Tamil Bayan Points

19) வஸீலா என்பது என்ன?

நூல்கள்: முஹ்யித்தீன் மவ்லித் ஓர் ஆய்வு

Last Updated on October 30, 2022 by

யார் தமது தேவைகளுக்காக அவரை (அப்துல் காதிர் ஜீலானியை) வஸீலாவாக ஆக்கிக் கொள்வார்களோ அவர்களின் தேவைகள் குல்சும் கடலளவு இருந்தாலும் நிறைவேற்றப்படும்.

இஸ்லாத்திற்குள் இணை வைக்கும் கொள்கையை உருவாக்கியவர்கள் அதை நியாயப்படுத்துவதற்காக வஸீலா எனும் ஆயுதத்தைக் கையில் எடுப்பது வழக்கம். வஸீலா தேடுமாறு அல்லாஹ்வே கட்டளையிட்டுள்ளான். நாங்கள் அவ்லியாக்களை வஸீலாவாகத் தான் பயன்படுத்துகிறோம். எனவே இது இணை வைத்தலில் சேராது என்று வாதிடுகின்றனர்.

இறந்து போனவர்களிடம் பிரார்த்திப்பதும் இன்னாரின் பொருட்டால் இதைத் தா என்று இறைவனிடம் கேட்பதும் தான் வஸீலா என்று மக்களை ஏமாற்றி வருகின்றனர். எனவே வஸீலா பற்றி அறிந்து கொண்டால் தான் இந்த வரிகளில் உள்ள அபத்தத்தைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

வஸீலா தேடுமாறு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளது உண்மை தான். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அல்லாஹ்விடம் கண்டிப்பாக வஸீலா தேட வேண்டும் என்பதிலும் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. வஸீலாவை மறுப்பவன் அல்லாஹ்வின் வேதத்தையே மறுத்தவனாவான் என்பதிலும் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

வஸீலாவுக்கு இவர்கள் தரும் விளக்கத்தில் தான் நமக்கு ஆட்சேபனை உள்ளது.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்! அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! வெற்றி பெறுவீர்கள். நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்! அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! வெற்றி பெறுவீர்கள்.

(அல்குர்ஆன் 5.35)

இது தான் வஸீலா தேடுமாறு கட்டளையிடும் வசனம். இன்னாரின் பொருட்டால் இதைத் தா என்று பிரார்த்திப்பது தான் வஸீலாவாகும் என்ற கூற்று எவ்வளவு அபத்தமானது என்பதை அறிந்து வஸீலாவின் சரியான பொருள் என்ன என்பதை அறிவோம்.

இந்த வசனத்தில் நம்பிக்கை கொண்டவர்களே என்று இறைவன் அழைக்கிறான். இந்த அழைப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலிருந்து இன்று வரை இனி உலகம் அழியும் வரை உள்ள அத்தனை மூஃமீன்களும் அடங்குவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் இந்த அழைப்பில் முதலில் அடங்குவார்கள். இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு இந்த வசனத்தை ஆராய்வோம்.

மூஃமீன்களே என்று இறைவன் அழைத்துவிட்டு அவர்கள் செய்ய வேண்டிய சில கடமைகளை இவ்வசனத்தில் கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் என்று ஆரம்பமாகக் கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சுகின்ற இந்தக் கடமையை அனைத்து முஸலிம்களும் நிறைவேற்றியாக வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மற்றவர்களை விட அதிகம் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அல்லாஹ்வை அவ்வாறே அதிகம் அஞ்சினார்கள்.

இந்தக் கட்டளையில் யாருக்கும் எந்த விதிவிலக்கும் இல்லை. எந்த மூஃமீனும் அல்லாஹ்வை அஞ்சாதிருப்பதற்கு அனுமதிக்கப்பட்டவரல்லர்.

அடுத்ததாக அல்லாஹ்விடம் வஸீலாவைத் தேடுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். அல்லாஹ்விடம் வஸீலாத் தேடும் இந்தக் கடமையையும் அனைத்து மூஃமீன்களும் நிறைவேற்றியாக வேண்டும். மற்றவர்களை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் பால் அதிகமதிகம் வஸீலாத் தேடியாக வேண்டும். இன்னொருவரின் பொருட்டால் இதைத் தா என்று இறைவனிடம் கேட்பது தான் வஸீலா என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யார் பொருட்டால் தமது தேவைகளைக் கேட்டார்கள்? யார் பொருட்டாலும் அவர்கள் கேட்கவில்லை என்றால் வஸீலாத் தேடுங்கள் என்ற கட்டளையை அவர்கள் மீறி விட்டார்களா?

இந்தப் பெரியாரின் பொருட்டால் இதைத் தா என்று கேட்கின்றனர். இதன் மூலம் வஸீலாத் தேடுங்கள் என்ற கட்டளையை நிறைவேற்றி விட்டதாக நம்புகின்றனர். எந்தப் பெரியாரும் மூஃமீன்களில் ஒருவர் தாமே அவரும் கூட வஸீலாத் தேட வேண்டுமே? அவர் யார் பொருட்டால் தேடினார்? இதைச் சிந்தித்தால் வஸீலாவுக்கு இவர்கள் கூறும் விளக்கம் அபத்தமானது என்பதை அறியலாம்.

இவர்கள் யாரிடம் பிரார்த்திக்கிறார்களோ அவர்களில் (இறைவனுக்கு) மிகவும் நெருக்கமானவர்களே. தமது இறைவனை நோக்கி வஸீலாவைத் தேடுகின்றனர். அவனது அருளை எதிர்பார்க்கின்றனர். அவனது வேதனைக்கு அஞ்சுகின்றனர். உமது இறைவனின் வேதனை அச்சப்பட வேண்டியதாகும்.

(அல்குர்ஆன் 17:57)

சாதாரண மக்கள் அல்லாஹ்வின் பால் வஸீலாத் தேடுகிறார்களோ இல்லையோ அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமான அடியார்கள் நிச்சயமாக அல்லாஹ்வின் பால் வஸீலாத் தேடிக்கொண்டிருக்கின்றனர் என்பதை இவ்வசனம் கூறுகிறது.

எல்லா மூஃமீன்களும் குறிப்பாக நல்லடியார்களும் அதிலும் குறிப்பாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் தேடக்கூடிய வஸீலா என்பது எது? நிச்சயமாக இவர்கள் கூறக்கூடிய வஸீலா அன்று.

அப்படியானால் வஸீலாவின் விளக்கம் என்ன? வஸீலா எனும் வார்த்தைக்கு நெருக்கம். நெருங்குவதற்கான சாதனம். நெருங்குவதற்கான வழி என்று அரபு அகராதியில் பொருள் கூறப்படுகின்றது.

அல்லாஹ்வின் பால் வஸீலாவைத் தேடுங்கள் என்றால் அல்லாஹ்வின் பால் நெருங்குவதற்கான வழியைத் தேடுங்கள் என்பதாகும்.

இந்தப் பொருளில் மேற்கண்ட இரு வசனங்களுக்கும் பொருள் செய்து பாருங்கள். மூஃமீன்களே அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அவன் பால் நெருங்குவதற்கான (வஸீலாவை) வழியைத் தேடிக் கொள்ளுங்கள். இப்படிப் பொருள் கொள்ளும் போது இந்தக் கட்டளை முழுமையாக அனைவராலும் நிறைவேற்றப்படத்தக்கதாக அமைகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அல்லாஹ்வை அஞ்சினார்கள். அவன் பால் நெருங்குவதற்கான வழியைத் தேடினார்கள். நல்லடியார்களும் தேடினார்கள்.

வஸீலா என்பதன் பொருள் இறைவனை நெருங்குவதற்காக இறைவன் நமக்குக் கற்றுத் தந்துள்ள தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ், மற்றுமுள்ள வணக்க வழிபாடுகளே. அந்த வணக்க வழிபாடுகள் மூலமாக இறைவனின் நெருக்கத்தைத் தேட வேண்டும். அதையே வஸீலா பற்றிக் கூறும் வசனங்கள் கூறுகின்றன. அகராதியில் கூறப்பட்ட பொருளுக்கு இது தான் பொருத்தமாக உள்ளது.

மேலும் இவ்வாறு பொருள் கொள்வது தான் அறிவுக்கு ஏற்றதாக உள்ளது. எப்படியென்று பார்ப்போம்.

ஒரு முதலாளியிடம் நாம் சம்பளத்திற்கு வேலை செய்கிறோம். அவரது கட்டளைகளைச் சரியாக சிறப்பாக நிறைவேற்றிவிட்டு அவரிடம் சென்று ஐயா நீங்கள் கூறிய வேலைகளைச் சிறப்பாகச் செய்து முடித்து விட்டேன். எனக்கு இதைத் தாருங்கள். அதைத் தாருங்கள் என்று கேட்கிறோம். அவர் மகிழ்ந்து நாம் கேட்டதைத் தருவார்.

அந்த முதலாளியிடம் நம்மைப் போல் மற்றும் சிலர் பணியாற்றுகின்றனர். அவர்கள் நம்மை விடச் சிறப்பாகவும் பணி புரிகின்றனர். நாம் அந்த முதலாளியிடம் சென்று ஐயா நீங்கள் கூறிய பணிகளை இவர்கள் சிறப்பாகச் செய்துள்ளனர். எனவே எனக்கு இதைத் தாருங்கள். அதைத் தாருங்கள் என்று கேட்கிறோம். இவ்வாறு நாம் கூறுவதைக் கேட்டால் நாம் சுய நினைவுடன் தான் கூறுகிறோமா என்ற ஐயம் கொள்வார். அவர்கள் சிறப்பாகப் பணியாற்றியதற்காக உனக்கேன் நான் எதையும் தர வேண்டும்? என்று கேட்பார். இந்த நிலையில் இன்னாரின் பொருட்டால் இதைத் தா என்று வஸீலாவுக்குப் பொருள் கொள்ளக்கூடிய நிலையும் உள்ளது.

இறைவா உனது கட்டளைகளைச் சரியாக நிறைவேற்றினேன். அதற்காக இதைத் தா என்று கேட்டால் அர்த்தமிருக்கிறது. இவ்வாறு கேட்பதை விடுத்து. இறைவா இந்த நல்லடியார் உனது கடமைகளைச் சரியாக நிறைவேற்றியதால் எனக்கு இதைத் தா என்று கேட்பதில் ஏதேனும் அர்த்தமள்ளதா? அவர்கள் எனது கடமைகளைச் செய்தால் அவர்களுக்கு நான் கொடுப்பேன். அவர்கள் எனது கடமைகளைச் செய்வதற்காக உனக்கு நான் ஏன் தர வேண்டும்? என்றெல்லாம் இறைவன் கேட்க மாட்டானா? சாதாரண மனிதர்களுக்கு விளங்கக்கூடிய நியாயம் இறைவனுக்கு விளங்காது என்று இவர்கள் நினைக்கிறார்களா? இந்த அர்த்தமற்ற உளறலில் உள்ள அபத்தத்தைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில் தான் இறைவன் இருக்கின்றானா? இதைச் சிந்திப்பவர்கள் வஸீலாவின் சரியான பொருள் என்னவென்பதை உணர்வார்கள்.

முஹம்மதின் பொருட்டால் எனது பாவத்தை மன்னிப்பாயாக என்று ஆதம் (அலை) அவர்கள் கூறியுள்ளார்களே என்று சிலர் கேட்கலாம். இந்தச் செய்தி ஆதாரமற்றதும், இட்டுக்கட்டப்பட்டதுமாகும். இந்தச் செய்தி பல்வேறு நூல்களிலும் இடம் பெற்றிருந்தாலும் அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் என்பார் வழியாகவே அனைத்து நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் தமது தந்தை வழியாக ஏராளமான இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவித்தவர் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறுகின்றனர். எனவே இந்தச் செய்தியை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.

மேலும் ஆதம் (அலை) அவர்கள் எவ்வாறு எந்த வார்த்தைகளைக் கூறி பாவமன்னிப்புத் தேடினார்கள் என்று திருக்குர்ஆன் விளக்கமாகக் கூறுகின்றது.. அதற்கு முரணாகவும் இந்தச் செய்தி அமைந்துள்ளது. (பாவ மன்னிப்புக்குய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் 2:37)

பாவம் செய்த ஆதம் (அலை) அதற்காக எவ்வாறு மன்னிப்புக் கேட்பது என்ற வழியைச் சுயமாக அறிந்து கொள்ளவில்லை. அந்த வழியையும் அதற்குரிய வார்த்தைகளையும் இறைவனே கற்றுக் கொடுத்தான். அந்த வார்த்தைகளைக் கூறி அவர் மன்னிப்புக் கேட்டதால் அவர் மன்னிக்கப்பட்டார் என்று இவ்வசனம் கூறுகின்றது.

இறைவன் அவருக்கு கற்றுக் கொடுத்த வார்த்தைகள் என்ன, அதையும் திருக்குர்ஆன் வேறொரு இடத்தில் கூறுகிறது.

‘எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம் ‘ என்று அவ்விருவரும் கூறினர்.

(அல்குர்ஆன் 7:23)

தங்களது பாவத்தையும் இறைவனது கருணையையும், வல்லமையையும் ஒரே நேரத்தில் நினைவு கூர்ந்து, தங்கள் தவறைப் பகிரங்கமாக ஒப்புக் கொண்டு தங்களுக்கு வேறு நாதியில்லை என்பதையும் உணர்ந்து கொண்டு இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள். இப்படித்தான் அவர்கள் மன்னிப்புக் கேட்டார்கள். தவிர முஹம்மத் பொருட்டால் என்று கேட்கவில்லை. அவ்வாறு கேட்டிருந்தால் அவ்வாறு இறைவன் கற்றுக் கொடுத்திருந்தால் அதை நிச்சயமாக இறைவன் கூறியிருப்பான்.

இந்த பிரார்த்தனையில் கூட ஆதம் (அலை) வஸீலா தேடியுள்ளனர். இறைவனின் முன்னால் சரணடைவதும் அவனது வல்லமையைக் கூறிப் புகழ்வதும் தனது இயலாமையை ஒப்புக் கொள்வதும் வஸீலா தான். இறைவனை நெருங்குவதற்கான வழி தான்.

இதனால் தான் அபூஹனீபா இமாம் உள்ளிட்ட பல்வேறு அறிஞர்கள், எவர் பொருட்டாலும் அல்லாஹ்விடம் கேட்கக் கூடாது. எவருக்காகவும் அல்லாஹ் எதையும் தர வேண்டுமென கட்டாயம் ஏதுமில்லை என்று கூறியுள்ளனர்.

இப்போது மவ்லிதுக்கு வருவோம். யார் அப்துல் காதிர் ஜீலானி பொருட்டால் பிரார்த்திக்கிறாரோ அவரது தேவைகள் நிறைவேற்றப்படும் என்று கூறப்படும் வரிகள் திருக்குர்ஆனுக்கும், நபிவழிக்கும் எதிரானதாகும் என்பதை விளங்கலாம்.

அப்துல் காதிர் ஜீலானியின் பொருட்டால் கேட்டால் அல்லாஹ் அதை ஏற்பான் என்றால் அதை அல்லாஹ் தான் கூற வேண்டும். இவர் பொருட்டால் கேட்டால் அல்லாஹ் தருவான் என்பதை இந்தப் பாட்டை எழுதியவர் எப்படி அறிந்து கொண்டார்? அல்லாஹ்விடத்தில் மறுமையில் இந்தப் பெரியார் உண்மையில் நல்லடியாராகத் தான் இருப்பார் என்பதையாவது யாராலும் அறிய முடியுமா?

இது போன்ற அபத்தங்களை நம்பி வழிகேட்டில் செல்லாமல் இறைவன் தான் காப்பாற்ற வேண்டும்.

அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பொய்களின் தொகுப்பே முஹ்யித்தீன் மவ்லிது என்பதை நிரூபிக்கும் மற்றொரு அபத்தத்தைப் பாருங்கள்.

 

بل انه لم قط يفعل فعله *الا باذن الهه المتكلم

عهدا له ات لا يموت مريده *الا غلى ما تاب من مستاثم

அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் தமது இறைவனின் அனுமதியின்றி ஒரு போதும் எந்தச் செயலையும் செய்ததில்லை. அவரது சீடராக இருப்பவர் தமது பாவத்துக்காக மன்னிப்புத் தேடாமல் மரணிக்க மாட்டார் என்பது (அல்லாஹ்) அவரிடம் செய்த உடன்படிக்கையாகும்.

மவ்லிதை உருவாக்கியவர்கள் அதை நியாயப்படுத்தக் கையாளும் மலிவான தந்திரத்தை இந்தக் கவிதை அம்பலப்படுத்துகின்றது.

அப்துல் காதிர் ஜீலானி அவர்களை அல்லாஹ்வுக்குச் சமமாக காட்டக்கூடிய கற்பனைக் கதைகளை உண்மையான மூஃமீன்கள் நம்ப மாட்டார்கள் என்பதை மவ்லிதை உருவாக்கியவர்கள் நன்றாக அறிவார்கள். ஏகத்துவத்தையே தகர்க்கக்கூடிய வகையில் மவ்லிதில் கூறப்படும் கதைகள் அமைந்துள்ளனவே என்று ஆட்சேபனை வரும் என்பதையும் நன்றாக அறிவார்கள். அத்தகைய ஆட்சேபனைகளைத் தவிர்ப்பதற்காகத் தான் அப்துல் காதிர் ஜீலானி செய்த யாவுமே அல்லாஹ்வின் அனுமதியோடு தான் செய்யப்பட்டன. அவனுக்குப் போட்டியாகச் செய்யப்படவில்லை என்ற கருத்தை மேற்கண்ட கவிதையில் வலியுறுத்தியுள்ளார்கள். இப்படிச் செய்வதால் ஏகத்துவத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பது அவர்களின் வாதம்.

அப்துல் காதிர் ஜீலானி அல்லாஹ்வின் அனுமதியோடு தான் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான காரியங்களைச் செய்தார்கள் என்றால் அதற்கான ஆதாரங்கள் என்ன?

எவற்றை அல்லாஹ் தனக்கு மட்டுமே உரித்தானது என்று திருக்குர்ஆனில் உரிமை கொண்டாடுகின்றானோ அவற்றைச் செய்ய மற்றவர்களுக்கு எப்படி அனுமதியளிப்பான்?

அப்படியே அனுமதிப்பது என்றால் இறைவனுடன் வஹீ என்னும் தொடர்புடைய நபிமார்களுக்குத் தான் அனுமதிப்பான். அப்துல் காதிர் ஜீலானி அவர்களிடம் நேரடியாக பேசி அனுமதி தந்தானா? அல்லது வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்களை அவரிடம் அனுப்பி அனுமதியளித்தானா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோடு மார்க்கம் முடிந்து விட்டது என்பதன் பொருள் என்ன? நானே இறுதி நபி எனக்குப் பின் எந்த நபியும் இல்லை என்ற நபிமொழியின் பொருள் என்ன? இப்படி ஆயிரமாயிரம் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்குமே என்று அந்த அறிவீனர்கள் சிந்திக்கவில்லை.

அபத்தமான கருத்துக்களைக் கூறுவோர். அதை நியாயப்படுத்த முடியாத போது மதிப்பு மிக்க பெரியார் இவ்வாறு கூறினார் என்று கூறி அப்பாவிகளை வாயடைக்கச் செய்வதை நாம் பார்த்திருக்கிறோம். அல்லாஹ்வின் பெயரிலேயே இட்டுக்கட்டக் கூடியவரை ஜாஹிலிய்யாக் காலத்துக்குப் பின் இந்த மவ்லிதில் நாம் சந்திக்கிறோம்.

அவர்கள் வெட்கக்கேடான காரியத்தைச் செய்யும் போது ‘எங்கள் முன்னோர்களை இப்படித் தான் கண்டோம். அல்லாஹ்வே இதை எங்களுக்குக் கட்டளையிட்டான் ‘ என்று கூறுகின்றனர். ‘அல்லாஹ் வெட்கக் கேடானதை ஏவ மாட்டான். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா? ‘ என்று கேட்பீராக!

(அல்குர்ஆன் 7.28)

மானக்கேடான காரியத்தைச் செய்துவிட்டு அல்லாஹ்வின் மீது பழி போட்டவர்களை அல்லாஹ் இங்கே எச்சரிக்கிறான். மானக்கேடுகளிலெல்லாம் மிகப் பெரிய மானக்கேடான ஷிர்க்கையே அல்லாஹ்வின் மீது பழிபோட்டு மவ்லிதை எழுதியவர் நியாயப்படுத்த முயல்கிறார். இந்த வசனம் இவருக்காகவே அருளப்பட்டது போல் இல்லையா? இதை மவ்லிது அபிமானிகள் சிந்திக்கட்டும்.

அதே வரியில் கூறப்படும் மற்றொரு அபத்தத்தைப் பாருங்கள். அப்துல் காதிர் ஜீலானியிடம் சீடராக இருந்தவர் பாவமன்னிப்புத் தேடாமல் மரணிக்க மாட்டார் என்று அல்லாஹ் உறுதிமொழி எடுத்தானாம்.

அகில உலகுக்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கூட இத்தகைய உறுதி மொழியை அல்லாஹ் வழங்கவில்லை. அவர்களிடம் சீடராக இருந்தவர்களில் பலர் மறுமையில் எந்த நிலையில் இருப்பார்கள் என்பதைப் பின்வரும் ஹதீஸ்கள் தெளிவாக விளக்குகின்றன.

எனது சமுதாயத்தில் சிலர் இடப்புறமாகக் பிடிக்கப்படுவார்கள். அப்போது நான் என் தோழர்கள் என் தோழர்கள் என்று கூறுவேன். அதற்கு இறைவன் நீ அவர்களைப் பிரிந்தது முதல் அவர்கள் வந்த வழியே திரும்பிக் கொண்டிருந்தார்கள் எனக் கூறுவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் புகாரி 3349, 3447

மற்றொரு அறிவிப்பில் ஹவ்ல் அல் கவ்ஸர் தடாகத்திலிருந்து சில மக்கள் தடுக்கப்படுவார்கள். என் தோழர்கள் என் தோழர்கள் என்று நான் கூறுவேன். அப்போது முஹம்மதே உனக்குப் பின் இவர்கள் புதிதாக உருவாக்கியவைகளைப் பற்றி நீர் அறிய மாட்டீர் எனக் கூறப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

நூல்: புகாரி, 4625, 4740, 6526, 6576, 6582

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பைஅத் செய்த நல்லறத் தோழர்கள் கூட பாவமன்னிப்புப் பெற்றவர்களாக மரணிக்கவில்லை. அத்தகைய உத்தரவாதத்தைப் பெறவில்லை என்பதை இந்த ஹதீஸ்கள் தெளிவாக விளக்குகின்றன. பாவமன்னிப்புப் பெற்றிருந்தால் அவர்கள் இடப்புறமாகப் பிடிக்கப்பட மாட்டார்கள். அல்லாஹ்வின் தூதருடைய சீடர்களுக்கு வழங்காத உறுதிமொழியை அப்துல் காதிர் ஜீலானியுடைய சீடர்களுக்கு அல்லாஹ் வழங்கி விட்டான் என்று கூறும் இந்தக் கவிதையைப் படிக்கலாமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவு படுத்தும் இத்தகைய கவிதைகளைத் தீயிலிட்டுப் பொசுக்க வேண்டாமா? நபிகள் நாயகத்தை உண்மையாகவே நேசிக்கக் கூடியவர்கள் சிந்திக்கட்டும்.

நானும் உங்களைப் போன்ற மனிதன் தான். நீங்கள் என்னிடம் வழக்குகளைக் கொண்டு வருகிறீர்கள். உங்களில் சிலர் மற்ற சிலரை விட தமது வாதத்தை அழகுற எடுத்து வைக்கக்கூடும். நான் கேட்கும் வாதத்தினடிப்டையில் அவருக்குச் சாதகமாக நான் தீர்ப்பளித்து விடுவேன். பிறரது உரிமையை ஒருவருக்குச் சாதகமாக நான் தீப்பளித்து விட்டால் அதைப் பெற்றுக் கொள்ளக் கூடாது. அவருக்காக நரகத்தின் ஒரு பகுதியை வழங்குகிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் உம்மு ஸலமா (ரலி)

நூல் புகாரி 2458, 2680, 6967, 7169, 7181, 7185

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த மக்கள் மட்டுமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வழக்குகளைக் கொண்டு வர முடியும். அவர்களைத் தமது வாதத் திறமையால் ஏமாற்றி தமக்குச் சாதகமான தீர்ப்பைப் பெற்று விட முடியும். ஆனால் மறுமையில் நரக நெருப்பை அடைவார் என்று இங்கே நபிகள் நாயகம் (ஸல்) எச்சரிக்கை செய்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் என்ற காரணத்துக்காக செய்த பாவம் அனைத்துக்கும் மன்னிப்பை நபித் தோழர்கள் பெறவில்லை. பெறுவார்கள் என்ற உத்தரவாதமும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தளவாடங்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் கிர்கிரா என்பார் இருந்தார். அவர் மரணிக்கும் போது இவர் நரகிலிருப்பார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் சென்று தேடிப்பார்த்த போது அவர் மோசடி செய்த ஒரு ஆடையைக் கண்டனர்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: புகாரி 3074

கைபர் போல் ஒருவர் மரணித்தார். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அவருக்கு நீங்கள் தொழுகை நடத்துங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் உடனே மக்களின் முகங்கள் மாறுதலடைந்தன. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்கள் தோழர் அல்லாஹ்வின் பாதையில் மோசடி செய்து விட்டார் என்றார்கள். அவரது பொருட்களை மக்கள் ஆராய்ந்தனர். அதில் யூதர்களுக்குச் சொந்தமான இரண்டு திர்ஹம் பெறுமதியில்லாத ஒரு மாலையைக் கண்டனர்.

அறிவிப்பவர்: யஸீத் பின் காலித் (ரலி)

நூல்கள்: அபூதாவூத் 2335 நஸயீ 1933,

ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நம்பிக்கைக்குriயவராக இருந்துள்ளார். மற்றொருவர் அல்லாஹ்வின் பாதையில் தம் உயிரை அர்ப்பணித்தவராக இருந்துள்ளார். ஆயினும் இவ்விருவரின் கடைசிச் செயல்களோ மோசடியாக இருந்துள்ளது. மன்னிப்புக் கேட்காமல் மரணிக்க மாட்டார் என்ற உத்தரவாதம் நபித்தோழர்களுக்கே கிடைக்கவில்லை. அதனால் தான் அவர் நரகில் இருப்பார் எனக் கூறினார்கள்.

இது போல் ஏராளமான ஹதீஸ்களை நாம் காணலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேரில் பார்த்த நேரடியாக அவர்களிடம் பாடம் கற்ற தம் உயிரையும் அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணிக்கத் தயாராக இருந்த நபித்தோழர்களே பாவ மன்னிப்புப் பெற்றவர்களாகத் தான் மரணிப்பார்கள் என்ற உத்தரவாதம் இல்லை என்றால் அப்துல் காதிர் ஜீலானியின் சீடர்களுக்கு இத்தகைய உத்தரவாதம் உண்டு என்பதை ஏற்க முடியுமா?

கேடுகட்ட இந்த மவ்லிதுகளை இனியும் ஓதலாமா? ஆதரிக்கலாமா?

ஏராளமான திருக்குர்ஆன் வசனங்கள் எண்ணற்ற நபிமொழிகள் மற்றும் தர்க்க ரீதியான அறிவிப்பூர்வமான வாதங்கள் ஆகியவற்றின் துணையுடன் முஹ்யித்தீன் மவ்லிதின் அபத்தங்களை வெளிச்சம் போட்டுக் காட்டினோம்.

அப்துல் காதிர் ஜீலானியை அல்லாஹ்வுக்குச் சமமாக ஆக்கும் மேலும் சில வரிகளைப் பாருங்கள். இவை இஸ்லாத்திற்கு முரணானவை என்பதற்கு நாம் இதுவரை எடுத்துக் காட்டிய சான்றுகளே போதுமானதாகும்.

يا قدوة الاخيار *اكشف لنا الاسرار

க்ஷி நல்லோர்களால் பின்பற்றப்படுபவரே இரகசியங்களை எங்களுக்குத் திறந்து காட்டுங்கள்.

தெளிவான மார்க்கத்தில் என்ன இரகசியம் உள்ளது? பல நூறு ஆண்டுகளுக்கு முன் மரணித்தவர் இதை எப்படித் திறந்து காட்டுவார்? அறிவுடையோரே சிந்தியுங்கள்.

 

انتم غياث الناس *عن خطفة الخناس

بالحفظ للانفاس *فارفع لنا الاستار

க்ஷி ஆத்மாக்களை காப்பதன் மூலம் ஷைத்தானின் தாக்குதலை விட்டும் மக்களை இரட்சிப்பவர் நீங்களே எனவே எங்களுக்குத் திரைகளை விலக்குங்கள்.

ஆத்மாக்கள் அல்லாஹ்வின் கைவசம் உள்ளன. மற்றவர்களின் ஆத்மாக்களைக் காப்பது கிடக்கட்டும். தமது ஆத்மாவையே ஒருவரால் காத்துக் கொள்ள முடியாது. இது தான் இஸ்லாத்தின் அடிப்படை. உள்ளங்களைப் புரட்டக் கூடியவனே எனது உள்ளத்தை உனது மார்க்கத்தில் நிலைப்படுத்தி வை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகமதிகம் துஆச் செய்ததிலிருந்து இதை அறியலாம்.

انا لك الغلمان *راجوك للاحسان

க்ஷி நிச்சயமாக நாங்கள் உங்கள் அடிமைகள். பேருபகாரம் செய்ய உங்களை எதிர்பார்க்கிறோம்.

அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் யாரும் அடிமையாக இருக்க முடியாது என்ற இஸ்லாத்தின் அடிப்படை அப்பட்டமாகத் தகர்க்கப்படுகிறது. என்றோ மரணித்தவர் பேருபகாரம் செய்வார் என்று சித்தரிக்கப்படுகின்றது.

 

رزقا لنا الرضوان *رفقا بنا مختار

க்ஷி தேர்ந்தெடுக்கப்படுபவரே உங்கள் திருப்தியை எங்களுக்கு வழங்கி விடுங்கள். எங்களிடம் மென்மையாக நடந்து கொள்ளுங்கள்.

மரணித்துவிட்ட அப்துல் காதிர் இந்தக் கேடுகட்ட கவிஞன் மேல் ஏன் திருப்தியுற வேண்டும்? இப்படி ஒருவன் பிதற்றுவான் என்பதை அறிய முடியாத நிலையில் உள்ள அப்துல் காதிர் ஜிலானி எப்படி இவர் மீது திருப்தியுற முடியும்? அவர் திருப்தியுற்றால் என்ன? திருப்பதியுறாவிட்டால் என்ன? அவரது திருப்தியைப் பெற்றால் தான் மறுமையில் வெற்றி பெற முடியுமா? அப்துல் காதிர் ஜீலானி இந்தக் கவிஞனிடம் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்றால் அப்துல் காதிர் ஜீலானி தான் நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதியா? இவர் மென்மையாக நடக்காவிட்டால் என்ன நேர்ந்துவிடும்? இப்படி ஏராளமான கேள்விகளை எழுப்பக் கூடிய அளவுக்கு அபத்தங்கள்.

 

بل نحن كالاشجار *انتم لها الامطار

க்ஷி நாங்கள் மரங்களைப் போன்றவர்கள். நீங்கள் மழை போன்றவர்.

மழையின்றி மரங்கள் வாழ முடியாதது போல் அப்துல் காதிர் ஜீலானியின்றி மக்கள் வாழ முடியாதாம். எல்லா அதிகாரமும் பெற்று இவர் விளங்கும் போது அல்லாஹ் என்று ஒருவன் எதற்காக?

 

ومسنا الحاجات *جئناك بالمزجات

فاوف كيل نجاة *لنا اولى الاعسار

 

க்ஷி எங்களுக்குத் தேவைகள் ஏற்பட்டுள்ளன. பைகளுடன் உங்களிடம் வந்து விட்டோம். வெற்றியை நிறைவாக சிரமப்படும் எங்களுக்கு அளந்து போடுங்கள்.

இப்படி அல்லாஹ்விடம் கேட்க வேண்டிய அனைத்தையும் இறந்தவர்களிடம் கேட்கிறார். அல்லாஹ்வின் அதிகாரங்களனைத்தையும் அப்துல் காதிருக்கு வழங்குகிறார்.

 

بشرى لمن قد زار *روض الولي البار

بالحفظ للاخطار *بل عن عذاب النار

 

க்ஷி இந்த நல்ல இறைநேசரை ஸியாரத் செய்தவர்கள் துன்பங்களை விட்டும் நரகத்தின் வேதனையை விட்டும பாதுகாப்புப் பெறுவதற்காக நல்வாழ்த்துக்கள்.

அவரது கப்ரை ஸியாரத் செய்தவர்கள் எந்தத் துன்பமும் அடைய மாட்டார்கள் என்று யார் உத்தரவாதமளித்தது? அவரது கப்ரை ஸியாரத் செய்த ஏராளமானோர் துன்பத்தில் வீழ்ந்து கிடக்கின்றனரே? இதையெல்லாம் அறியாமல் இந்தக் கவிஞன் உளயிருக்கிறான்.

لولاه لا افلاح *للجن والابشار

க்ஷி இவர் இல்லை என்றால் மனிதர்களுக்கும் ஜின்களுக்கும் எந்த வெற்றியும் கிடையாது.

என்று பிதற்றியுள்ளான். இவர் பிறப்பதற்கு முன் எத்தனையோ நபிமார்கள், அவர்கள் வழி நின்ற மூஃமின்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவர் மரணித்த பின்பும் எத்தனையோ நன்மக்கள் உலகில் தோன்றியுள்ளனர். இவரைப் பற்றி அறிந்திராத இவரது போதனைகளைப் படித்திராத எத்தனையோ மக்கள் நல்வழியில் செல்கின்றனர். இந்த உண்மைகளை உணராமல் இவரால் தான் மனித இனமும் ஜின்கள் இனமும் வெற்றியடைய முடியும் என்கிறான்.

இதன் மூலம் எல்லா நபிமார்களையும் நபித்தோழர்களையும் குறிப்பாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அவமானப்படுத்துகிறான்.

 

هذا ذميم الحال *محمود ذو الاثقال

يرجو نداك البال *خذه عن الاخطار

احفظه من عاهات *واحرسه عن آفات

تقضي له الحاجات *تمحو له الاوزار

ادخله فى الاحزاب *واعدده فى الاصحاب

واقبله من احباب *يا عالي المقدار

 

க்ஷி இதோ இழிந்த நிலையில் உள்ள பாவச் சுமைகளைச் சுமந்துள்ள மஹ்மூத் (லெப்பை) இருக்கிறேன். உயர்ந்த அந்தஸ்துடையவரே என்னை துன்பங்களிலிருந்து ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்றுங்கள். எனது தேவைகளை நிறைவேற்றுங்கள். என் பாவங்களை அழித்து விடுங்கள். வெற்றி பெற்ற கூட்டத்தில் என்னைச் சேர்த்து விடுங்கள். தோழர்களில் ஒருவராக என்னைக் கணக்கிடுங்கள். நேசர்களில் ஒருவராக என்னை அங்கீகரித்துக் கொள்ளுங்கள்.

இதை எழுதிய மஹ்மூத் லெப்பை இதை எழுதிய ஒரே காரணத்துக்காக இழிந்த நிலையில் இருப்பதும் பாவ மூட்டைகளைச் சுமந்திருப்பதும் உண்மை. இந்த மவ்லிதில் உள்ள வரிகளில் இந்த வரி மட்டுமே நூறு சதவிகிதம் உண்மை. அதில் நமக்கு ஆட்சேபணை இல்லை.

அடுத்து தேவைகளை அப்துல் காதிர் ஜீலானி தான் நிறைவேற்ற வேண்டுமாம். பாவங்களை அவர் தான் அழிக்க வேண்டுமாம். நல்லோர் பட்டியலில் நபித்தோழர்கள் பட்டியலில் நேர்களின் பட்டியலில் அவர் தான் சேர்க்க வேண்டுமாம்.

இஸ்லாத்தின் அடிப்படையை ஓரளவுக்காவது அறிந்து வைத்திருக்கும் முஸ்லிம் சமுதாயமே! என்றோ மரணித்துவிட்ட ஒரு மனிதரை எல்லா வகையிலும் கடவுளாக்கி ஏகத்துவத்தைத் தரைமட்டமாக்கி நிரந்தர நரகத்திற்கு இட்டுச் செல்லும் இக்கவிதைகளைப் படிக்கலாமா? வீட்டில் வைத்திருக்கலாமா? சிந்தித்துப் பாருங்கள்.

பொருள் தெரியாத காலத்தில் ஏமாற்றப்பட்டவர்களை அல்லாஹ் நாடினால் மன்னித்துவிடக் கூடும். மவ்லிதின் பொருள் தெரிந்த பின் குர்ஆனுக்கும் நபிமொழிகளுக்கும் முரணாக அமைந்திருப்பது புரிந்த பின் இதை ஓதலாமா? அல்லாஹ் இந்தப் படுபாதகச் செயலை மன்னிப்பானா? இன்றே இப்போதே இதை விட்டொழிக்க வேண்டாமா?

இந்த மவ்லிதுகள் சிலரது வயிற்றுப் பிழைப்புக்காக முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டவை. கொடுக்கப்படும் கூலிக்காகவும், சுவையான உணவுக்காகவும் இவை ஓதப்படுகின்றன. இதைத் தவிர இதற்கு வேறு நோக்கம் இல்லை. முஹ்யித்தீன் மவ்லிதே இதை ஒப்புக் கொள்கிறது.

முஹ்யித்தீன் மவ்லிதின் பதினோறு பாடல்கள் உள்ளன, இவற்றில் பத்துப் பாடல்களின் இறுதியில் மறவாமல் உணவைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து மவ்லிது என்பது வயிற்றுப் பிழைப்புக்காகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ள குறுக்கு வழி என்பதை அறியலாம்.

1وسماعه والحاضرين واهلهم *ومطعمهم حبا له كل لحظة

க்ஷி இதைக் கேட்டவர்களுக்கும் வந்திருப்பவர்களுக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கும் அவர் மேல் கொண்ட அன்பால் இவர்களுக்கு உணவளித்தவர்களுக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் மன்னிப்புக் கிடைக்கட்டுமாக.

 

2والسامعيه ومن للسمع قد حضروا *ومطعميهم على السم الغوث ذى العظم

க்ஷி இதைக் கேட்டோரையும் கேட்பதற்காக வருகை புரிந்தோரையும் மகத்துவமிக்க இரட்சிகராகிய இவர் பெயரால் வந்தோருக்கு உணவளித்தோரையும் அல்லாஹ் மன்னித்து விட்டான்.

மூன்றாவது பாடலில்

 

3وعن حاضري ههنا والذى *يداريهم باسم غوث عظيم

க்ஷி இங்கே வந்தோரையும் மகத்தான இரட்சகராகிய இவர் பெயரால் வாரி வழங்கியோரையும் அல்லாஹ் மன்னித்து விட்டான்.

நான்காவது பாடலில்

 

4والسامعين المطعمين *على البر الجواد

5والسمع المطعمينا *على اسمه بالغرام

 

க்ஷி வள்ளலாகிய இந்த நல்லவரின் பெயரால் உணவளித்துக் கேட்டவர்களையும் மறுக்கப்படாத உணவை (அதவாது தரமான சுவையான உணவை) அனைவருக்கும் குருவான இவர் பெயரால் தயாரித்தவர்களையும் அல்லாஹ் மன்னிப்பானாக.

8واغفرن للحاضرين هنا *والمضيف باطيب النعم

க்ஷி இங்கே வருகை தந்தவர்களையும் சுவையான உணவை விருந்தளித்தவர்களையும் மன்னித்துவிடு.

 

6عفوا عن الذكار والسموع *لمدحه الحضار واتلصنوع

مطعوماناللذ ليس بالمنوع *على اسم شيخ الكل ذى ال

9وعفى عن سامعينا *مدحكم والصانعينا

طعمهم والحاضرينا *ههنا والذاكرينا

 

க்ஷி உங்கள் புகழைச் செவியுற்றவர்களையும் இவர்களுக்கு உணவு தயாரித்தவர்களையும் இங்கே வருகை புரிந்தோரையும் (இவரை) திக்ரு செய்தவர்களையும் அல்லாஹ் மன்னிப்பாயாக.

க்ஷி இதைக் கேட்டோர், வருகை தந்தோர், சங்கைக்குரிய இந்த இரட்சகருக்காக இவர்களுக்கு உணவளித்தோர் அனைவரையும் அல்லாஹ் மன்னிப்பானாக.

பதினோராவது பாடலில்

 

10والسامعين له من هو حاضر *مع مطعميهم للغياث الاكرم

11في حلقة الاذكار *والمطعم المدرار

 

க்ஷி இந்த திக்ரு சபைக்கு வந்தோரையும் தொய்வின்றி தொடராக உணவளித்தோரையும் அல்லாஹ் மன்னிக்கட்டும்.

என்றெல்லாம் மறவாமல் தீனியைக் குறிப்பிடுகிறார். இதை எழுதியவருக்கு அப்துல் காதிர் ஜீலானி மேல் உள்ள அன்பு காரணமன்று.

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளைத் தகர்க்கக் கூடிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்துக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் உருவாக்கப்பட்ட மவ்லிதுகளைப் புறக்கணிக்கவும் ஒழித்துக் கட்டவும் அல்லாஹ் அருள் புரிவானாக.