Tamil Bayan Points

05) வஹீயை மட்டுமே பின்பற்ற வேண்டும்

நூல்கள்: நபித் தோழர்களும் நமது நிலையும்

Last Updated on February 24, 2022 by

வஹீயை மட்டுமே பின்பற்ற வேண்டும்

நேர்வழி காட்டும் அதிகாரம் எவருக்கும் இல்லை; அது எனக்கு மட்டுமே உரியது என்பது தான் இறைவனிடமிருந்து மண்ணுலகுக்கு வந்த முதல் கட்டளை.

முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்கள் இறைவனால் நேரடியாகப் படைக்கப்பட்டவர்கள். இறைவனது ஆற்றலைக் கண்கூடாகக் கண்டவர்கள். வானவர்களை மிஞ்சும் அளவிற்கு அறிவாற்றல் வழங்கப்பட்டவர்கள்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆதம் (அலை) அவர்களும், அவர்களின் துணைவியான அன்னை ஹவ்வா (அலை) அவர்களும் இறைவனின் ஒரு கட்டளையை மீறி விட்டனர். இதன் காரணமாக அவர்கள் வசித்து வந்த சோலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

அவர்களை வெளியேற்றும் போது அவர்களிடம் இறைவன் பின்வருமாறு சொல்லி அனுப்பினான்.

இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்! என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப் படவும் மாட்டார்கள்’ என்று கூறினோம்..

திருக்குர்ஆன் : 2:38

பின்னர் அவரை அவரது இறைவன் தேர்ந்தெடுத்தான். அவரை மன்னித்து நேர்வழி காட்டினான்.

இருவரும் ஒட்டுமொத்தமாக இங்கிருந்து இறங்குங்கள்! உங்களில் சிலர் மற்றும் சிலருக்கு பகைவர்களாவீர்கள். என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும். அப்போது எனது நேர் வழியைப் பின்பற்றுபவர் வழி தவற மாட்டார். துர்பாக்கியசாலியாகவும் மாட்டார்.

எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்..

திருக்குர்ஆன் : 20:122, 123, 124

தமக்கு வழங்கப்பட்ட அறிவைக் கொண்டு மனிதர்கள் நேர்வழியைக் கண்டறிந்து கொள்வார்கள் என்றால் இவ்வாறு இறைவன் சொல்லி அனுப்பத் தேவையில்லை.

உமக்கு நான் அளப்பரிய அறிவைத் தந்துள்ளேன். அந்த அறிவைக் கொண்டு நேர்வழியைக் கண்டுபிடித்து அதன்படி நடந்து கொள் என்று இறைவன் சொல்லியிருக்கலாம். அவ்வாறு சொல்லாமல், “என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும். அந்த நேர்வழியைப் பின்பற்றினால் தான் வெற்றி பெற முடியும் என்று சொல்லி அனுப்பினான்.

மனிதர்களிலேயே மாமேதையான ஆதம் நபி அவர்களே சுயமாக நேர்வழியைக் கண்டுபிடிக்க முடியாது; இறைவனிடமிருந்து தெரிவிக்கப்படும் வழிகாட்டுதலின்படி நடக்க வேண்டும் என்றால் இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன?

இறைவன் தவிர வேறு எவருடைய கூற்றையும் நடவடிக்கைகளையும் நாம் மார்க்கமாக ஆக்கக் கூடாது என்பது தெரியவில்லையா?

ஆதம் (அலை) அவர்களே இறைவனிடமிருந்து வரும் நேர்வழியை – வஹீயை – மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றால் நபித்தோழர்களோ, மற்றவர்களோ அவரை விட உயர்ந்தவர்களா?

இது குறித்து இறைவன் மிகத் தெளிவான வார்த்தைகளால் பல்வேறு வசனங்களில் தெளிவுபடுத்தியுள்ளான்.

‘அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!’ என்று அவர்களிடம் கூறப்பட்டால் ‘எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்’ என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும், நேர்வழி பெறாமலும் இருந்தாலுமா?

திருக்குர்ஆன் : 2:170

அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக இவ்வாறே தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்..

திருக்குர்ஆன் : 3:103

(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!

திருக்குர்ஆன் : 6:106

தீர்ப்பளிப்பவனாக அல்லாஹ் அல்லாதவர்களையா தேடுவேன்? அவனே இவ்வேதத்தை தெளிவுபடுத்தப்பட்டதாக உங்களிடம் அருளினான். (முஹம்மதே!) நாம் யாருக்கு வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் ‘இது உமது இறைவனிடமிருந்து உண்மையை உள்ளடக்கியதாக அருளப்பட்டது’ என்பதை அறிவார்கள். எனவே சந்தேகப்படுபவராக நீர் ஆகி விடாதீர்!

உமது இறைவனின் வார்த்தை உண்மையாலும், நீதியாலும் நிறைந்துள்ளது. அவனது வார்த்தைகளை மாற்றுபவன் எவனும் இல்லை. அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.

திருக்குர்ஆன் : 6:114,115

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!

திருக்குர்ஆன் : 7:3

அவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் கூறப்பட்டால் ‘இது அல்லாத வேறு குர்ஆனைக் கொண்டு வருவீராக! அல்லது இதை மாற்றியமைப்பீராக!’ என நமது சந்திப்பை நம்பாதோர் கூறுகின்றனர். நானாக இதை மாற்றியமைத்திட எனக்கு அதிகாரம் இல்லை. எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றுவதில்லை. என் இறைவனுக்கு நான் மாறுசெய்து விட்டால் மகத்தான நாளின் வேதனையை அஞ்சுகிறேன்’ என (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் : 10:15

(முஹம்மதே!) உமக்கு அறிவிக்கப்படுவதைப் பின்பற்றுவீராக! அல்லாஹ் தீர்ப்பு அளிக்கும் வரை பொறுமையாக இருப்பீராக! அவன் தீர்ப்பளிப்போரில் மிகவும் சிறந்தவன்.

(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைப் பின்பற்றுவீராக! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்..

திருக்குர்ஆன் : 33:2

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் ‘அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை’ (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

திருக்குர்ஆன் : 39:3

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்ட அழகானதைப் பின்பற்றுங்கள்

திருக்குர்ஆன் : 39:58

தூதர்களில் நான் புதியவன் அல்லன். எனக்கோ, உங்களுக்கோ என்ன செய்யப்படும் என்பதை அறிய மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றவில்லை. நான் தெளிவாக எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை’ எனக் கூறுவீராக!

திருக்குர்ஆன் : 46:9

உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் : 49:16

அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது ‘செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்’ என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர்..

திருக்குர்ஆன் : 24:51,52

இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்..

திருக்குர்ஆன் : 5:3

இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது’ என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியோர் வெற்றி பெற மாட்டார்கள்..

திருக்குர்ஆன் : 16:116

அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே முடிவு செய்யப்பட்டிருக்கும். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது.

திருக்குர்ஆன் : 42:21

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த தூயவற்றை தடுக்கப்பட்டவையாக ஆக்காதீர்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுவோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

திருக்குர்ஆன் : 5:87

அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக்கட்டி, அல்லாஹ் தமக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் இழப்பு அடைந்தனர்; வழி கெட்டனர்; நேர்வழி பெறவில்லை..

திருக்குர்ஆன் : 6:140

‘தனது அடியார்களுக்காக அல்லாஹ் வழங்கிய அலங்காரத்தையும், தூய்மையான உணவுகளையும் தடை செய்பவன் யார்?’ என்று கேட்பீராக! ‘அவை இவ்வுலக வாழ்க்கையிலும் குறிப்பாக கியாமத் நாளிலும் நம்பிக்கை கொண்ட மக்களுக்குரியது’ எனக் கூறுவீராக! அறிகின்ற சமுதாயத்திற்கு இவ்வாறே சான்றுகளை விளக்குகிறோம்.!

திருக்குர்ஆன் : 7:32

வேதம் கொடுக்கப்பட்டோரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாமல், அல்லாஹ்வும், அவனது தூதரும் விலக்கியவற்றை விலக்கிக் கொள்ளாமல், உண்மையான மார்க்கத்தைக் கடைப்பிடிக்காமல் இருப்போர் சிறுமைப்பட்டு ஜிஸ்யா வரியைத் தம் கையால் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிடுங்கள்!

திருக்குர்ஆன் : 9:29

(மாதத்தின் புனிதத்தை) தள்ளிப் போடுவது (இறை) மறுப்பை அதிகப்படுத்துவதே. இதன் மூலம் (ஏக இறைவனை) மறுப்போர் வழிகெடுக்கப்படுகின்றனர். ஒரு வருடம் அதன் புனிதத்தை நீக்கி விடுகின்றனர். மறு வருடம் அதற்குப் புனிதம் வழங்குகின்றனர். அல்லாஹ் புனிதமாக்கிய எண்ணிக்கையைச் சரி செய்வதற்காக அல்லாஹ் புனிதப்படுத்தியதைப் புனிதமற்றதாக்கி விடுகின்றனர். அவர்களின் தீய செயல்கள் அவர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளன. (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்.

திருக்குர்ஆன் : 9:37

அவர்களுக்கு முழுமையான அறிவு இல்லாததாலும், விளக்கம் கிடைக்காததாலும் பொய்யெனக் கருதுகின்றனர். இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரும் பொய்யெனக் கருதினர். அநீதி இழைத்தோரின் முடிவு என்ன ஆனது என்பதைக் கவனிப்பீராக!.

திருக்குர்ஆன் : 10:59

உண்மையை உள்ளடக்கிய வேதத்தை உமக்கு அருளினோம். அது தனக்கு முன் சென்ற வேதத்தை உண்மைப்படுத்துவதாகவும், அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கிறது. எனவே அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக! உம்மிடம் வந்துள்ள உண்மையை அலட்சியம் செய்து அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! உங்களில் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைத் திட்டத்தையும், வழியையும் ஏற்படுத்தியுள்ளோம். அல்லாஹ் நினைத்திருந்தால் உங்களை ஒரே சமுதாயமாக்கியிருப்பான். எனினும் உங்களுக்கு அவன் வழங்கியவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக (அவ்வாறு ஆக்கிடவில்லை.) எனவே நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்! நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடமே திரும்பிச் செல்ல வேண்டும். நீங்கள் முரண்பட்டது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக! அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! அல்லாஹ் உமக்கு அருளியதில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைக் குழப்புவார்கள் என்பதில் கவனமாக இருப்பீராக! அவர்கள் புறக்கணித்தால் அவர்களின் சில பாவங்கள் காரணமாக அவர்களைத் தண்டிப்பதையே அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக! மனிதர்களில் அதிகமானோர் குற்றம் புரிவோராகவுள்ளனர்.

திருக்குர்ஆன் : 5:48 49

மேற்கண்ட வசனங்கள் பல்வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தி எந்த மனிதரின் கூற்றையும் பின்பற்றலாகாது என்பதை மிகத் தெளிவாக அறிவிக்கின்றன.

* முன்னோரைப் பின்பற்றலாகாது!

*அல்லாஹ்வின் கயிறை -குர்ஆனை-பிடித்துக் கொள்க!

* இறைவனிடமிருந்து அறிவிக்கப்பட்டதை மட்டும் பின்பற்றுவீராக!

* வஹீயாக அறிவிக்கப்படுவதைத்தான் நபியே பின்பற்ற வேண்டும்.

* வஹீயை மாற்றி அமைக்க நபிக்கும் அதிகாரம் இல்லை.

* மார்க்கத்தின் உரிமையாளன் அல்லாஹ் மட்டுமே.

* அல்லாஹ்வுக்கு மனிதன் மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்கக் கூடாது.

* மார்க்கத்தை நானே நிறைவாக்கி விட்டேன்.

* நீங்களாக இட்டுக்கட்டி ஹலால் ஹராம் என்று கூறாதீர்கள்!

என்பன போன்ற சொற்கள் மேற்கண்ட வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் கூறுவது என்ன? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட சுயமாக ஒன்றை உருவாக்க அதிகாரம் படைத்தவரில்லை என்பதைத் தெள்ளத் தெளிவாக அறிவிக் கின்றன.

இவ்வளவு தெளிவாக இறைவன் விளக்கிய பிறகும் இறைவனின் வழிகாட்டுதல் போதாது என்று எண்ணுவோர் தான் நபித்தோழர்களையோ, மற்றவர்களையோ பின்பற்ற வேண்டும் என்று வாதிட முடியும்.