07) சிறந்த தாய்
நூல்கள்: உம்மு சுலைம் (ரலி) வரலாறுLast Updated on February 8, 2024 by
07) சிறந்த தாய்
தன்னுடைய மகன் அனஸை நபி (ஸல்) அவர்களிடத்தில் பணியமர்த்துகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு மத்தியில் நபிகளாருக்கு பணி செய்ய வேண்டும் நபிகளாரிடத்தில் இருக்கவேண்டும் என்று ஆசை கொண்டு நபிகளாரிடத்தில் பணிக்கு சேர்கிறார்கள். உம்மு சுலைம் (ரலி) அவர்கள்
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது (என் தாயாரின் இரண்டாம் கணவர்) அபூதல்ஹா (ரலி) அவர்கள், எனது கையைப் பிடித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! அனஸ் புத்திசாலிப் பையன்; அவன் தங்களுக்குப் பணிவிடை செய்யட்டும்” என்று சொன்னார்கள்.
அதன்படி நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஊரிலிருக்கும்போதும் பயணத்தில் இருக்கும்போதும் அவர்களுக்குப் பணிவிடை செய்துவந்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் செய்த எதைப் பற்றியும் “இதை நீ ஏன் இப்படிச் செய்தாய்?” என்றோ, நான் செய்யாமல் விட்ட எதைப் பற்றியும் “இதை நீ ஏன் இப்படிச் செய்யவில்லை?” என்றோ அவர்கள் என்னிடம் கேட்டதில்லை.
நூல்: முஸ்லிம்-4624, 4625, 4626
அனஸ் (ரலி) அறிவித்தார்: நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் சேவகம் புரிந்தேன்.
நூல்: புகாரி-6038, முஸ்லிம்-4623
தன் மகனுக்காக பிரார்த்திகுமாறு நபி (ஸல்) அவர்களிடத்தில் கூறினார்கள்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தாயார் என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள். அப்போது தமது முக்காட்டுத் துணியில் ஒரு பகுதியை எனக்குக் கீழாடையாகவும் மற்றொரு பகுதியை எனக்கு மேல் துண்டாகவும் போர்த்திவிட்டிருந்தார்கள். என் தாயார், “அல்லாஹ்வின் தூதரே! இவர் என் (செல்ல) மகன் அனஸ். தங்களுக்குச் சேவகராகப் பணியாற்றுவதற்காக இவரை உங்களிடம் அழைத்துவந்துள்ளேன். இவருக்காகப் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! இன்றைய தினத்தில் என்னிடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. என் பிள்ளைகள் மற்றும் பிள்ளைகளுடைய பிள்ளைகளின் எண்ணிக்கை சுமார் நூறை எட்டியிருக்கிறது.
நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனைக்குப் பிறகு பிற்காலத்தில் அனஸ் (ரலி) அவர்களுக்கு ஏராளமான செல்வமும், நூறு குழ்ந்தைகள் பிறந்தது என்று மேற்கண்ட ஹதீஸின் மூலம் விளங்கலாம்.
ரகசியம் பாதுகாக்க வைக்கும் தாய்
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சேவகனாக இருந்தபோது) என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது நான் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு முகமன் (சலாம்) சொன்னார்கள். பிறகு என்னை ஓர் அலுவல் நிமித்தம் (ஓரிடத்திற்கு) அனுப்பிவைத்தார்கள். நான் என் தாயாரிடம் தாமதமாகவே வந்தேன். நான் (வீட்டுக்கு) வந்தபோது என் தாயார், “உன் தாமதத்திற்கு என்ன காரணம்?” என்று கேட்டார்கள்.
நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் அலுவலுக்காக என்னை அனுப்பி வைத்தார்கள்” என்று பதிலளித்தேன். அப்போது என் தாயார், “என்ன அலுவல்?” என்று கேட்டார்கள். நான், “அது இரகசியம்” என்று சொன்னேன். என் தாயார், “நீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரகசியத்தை யாரிடமும் சொல்லாதே” என்று கூறினார்கள்.
சிறுவராயிருந்த அனஸ் அவர்கள் ஒரு நாள் வீட்டிற்க்கு தாமதமாக வருகிறார்கள். ஏன் தாமதம் என்று கேட்கும் போது ஒரு அலுவல் வேலையாக நபிகளார் ஓரிடத்திற்க்கு அனுப்பி வைத்தர்கள் அதனால் தாமதம் ஆகிவிட்டது என்று கூறும் போது எந்த இடத்திற்கு அனுப்பி வைத்தார்கள் என்று தாயார் கேட்கிறார்கள். அதற்கு அனஸ் அவர்கள் அது இரகசியம் என்று கூறும் போது அல்லாஹ்வின் தூதரின் இரசியத்தை யாரிடமும் கூறாதே! பாதுகாத்து வைத்துக் கொள்! என்று அறிவுரை கூறிகிறார்கள் என்றால் தன் மகனை மார்க்க அடிப்படையில் எப்படி வளர்த்திருகிறார்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்கள்.
அதே போன்று அந்த இரகசியத்தை அனஸ் (ரலி) பாதுகாத்தார்கள் என்று ஹதீஸ்களில் பார்க்க முடியும்.
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
என்னிடம் நபி(ஸல்) அவர்கள் ஓர் இரகசியம் சொன்னார்கள். அவர்களின் இறப்புக்குப் பிறகும் கூட ஒருவரிடமும் அதை நான் தெரிவிக்கவில்லை. என்னிடம் (என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) அவர்கள் அது குறித்துக் கேட்டார்கள். அதை நான் அவருக்கும் தெரிவிக்கவில்லை.
இவ்வாறு அனஸ் (ரலி) அவர்களின் வளர்ப்பில் மிகுந்த கவனமும் அக்கறையும் செலுத்தி மார்க்க அடிப்படையில் தன் மகனை வளர்த்த சிறந்த தயாராகவும் திகழ்ந்தார்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்கள்..