Tamil Bayan Points

02) எண்ணிக்கை கவனித்து ஹதீஸின் வகைககள்

முக்கிய குறிப்புகள்: ஹதீஸ் கலை

Last Updated on March 22, 2022 by Trichy Farook

ஹதீஸின் வகைககள்

அறிவிப்பாளர்களின் எண்ணிக்கையைக் கவனித்து ஹதீஸ் இரண்டு வகையாகப் பிரிக்கப்படும்.

1. முதவாதிர் (ஒருமித்து அறிவிக்கப்படுவது)

2. கபருல் ஆஹாத் (தனிநபர் செய்தி)

 

முதவாதிர்

(அறிவிப்பாளர் வரிசையில் ஒவ்வொரு தலைமுறையிலும் பலர் ஒருமித்து அறிவிப்பது)

ஒரு செய்தியை ஏராளமான நபித்தோழர்கள் அறிவிக்கின்றனர். தாபியீன்களிலும் ஏராளமானவர்கள் அறிவிக்கின்றனர். தபவுத் தாபியீன்களிலும் அதேபோன்று பலர் அறிவிக்கின்றனர்.

இவ்வாறு ஒவ்வொரு தலைமுறையிலும் ஏராளமானவர்கள் அறிவித்துள்ளார்கள் எனில் இத்தகைய செய்திகளை ஹதீஸ் கலையில் முதவாதிர் என்று சொல்லப்படும். இந்தத் தரத்தில் அமைந்த ஹதீஸ்கள் குறைவாகவே உள்ளன.

உதாரணம்:

“என் மீது யார் வேண்டுமென்றே பொய் சொல்கிறானோ அவன் தனது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்து கொள்ளட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் புகாரி-107 , முஸ்லிம், திர்மிதீ உள்ளிட்ட ஏராளமான நூல்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்களிடமிருந்து எழுபதுக்கும் மேற்பட்ட ஸஹாபாக்கள் அறிவிக்கின்றார்கள்.

இப்படியே ஒவ்வொரு தலைமுறையிலும் எண்ணற்றவர்கள் வழியாக இச்செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் ஒவ்வொரு தலைமுறையிலும் ஒன்பதுக்கும் மேற்பட்டவர்களால் அறிவிக்கப் படுவதே “முதவாதிர்” என்று குறிப்பிடப்படும். முதவாதிர் குறித்த ஹதீஸ் கலை அறிஞர்களின் கருத்தில் இதுவே பிரபலமான கருத்தாகும்.

 

கபருல் ஆஹாத் (தனிநபர் செய்திகள்)

முதவாதிராக அமையாத ஹதீஸ்களுக்கு கபருல் ஆஹாத் என்று பெயர். இது மூன்று வகையாகப் பிரிகிறது.

1. கரீப்.

2. அஜீஸ்.

3. மஷ்ஹூர்.

இவற்றின் விளக்கம், வரைப்படம், உதாரணம் போன்றவற்றை இப்போது பார்ப்போம்.

கரீப்

அறிவிப்பாளர் வரிசையின் ஏதேனும் ஒரு தலைமுறையிலோ அல்லது அனைத்து தலைமுறையிலோ ஒருவர் மட்டுமே தனித்து அறிவிக்கும் ஹதீஸாகும்.

உதாரணம்:

“பயணம் வேதனையின் ஒரு பகுதியாகும். அது ஒருவரின் உணவையும், பானத்தையும், உறக்கத்தையும் தடுத்து விடுகிறது. எனவே, ஒருவர் தம் தேவையை முடித்தவுடன் விரைந்து தம் குடும்பத்தாரிடம் செல்லட்டும்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி-1804 

நபி (ஸல்) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை நபித்தோழர்களில் “அபூஹுரைரா (ரலி)” மட்டும் தனித்து அறிவிக்கின்றார்கள்.

அவர்களிடமிருந்து “அபூ ஸாலிஹ்” என்ற தாபிஃ மட்டும் தனித்து அறிவிக்கிறார்.

அவரிடமிருந்து “சுமைஇ” என்பவர் மட்டும் தனித்து அறிவிக்கின்றார்.

அவரிடமிருந்து “மாலிக் பின் அனஸ்” என்ற தபஉத் தாபிஃ மட்டும் தனித்து அறிவிக்கின்றார்.

இவ்வாறு, அனைத்து நிலையிலும் ஒருவர் மட்டும் தனித்து அறிவிப்பதால் ஹதீஸ் கலையில் இது “கரீப்” என்று குறிப்பிடப்படப்படுகிறது.

அஜீஸ்

அறிவிப்பாளர் வரிசையின் ஏதேனும் ஒரு தலைமுறையில் இருவர் மட்டுமே அறிவிக்கும் ஹதீஸாகும். இதில் ஏதேனும் ஒரு தலைமுறையில் மூவர் இடம் பெற்றாலும் அல்லது அனைத்து தலைமுறையிலும் இருவர் மட்டுமே இடம்பெற்றாலும் அது அஜீஸ் என்றே சொல்லப்படும்.

உதாரணம்:

“உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தை, குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராகும் வரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி).

நூல்கள்: புகாரி-15 , முஸ்லிம் 179.

நபி (ஸல்) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை நபித்தோழர்களில் “அபூஹுரைரா (ரலி), அனஸ் (ரலி)” ஆகிய இருவரும் அறிவிக்கிறார்கள்.

அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து “கதாதா மற்றும் அப்துல் அஜீஸ் பின் சுஹைப்” என்ற இரண்டு தாபியீன்கள் அறிவிக்கின்றனர்.

கதாதாவிடமிருந்து “ஷுஃபா மற்றும் சயீத்” என்ற இரண்டு தபஉத் தாபியீன்கள் அறிவிக்கின்றார்கள்.

அப்துல் அஜீஸ் பின் சுஹைபிடமிருந்து “இஸ்மாயில் பின் உலையா மற்றும் அப்துல் வாரிஸ்” என்ற இரண்டு தபஉத் தாபியீன்களும் அறிவிக்கின்றனர்.

இந்த ஹதீஸில் அனைத்து தலைமுறையிலும் இரண்டு நபர்கள் இடம்பெற்றுள்ளதால் இது ஹதீஸ் கலையில் அஜீஸ் என்று குறிப்பிடப்படும்.

மஷ்ஹூர்

மஷ்ஹூர் என்பது அனைத்து தலைமுறைகளிலும் இரண்டுக்கும் மேற்பட்ட அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் ஹதீஸாகும். எந்த ஒரு தலைமுறையிலும் இருவருக்குக் குறைவாக இடம்பெறக் கூடாது.

உதாரணம்:

“நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேடியாக பறித்துவிட மாட்டான். ஆயினும், அறிஞர்களை கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியை கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆகிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்படும் போது அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்கள். (இதன் முலம்) தாமும் வழிகெட்டு(ப் பிறரையும்) வழிகெடுப்பார்கள்”. என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: புகாரி-100 

இந்த ஹதீஸில் அனைத்து தலைமுறையிலும் இரண்டுக்கும் அதிகமான நபர்கள் (மூவர், நால்வர்) இடம் பெற்றுள்ளனர். எனவே இது மஷ்ஹூர் எனப்படும்.