ஆனுடைய கருத்திற்கு ஒத்ததாக உள்ளது. என இமாம் ஷாஃபி அவர்கள் தம்மடைய ”இஹ்திலாஃபுல் ஹதீஸ்” என்ற நூலில் பாகம்:8, பக்கம் 648ல் விரிவாக விவரித்துள்ளார்கள்.

இமாம் ஷாஃபி அவர்கள் கூறுகிறார்கள்:

அல்லாஹ்வுடைய வேதத்தின் வெளிப் படையான கருத்திற்கு ஒத்திருக்கும் ஹதீஸ்களே (நபியவர்கள் கூறினார்கள் என்று) உறுதிப்படுத்துவதற்கு தகுதியானவை ஆகும்.

(நூல் : இஹ்திலாஃபுல் ஹதீஸ், பாகம் 8, பக்கம் 661)

குர்ஆனிற்கு முரண்படாமல் இருந்தால்தான் ஒரு ஹதீஸை ஸஹீஹானதாக ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் இமாம் ஷாஃபி கூறியுள்ளார்கள்.

ஒரு ஹதீஸ் சரியாவதற்கான நிபந்தனைகள் முழுமையாகி விட்டால் அதைக் குர்ஆனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது கட்டாயமா? இது குறித்து இமாம் ஷாஃபி அவர்கள், “கட்டாயமில்லை. ஏனென்றால் அந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்படாமல் இருந்தால் தான் அதன் நிபந்தனைகள் முழுமையடையும்” என்று கூறியுள்ளார்கள்.

நூல்: அல்மஹ்சூல், பாகம்: 4, பக்கம்: 438

இவ்வாறு குர்ஆன் என்ற மிகப்பெரும் ஆதாரத்திற்கு முரணாக நபியவர்கள் கூறியதாக ஒரு செய்தி அறிவிக்கப்படுமென்றால் அது மறுக்கப்பட வேண்டும் என்பதே இமாம் ஷாஃபி அவர்களின் வழிமுறை என்பதை மேற்கண்ட விளக்கங்களிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

இமாம் மாலிக்

அடுத்ததாக, “மிக உறுதியான ஆதாரமான குர்ஆனிற்கு முரணாக நபியவர்கள் கூறியதாக அறிவிக்கப் பட்டால் அதனை ஏற்றுக் கொள்வது கூடாது’ என்பதுதான் இமாம் மாலிக் அவர்களின் வழிமுறையாகும்.

ஹிஜிரி நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த இமாம் ”முஹம்மத் இப்னு அப்தில்லாஹ் அல்முஆஃபிரீ” அவர்கள் ”அந்நஸ்ஸுல் காமில்” என்ற தனது நூலில் இமாம் மாலிக் அவர்களின் வழிமுறையைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

மார்க்கத்தின் அடிப்படையான (குர்ஆனிற்கு) முரண்படும் போது தனி நபர் செய்திகளை (இமாம்களில்) ஒரு கூட்டமே மறுத்துள்ளது. அவர்களில் ஒருவர்தான் இமாம் மாலிக் (ரலி) அவர்கள் ஆவார்கள்.

நூல்: அந்நஸ்ஸுல் காமில், பக்கம் 231

தெளிவான சுன்னாவை விட குர்ஆனுடைய வெளிப்படையான கருத்தே மாலிக் இமாமிடம் முற்படுத்தப்பட்டதாகும். மார்க்க மஸாயில்களில் தீர்வு சொல்லும் போதும் இவ்வாறுதான்.

நூல்: அல்ஃபிக்ருஸ் ஸாமி, பாகம் 1, பக்கம் 455

புகாரி 1854வது ஹதீஸ் குர்ஆனின் கருத்திற்கு முரணாக இருப்பதால் இமாம் மாலிக் அவர்கள் குர்ஆனுடைய கருத்திற்கே முக்கியத்துவம் வழங்கியுள்ளார்கள்.

குர்துபீ கூறுகிறார்: கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த பெண்மணி அறிவிக்கும் ஹதீஸ் குர்ஆனுடைய வெளிப்படையான கருத்திற்கு முரண்படுகிறது என்று மாலிக் அவர்கள் கருதுகிறார். ஆகையால் அவர் குர்ஆனுடைய வெளிப்படையான கருத்திற்கே முன்னுரிமை கொடுத்துள்ளார். குர்ஆனுக்குள்ள அங்கீகாரத்தைக் கவனித்தால் குர்ஆனிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

நூல்: பத்ஹுல்பாரீ, பாகம்: 4, பக்கம்: 70

இமாம் அவ்ஸாயீ அவர்களும் இதே வழிமுறையில்தான் சென்றுள்ளார்கள்.

“நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வரும் அனைத்தையும் நாம் ஏற்க வேண்டுமா?” என்று முனீப் என்பவர் அவ்ஸாயீ அவர்களிடம் கேட்டார். அதற்கு அவ்ஸாயீ அவர்கள், “அந்தச் செய்திகளில் அல்லாஹ்வுடைய வேதம் எதை உண்மைப்படுத்துகின்றதோ அதை ஏற்றுக் கொள்வோம். அது நபி (ஸல்) அவர்களிடமிருந்து வந்ததாகும். அல்லாஹ்வின் வேதத்திற்கு மாற்றமாக வரும் செய்திகள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து வந்தவை அல்ல” என்று கூறினார்கள்.

முனீப் அவர்கள், “அந்தச் செய்திகளை நம்பகமானவர்கள் அறிவித்திருக்கின்றார்களே” என்று கேட்டார். அதற்கு அவ்ஸாயீ, “நம்பகமானவர்கள் நம்பகமில்லாதவர்களிட மிருந்து அதைப் பெற்றிருக்கலாமே” என்று கூறினார்கள்.

நூல்: தாரீகு அபீ சுர்ஆ (பாகம் 1, பக்கம் 271)

கருத்தைக் கவனித்தும் ஹதீஸ்களை மறுக்கின்ற வழிமுறைகளை இமாம்கள் பின்பற்றியுள்ளார்கள் என்பதற்கு ஒரு சில சான்றுகளை மட்டுமே இங்கே நாம் எடுத்துக் காட்டியுள்ளோம்.

நபியவர்கள் கூறியதாக அறிவிக்கப்படும் செய்தி, தெளிவான நடைமுறை உண்மைகளுக்கு மாற்றமாக இருக்கும் போதும், அதை விட உறுதியான ஆதாரங்களுக்கு முரண்படும் போதும் மறுக்கப்படும் என்பதே மேற்கண்ட சான்றுகளிலிருந்து நாம் அறிந்து கொள்ளும் உண்மையாகும்.

கருத்தைக் கவனித்து ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்பது தவ்ஹீத் ஜமாஅத்தினுடைய நிலைப்பாடு மட்டுமல்ல என்பதும் மேற்கண்ட சான்றுகளிலிருந்து தெளிவாகிவிட்டது.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களும் குர்ஆனிற்கு முரண்படுகிறது என்ற அடிப்படையில் பல செய்திகளை மறுத்துள்ளார்கள். இதனை நம்முடைய பல நூற்களில் நாம் தெளிவுபடுத்தியுள்ளோம்.

இதன் அடிப்படையில்தான் நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டு அதனால் அவர்கள் பாதிப்பிற்கு உள்ளானார்கள் என்ற செய்தியையும், இப்ராஹீம் நபிக்கு எதிராகப் பல்லி நெருப்பை ஊதியது, குரங்கு விபச்சாரம் செய்து அதற்குக் கல்லெறி தண்டனை கொடுக்கப்பட்டது, நபிகள் நாயகம் அன்னியப் பெண்ணுடன் தனிமையில் இருந்தார்கள், மூஸா நபி மலக்குல் மவ்த்தை அடித்து மலக்கின் விழி பிதுங்கியது, நபியவர்கள் அந்நியப் பெண்ணை ஸாலிமிற்குப் பாலூட்டுமாறு கூறினார்கள் என்ற செய்தி, சுலைமான் நபிக்கு நூறு குழந்தைகள் பிறக்கும் என்று மறைவான விஷயத்தை அவர் முன்கூட்டியெ அறிவித்ததாக வரும் செய்தி போன்றவற்றையும் இவையல்லாத இன்னும் சில செய்திகளையும் தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்கள் மறுத்துள்ளனர்.

ஒரு செய்தி குர்ஆனுக்கு, அல்லது நிரூபிக்கப்பட்ட உலக உண்மைக்கு மாற்றமாக வந்தால் அதனை நபியவர்கள் கூறியதாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதை நாம் விரிவாகக் கண்டோம்.

கருத்தைக் கவனித்து ஹதீஸ்கள் எவ்வாறெல்லாம் மறுக்கப்படும் என்பதை ஹதீஸ்கலை அறிஞர்கள் பல பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளனர். அவை பற்றிய விளக்கங்களைக் காண்போம்.

ஷாத்

ஹதீஸ் கலையில் “ஷாத்” என்ற ஒரு விதியிருக்கிறது. அதாவது, ஒரு நம்பகமான அறிவிப்பாளர் அறிவிக்கும் செய்தி, அவரைவிட நம்பகமான ஒரு அறிவிப்பாளரோ அல்லது பலரோ அறிவிக்கும் செய்திக்கு மாற்றமாக இருந்தால் அந்தச் செய்தி ஷாத் எனப்படும்.

நம்பகமான ஒரு அறிவிப்பாளர் அவரை விட நம்பகத்தன்மையில் சற்று வலுவான ஒருவருக்கோ அல்லது ஒரு கூட்டத்திற்கோ மாற்றமாக அறிவிக்கும் போது அவருடைய ஹதீஸ் ஷாத் என்று கூறி மறுக்கப்படும். அதே நேரத்தில் அவரை விட வலுவானவருடைய செய்தி மக்பூல் என்று ஏற்றுக்கொள்ளப்படும்.

ஷாதிற்கு உதாரணம்

“உங்களில் ஒருவர் ஃபஜர் தொழுகையை தொழுதால் அவர் தனது வலது புறம் ஒருக்களித்து படுத்துக் கொள்ளட்டும்” என்று நபியவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் என்ற செய்தி அபூதாவூத் (1070) மற்றும் திர்மிதியில் (385) பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதைப் பற்றி இமாம் பைஹகீ அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்:

இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான அப்துல் வாஹித் என்பவர் இந்தச் செய்தியில் பல அறிவிப்பாளர்களுக்கு மாற்றமாக அறிவிக்கிறார்.

ஏனென்றால், பெரும்பான்மையான அறிவிப்பாளர்கள் இந்தச் செய்தியை நபியவர்களுடைய கூற்றாக அல்லாமல், நபியவர்கள் செய்ததாகத் தான் அறிவிக்கிறார்கள். இன்னும், இந்த ஹதீஸை அஃமஷ் எனும் அறிவிப்பாளர் வழியாக அறிவிக்கக்கூடிய நம்பகமான அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் அப்துல் வாஹித் மாத்திரம் (நபியவர்களின் செயலாக அல்லாமல் கட்டளையாக) அறிவிக்கிறார் என்று இமாம் பைஹகீ கூறுகிறார்கள்.

(தைஸீருல் முஸ்தலஹில் ஹதீஸ் – பக்கம் 124)

மேற்கண்ட செய்தியில், பல நம்பகமான அறிவிப்பாளர்கள் நபியவர்கள் ஒருக்களித்துப் படுத்துக்கொள்வார்கள் என்று அறிவிக்கும் போது ஒரு அறிவிப்பாளர் மாத்திரம் “படுத்துக் கொள்ளட்டும்” என்று நபியவர்கள் மக்களுக்குக் கட்டளையிடும் விதமாக அறிவிப்பதினால், பெரும்பான்மையான அறிவிப்பாளர்களுக்கு மாற்றமாக இவர் அறிவிக்கும் செய்தி அமைந்திருக்கிறது என்ற அடிப்படையில் அந்த ஒரு அறிவிப்பாளருடைய செய்தியை ஷாத் என்று கூறி மறுக்கிறார்கள்.

இங்கு, ஷாத் என்று மறுக்கப்படக்கூடிய அறிவிப்பு மறுக்கப்படுவதன் காரணமே அவரை விட வலுவானவருக்கு அவர் முரணாக அறிவிக்கின்றார் என்பதுதான்.

அப்படியென்றால் ஓர் உறுதியான அறிவிப்பாளரை விடப் பலகோடி உறுதியான அறிவிப்பாளர்களால் அறிவிக்கப்பட்ட திருமறைக் குர்ஆனுக்கு, அறிவிப்பாளர் தொடர் சரியாக அமைந்துள்ள ஒரு ஹதீஸ் நேர்முரணாக வருகிறது என்றால் அதை மறுப்பது வழிகேடா?

இரண்டு ஹதீஸ்களுக்கிடையில் இது போன்ற முரண்பாடு வரும்போது ஷாத் என்று கூறி மறுப்பவர்கள், குர்ஆனுக்கு எதிராக ஒரு ஹதீஸ் வரும்போது, அதை மறுப்பதற்குத் தயங்குவதேன்?

அறிவிப்பாளர் தொடர் சரியான எந்தச் செய்தியும் குர்ஆனுக்கு மாற்றமாக வராது; ஆனால், ஹதீஸிற்கு மாற்றமாக அறிவிப்பாளர் தொடர் சரியான செய்திகள் வரும், என்றால் இது குர்ஆனை விட ஹதீஸை முன்னிறுத்தும் போக்கு இல்லையா?

முத்ரஜ்

ஹதீஸ் கலையில் “முத்ரஜ்” என்ற ஒரு வகை உள்ளது.

அதாவது, அறிவிப்பாளரின் சொந்தக் கருத்து நபி (ஸல்) அவர்கள் கூறியதைப் போன்று இடம் பெற்று விடும். இதற்கு இடைச் செருகல் (முத்ரஜ்) என்று கூறுவர்.

இது போன்ற இடங்களில் இந்த வார்த்தை, யாரோ ஒரு அறிவிப்பாளரால் அறிந்தோ, அறியாமலோ நுழைக்கப்பட்டது என்று கண்டு பிடிப்பதற்குப் பல வழிமுறைகளை ஹதீஸ்கலை மேதைகளான இமாம்கள் குறிப்பிடுகிறார்கள்.

அதில் ஒரு முறைதான் “நபி(ஸல்) அவர்கள் இந்த வாசகத்தைக் கூறுவது அசாத்தியமானது என்று முடிவெடுப்பது”.

(முத்ரஜை அறியும் வழிமுறைகளில் ஒன்று) நபியவர்களுடன் அதை இணைப்பது அசாத்தியமாவதாகும்.

(நுகத் அலா கிதாபி இப்னிஸ் ஸலாஹ்,

பாகம் 2, பக்கம் 812)

அதாவது, நபி (ஸல்) ஒருபோதும் இதுபோன்ற வார்த்தையைக் கூறியிருக்க மாட்டார்கள் என்று உளப்பூர்வமாக முடிவெடுப்பதாகும்.

முத்ரஜிற்கு உதாரணம்

“அடிமைக்கு இரண்டு கூலிகள் இருக்கிறது. என்னுடைய உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுவது மற்றும் ஹஜ் செய்வதும், எனது தாய்க்கு நல்லறம் செய்வதும் இல்லையென்றால் நான் அடிமையாக மரணிப்பதற்கே விரும்புகிறேன்” என்று நபியவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தியை ஹதீஸ் துறை இமாம்கள் எடுத்து சொல்லி முத்ரஜிற்கு உதாரணமாகக் குறிப்பிடுகிறார்கள். மேலும் “என்னுடைய உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுவது மற்றும் ஹஜ் செய்வதும், எனது தாய்க்கு நல்லறம் செய்வதும் இல்லையென்றால் நான் அடிமையாக மரணிப்பதற்கே விரும்புகிறேன்” என்ற கூற்று அபூஹுரைராவுடைய கூற்றாகும்.

நபியவர்கள் இதைக் கூறுவதற்கு சாத்தியமில்லை. ஏனென்றால், நபியவர்கள் அடிமைத்தனத்தை ஆசைப்படவும் மாட்டார்கள். மேலும் நபியவர்கள் தன்னுடைய தாய்க்குப் பணிவிடை செய்வதற்கு நபியவர்களின் தாயார் உயிரோடிருக்கவுமில்லை என்று கூறி மேற்கண்ட வாசகத்தை ஹதீஸ்கலை அறிஞர்கள் “முத்ரஜ்” என்று குறிப்பிடுகிறார்கள்.

(தைஸீருல் முஸ்தலஹில் ஹதீஸ் – பக்கம் 132)

இதே வழிமுறையைத் தான் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை நாம் விமர்சனம் செய்யும் போது அதனுடைய முரண்பாட்டை விளக்கிவிட்டு, ஒருபோதும் நபி (ஸல்) அவர்கள் வஹீ செய்திக்கு முரணாகப் பேசவே மாட்டார்கள் என்று ஆணித்தரமாகக் கூறுகிறோம்.

இப்படிக் கூறுவதை ஹதீஸ் மறுப்பு கொள்கை என்று கூறினால், மேலே நாம் எடுத்துக் காட்டிய இந்த ஹதீஸ்கலை விதியை, ஹதீஸ்கலையைத் தொகுத்த ஏராளமான இமாம்கள் கூறுகிறார்களே! இவர்கள் அனைவரும் ஹதீஸ் மறுப்புக் கொள்கையைப் போதிக்கிறார்கள் என்று இவர்கள் கூறத்தயாரா?

இங்கே, ஒரு விஷயத்தை நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.

குர்ஆனில் இது போன்ற இடைச்செருகல் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆகையினால்தான் குர்ஆனுடைய பாதுகாப்பிற்கும் ஹதீஸ்களுடைய பாதுகாப்பிற்கும் மத்தியில் வித்தியாசம் இருக்கிறது என்று நாம் கூறுகிறோம். ஹதீஸ்களை மறுப்பதற்கல்ல.

மக்லூப்

நம்பகமான அறிவிப்பாளர்கள்கூட சில இடங்களில் மாற்றமாக அறிவிப்பார்கள் என்பதை நிரூபிக்கும் மற்றுமொரு ஹதீஸ்கலை விதிதான் “மக்லூப்” என்பதாகும்.

அதாவது, ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் ஒருவருடைய பெயரை மாற்றி அறிவிப்பதோ அல்லது அதனுடைய மத்தனின் (கருத்தின்) வார்த்தைகளை முற்படுத்தியோ அல்லது பிற்படுத்தியோ அறிவித்துவிடுவது.

மக்லூபிற்கு உதாரணம்

“தன்னுடைய நிழலைத் தவிர வேறு எந்த நிழலும் இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு நபர்களுக்கு தனது நிழலைத் தருவான். அதில் ஒருவர், “தனது இடது கை செலவு செய்ததை வலது கை அறியாத அளவுக்கு மறைத்து தர்மம் செய்தவர்” என்று நபியவர்கள் கூறியதாக முஸ்லிமில் (1712) வரக்கூடிய செய்தியில் சில அறிவிப்பாளர்கள் வலது கை என்று வரக்கூடிய இடத்தில் இடது கை என்று மேற்கூறப்பட்டவாறு மாற்றமாக அறிவிக்கிறார்கள். எனவே ஹதீஸ்துறை அறிஞர்கள் “இடது கை செய்கின்ற தர்மம்” என்ற செய்தியை “மக்லூப்” என்று மறுக்கிறார்கள்.

(தைஸீருல் முஸ்தலஹில் ஹதீஸ்-பக்கம் 135)

இந்த இடத்தில் தவறு செய்திருப்பவர் நம்பகமான அறிவிப்பாளர் தான். அவர் பல நம்பகமானவர்கள் “வலது கரம் செய்யும் தர்மம்” என்று அறிவித்திருக்க அதற்கு மாற்றமாக இவர் மாத்திரம் “இடது கை” என்று அறிவிப்பதினால், அவர் தவறாக அறிவித்து விட்டார் என்று ஹதீஸ் துறையில் அனைத்து இமாம்களும் முடிவெடுத்து விட்டனர்.

அப்படியென்றால், திரும்பவும் நாம் ஆரம்பத்தில் கேட்ட அதே கேள்வியை இங்கே கேட்பது பொருத்தமாக இருக்கும்.

நம்பகமான மனிதர்களுக்கு மாற்றமாக இங்கு ஒருவர் அறிவித்திருப்பதினால் இது மறுக்கப் படுகிறது என்றால் அனைத்து இமாம்களும் ஏன் நம்மை எதிர்ப்பவர்களும் இந்த விதியை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஹதீஸ் மறுப்பு கொள்கையை தங்களுக்குத் தாங்களே கூறிக் கொள்கிறார்கள். அல்லது நம்பகமான அறிவிப்பாளர் தவறிவிட்டிருக்கிறார் என்று புரிந்துகொண்டு குர்ஆனுக்கு முரணாகவும் இது போன்று அவர் அறிவிக்க வாய்ப்புள்ளது என்று தங்களையும் அறியாமல் ஒப்புக் கொள்கிறார்கள்.

முஸஹ்ஹஃப்

நம்பகமான அறிவிப்பாளர், தான் அறிவிக்கும் ஒரு ஹதீஸின் வார்த்தையையோ அல்லது கருத்தையோ அவர் அறிவிக்காத விதத்தில் மாற்றி அறிவிப்பதை ஹதீஸ் கலையில் “முஸஹ்ஹஃப்” என்று சொல்வார்கள்.

முஸஹ்ஹஃபிற்கு உதாரணம்

“நாங்கள் அனஸா எனும் கோத்திரத்தைச் சார்ந்த அந்தஸ்து மிக்க கூட்டத்தினர். நபியவர்கள் எங்களை நோக்கி தொழுதார்கள் என்று அபூ மூஸா அவர்கள் கூறுவதின் நோக்கம், “நபியவர்கள் அனஸாவை நோக்கி தொழுதார்கள்” எனும் அஹ்மதில் (18783) இடம்பெற்றிருக்கும் ஹதீஸாகும். நபியவர்கள் அபூ மூஸாவுடைய கோத்திரத்தை நோக்கி தொழுதார்கள் என்று அவர்கள் தவறாக விளங்கி கொண்டார்கள்.

இங்கே அனஸா என்ற வார்த்தையின் மூலம் குறிப்பிடுப்படுவது தொழக்கூடியவனுக்கு முன்னால் நட்டப்படும் ஈட்டியாகும் என்று கூறி “எங்களை நோக்கி தொழுதார்கள்” என்ற அறிவிப்பை “முஸஹ்ஹஃப்” என்று ஹதீஸ்கலை வல்லுனர்கள் முடிவுசெய்கிறார்கள்.

(தைஸீருல் முஸ்தலஹில் ஹதீஸ் – பக்கம் 146)

இது போன்று தவறாக அறிவிக்கும் ஒரு அறிவிப்பாளர் பல தடவை தவறாக அறிவிக்கும் போதுதான் அவர் பலவீனமானவராக கருதப்படுவார்.

ஓரிரு முறை இவ்வாறு அறிவிப்பதால் அந்த அறிவிப்பாளர் பலவீனமானவர் என்ற தரத்தை அடையமாட்டார் என்பதும், ஹதீஸ்கலை இமாம்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதியாகும்.

அவர், தொடர்ந்து தவறாக அறிவிப்பதை வேறு சில ஹதீஸ்களை ஆய்வு செய்வதின் மூலம் கண்டுபிடிக்க முடியும். இவ்வாறு ஹதீஸை ஆய்வு செய்து மற்ற ஹதீஸ்களுக்கு மாற்றமாக அவர் அறிவித்திருக்கிறார் என்று தெரியும்போது ஒரு அறிவிப்பாளரை பலவீனமாக்க முடியும் என்றால் திருமறைக் குர்ஆனின் நம்பகத் தன்மையை முன்னிறுத்தி அதற்கு முரணாக வருகின்ற செய்திகளை மறுப்பதில் என்ன தவறிருக்கிறது என்பதை அறிவுடையோர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

முழ்தரிப்

இறுதியாக ஹதீஸ்கலையில் “முழ்தரிப்” என்று ஒரு வகை உண்டு.

முழ்தரிப் என்றால், ஒரு செய்தி முரண்பாடாக பல வழிகளில் அறிவிக்கப்படும். ஆனால், அந்த அறிவிப்புகளுக்கு மத்தியில் ஷாத் என்ற வகையில் கூறியது போன்று எந்த காரணமும் கூறி அதில் ஒரு அறிவிப்பை மற்ற அறிவிப்புகளை விட உயர்த்தவோ தாழ்த்தவோ முடியாதவாறு முரண்படும். அதாவது, அந்த அறிவிப்புகள் பலத்திலும் சமமானதாக இருக்கும்.

அல்லது, ஒரு குறிப்பிட்ட அறிவிப்பாளர் ஒரே செய்தியை முரண்பட்ட பல வகைகளில் அறிவிப்பார்.

உதாரணமாக, ஒருவர் ஒருமுறை அறிவிக்கும்போது நான் இவரைப் பார்த்திருக்கிறேன் என்றும், மற்றொரு முறை அறிவிக்கும்போது நான் இவரைப் பார்க்கவில்லை என்றும் மாற்றி மாற்றி அறிவிப்பதாகும்.

முழ்தரிபுக்கு உதாரணம்

ஸகாத்தைப் பற்றி நபியவர்களிடம் கேட்கப்பட்டது. “செல்வத்தில் ஸகாத் அல்லாத ஏனைய கடமைகளும் இருக்கிறது” என்று நபியவர்கள் கூறியதாக ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களுடைய செய்தி திர்மிதியில் 659 (596) இல்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே சமயம், இமாம் இப்னு மாஜாவில் 1789 (1779) எண்ணில் “செல்வத்தில் ஸகாத்தைத் தவிர வேறு கடமையில்லை” என்ற செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

இமாம் இராகீ அவர்கள், இந்தச் செய்திகள் இணைத்து விளக்கம் கொடுக்க முடியாத அளவுக்கு ஒன்றுக்கொன்று நேர் முரணான “முழ்திரிப்” என்ற வகையை சார்ந்ததாகும் என்று கூறுகிறார்கள்.

(தைஸீருல் முஸ்தலஹில் ஹதீஸ் – பக்கம் 143)

இதுபோன்று முரண்பட்டு அறிவிக்கப்படும் அந்த அறிவிப்புகளில் அறிவிப்பாளர் வரிசை அனைத்தும் சரியானதாக இருக்கும்.

ஆனால், அதில் கூறப்படும் செய்தி முரண்பட்ட பல கோணங்களில் வருவதினால் அது பலவீனமானது என்று முடிவு செய்ய முடியும் என்பது ஹதீஸ்கலை விதி என்றால், இதற்கும் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை மறுக்கவேண்டும் என்ற விதிக்கும் மத்தியில் என்ன வித்தியாசம் இருக்கிறது? என்பதை அறிவுடையோர் சிந்திக்கட்டும்.

இந்த இடத்தில் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். இரண்டு ஹதீஸ்கள் நம்பகமானவர் வழியாக வந்திருந்தாலும், அதில் ஒன்று மற்றொன்றுடன் மோதும் போது, அதில் ஒன்று மற்றொன்றை விட இந்த விதத்தில் சிறந்தது என்று காரணம் சொல்ல முடியாமல் போகும் நேரத்தில் அந்த இரண்டு செய்தியுமே மறுக்கப்படும் என்பது ஹதீஸ்கலை விதி.

அப்படி மறுக்கப்படும் போது இந்தச் செய்தியை அறிவிக்கின்ற அறிவிப்பாளர் இதுவரை நம்பகமானவராகக் கருதப்பட்டவர்தான். ஆனால், அவர் அறிவிக்கின்ற செய்திகளில் முரண்பாடு தெளிவாகிறது என்பதால் அவருடைய அறிவிப்புகள் பலவீனமாக்கப்படுகிறது என்றால், குர்ஆனோடு இது போன்ற முரண்பாடுகள் ஒரு போதும் நிகழாது என்று சொல்வதை எவ்வாறு நாம் ஏற்றுக்கொள்வது?

மேலே நாம் எடுத்து காட்டிய உதாரணங்கள் அனைத்தும் ஹதீஸ்கலை இமாம்களால் எடுத்துக்காட்டப்படும் உதாரணங்களாகும். விளக்கத்திற்காக வேண்டி இங்கே அதை குறிப்பிட்டுள்ளோம்.

திருமறைக்குர்ஆனுடன் அறிவிப்பாளர் சரியான சில ஹதீஸ்கள் முரண்படும் என்ற கருத்தை ஹதீஸ் கலையில் ஆழ்ந்த ஞானமுள்ள பல இமாம்கள் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதை இதற்கு முன்னால் பல இடங்களில் நாம் சுட்டிக் காட்டியுள்ளோம். ஆகையால் அதை இங்கே கூறுவதை விட்டும் சுருக்கி விட்டோம். அது போன்ற இமாம்களுடைய கருத்துக்களைப் பார்க்க விரும்பக்கூடியவர்கள் ஹதீஸ் கலை சம்பந்தமான நமது ஆக்கங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

எனவே, நம்பகமான அறிவிப்பாளர்கள் கூடத் தவறாக அறிவித்து விடுவார்கள் என்பதற்கு ஒரே ஒரு ஹதீஸை மாத்திரம் இங்கே உங்கள் பார்வைக்கு முன்வைக்கிறோம்.

நபி(ஸல்) அவர்கள், மைமூனா (ரலி) அவர்களை இஹ்ராம் அணிந்த நிலையில் மணம் முடித்து கொண்டார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம்-2755 (3517)

ஆனால், மைமூனா (ரலி) அவர்களே அறிவிக்கக்கூடிய பின்வரும் செய்தியில் இதற்கு மாற்றமாக இருப்பதைக் காணலாம்.

நபி(ஸல்) அவர்கள், என்னை இஹ்ராம் அணியாத நிலையில் தான் திருமணம் முடித்துக் கொண்டார்கள் என மைமூனா (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம்-2757 (3519)

இந்த இரண்டு செய்தியுமே “ஸஹீஹ் முஸ்லிமில்” 3517, 3519 ஆகிய எண்களில் அறிவிப்பாளர் வரிசை சரியான செய்தியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த இரண்டு செய்திகளில், மைமூனா (ரலி) அவர்கள் தன்னைப் பற்றி அறிவிப்பதுதான் சரியாக இருக்க முடியும் என்பதை, நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியவர் திருமணம் முடிக்கக்கூடாது என்று தடை செய்த முஸ்லிமில் 2753 (3516) வது செய்தியாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கும் ஹதீஸ் தெளிவுப்படுத்துகிறது.

இறுதியாக, ஹதீஸ் கலையில் ஒரு ஹதீஸை ஸஹீஹானது என்று அந்த துறையின் இமாம்கள் உறுதிசெய்துவிட்டால் எந்தச் சந்தேகமும் இல்லாமல் அது ஸஹீஹானது தான் என்று கூறமுடியாது. இதை நாம் கூறவில்லை. ஹதீஸ் கலையின் அடிப்படையே இதுதான்.

ஒரு ஹதீஸ் சரியானது என்று முடிவு செய்வதற்கு 5 நிபந்தனைகள் அவசியமாகும் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

1. ஆரம்ப அறிவிப்பாளரிடமிருந்து கடைசி அறிவிப்பாளர் வரை ஒரு தொடரில் எந்த ஒரு அறிவிப்பாளரும் விடுபடாமல் தொடர வேண்டும்.

2. ஒவ்வொரு அறிவிப்பாளரும் நேர்மையானவராக இருக்க வேண்டும்.

3. மனனமாகவோ அல்லது எழுத்து வடிவிலோ ஹதீஸைத் துல்லியமாகப் பாதுகாத்திருக்க வேண்டும்.

4. தன்னை விட மிக நம்பமான அறிவிப்பாளருக்கு மாற்றமாக செய்தியை அறிவிக்கக்கூடாது.

5. ஹதீஸைப் பாதிக்கின்ற குறை இடம்பெற்றிருக்கக்கூடாது.

இந்த ஐந்து நிபந்தனைகள் இடம் பெற்றுவிட்டால் அந்த ஹதீஸ் சரியானது என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இந்த அடிப்படையில் ஒரு ஹதீஸ் சரியானது என்று சொன்னால், மேற்கண்ட ஐந்து நிபந்தனைகள் அந்த ஹதீஸில் உறுதியாகின்றது என்று தான் அர்த்தமே தவிர அது நூற்றுக்கு நூறு சரி என்றாகி விடாது.

ஏனென்றால் மறதி, தவறு போன்றவை ஒரு நம்பகமானவருக்கும் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.

ஸஹீஹாக வரக்கூடிய ஒரு செய்தியில் அறிவிப்பாளரின் நம்பகத்தன்மையை முன்னிறுத்தி அதை ஏற்றுக் கொள்ளவேண்டும்.

அதில் குர்ஆனுக்கு மாற்றமான கருத்துக்கள் இடம்பெற்றிருப்பது உறுதியாகத் தெளிவாகும் போது அதை நிறுத்தி வைத்து விட்டு திருமறைக் குர்ஆனை முன்னிறுத்துவது தான் அறிவவுடையோரின் தன்மையாக இருக்க முடியும்.

ஆகையால், நாம், குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று ஒரு செய்தியை மறுப்பது குர்ஆனையும் ஹதீஸ்களையும் பாதுகாக்கும் நோக்கில் தானே தவிர அதை மறுக்க வேண்டும் என்ற நோக்கில் அல்ல என்பதை மேற்கூறப்பட்ட விஷயங்களை வைத்து அறிவுடையோர் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்