09) மணவிருந்து
நூல்கள்: உம்மு சுலைம் (ரலி) வரலாறுLast Updated on April 23, 2024 by Hakkeem
09) மணவிருந்து
நபி (ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை மணமுடித்து மணாளராக இருந்தபோது உம்முசுலைம் (ரலி) அவர்கள் அனஸ் அவர்களிடத்தில் ‘ஹைஸ்’ என்ற உணவை தயாரித்து கொடுத்து அனுப்புகிறார்கள்.
அபூஉஸ்மான் அல்ஜஅத் இப்னு தீனார்(ரஹ்) அறிவித்தார்:
(பஸராவிலுள்ள) பனூ ரிஃபாஆ பள்ளி வாசலில் (நாங்கள் இருந்துகொண்டிருந்த போது) அனஸ்(ரலி) எங்களைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள்:
நபி(ஸல்) அவர்கள் (என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) இருக்கும் பகுதியைக் கடந்து சென்றால் அவர்களின் இல்லத்திற்குச் சென்று அவர்களுக்கு சலாம் (முகமன்) கூறுவது வழக்கம்.
நபி (ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களை மணமுடித்து மணாளராக இருந்தபோது உம்முசுலைம்(ரலி) என்னிடம், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஏதாவது ஒன்றை நாம் அன்பளிப்பாக வழங்கினால் நன்றாயிருக்குமே!” என்று கூறினார்கள். அதற்கு நான், ‘(அவ்வாறே) செய்யுங்கள்!” என்று அவர்களிடம் கூறினேன். எனவே, அவர்கள் பேரிச்சம் பழம், நெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றை எடுத்து ‘ஹைஸ்’ எனும் ஒருவகைப் பண்டத்தை ஒரு பாத்திரத்தில் தயாரித்தார்கள்.
அதை என்னிடம் கொடுத்து நபி(ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். அதை நான் எடுத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்களை நோக்கி நடந்(து சென்று கொடுத்)தேன். அப்போது அவர்கள் என்னிடம், ‘அதைக் கீழே வைக்குமாறு கூறிவிட்டு, சிலரின் பெயரைக் குறிப்பிட்டுவிட்டு, அவர்களைத் தம(து மணவிருந்து)க்காக அழைத்து வருமாறும், நான் சந்திக்கிறவர்களையும் தமக்காக அழைத்து வருமாறும் என்னைப் பணித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் எனக்கு உத்தரவிட்ட பணியைச் செய்து (முடித்து)விட்டு, நான் திரும்பி வந்தேன்.
அப்போது (நபியவர்களின்) அந்த இல்லம் மக்களால் நிரம்பியிருந்தது. அப்போது நபி(ஸல்) அவர்கள் தம்மிரு கைகளையும் அந்தப் பண்டத்தின் மீது வைத்து அல்லாஹ் நாடிய (பிரார்த்னைச் சொற்கள் முதலிய)வற்றை மொழியக் கண்டேன். பிறகு அதனை உண்பதற்காக அங்கிருந்த மக்களைப் பத்துப் பத்துப் பேராக அழைக்கலானார்கள். அவர்களிடம், ‘அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! ஒவ்வொருவரும் அவரவர்(கைக்கு) அருகிலிருக்கும் பகுதியிலிருந்து உண்ணுங்கள்!” என்று கூறினார்கள்.
அவர்கள் அனைவரும் அதனைச் சாப்பிட்டுவிட்டு கலைந்து சென்றனர். அவர்களில் வெளியே சென்றுவிட்டவர்கள் போக ஒரு சிலர் மட்டும் (அங்கேயே) பேசிக்கொண்டு இருந்துவிட்டார்கள். (அவர்கள் எழுந்து செல்லாமல் இருப்பது குறித்து) நான் வருந்தலானேன். பிறகு, நபி(ஸல்) அவர்கள் (வழக்கம் போல்) தம் துணைவியரின்) அறைகளை நோக்கி (அவர்களுக்கு சலாம் கூறிப் பிரார்த்திப்பதற்காக)ப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுக்குப் பின்னால் நானும் போனேன். ‘(எழுந்து செல்லாமல் பேசிக்கொண்டிருக்கும்) அவர்கள் போய்விட்டிருப்பார்கள்” என்று கூறினேன். எனவே, நபி(ஸல்) அவர்கள் திரும்பி வந்து (ஸைனப்(ரலி) அவர்களின்) அந்த இல்லத்திற்குள் சென்று திரையைத் தொங்கவிட்டார்கள். நான் அந்த அறையிலேயே இருந்து கொண்டிருந்தேன்.
அப்போது நபி(ஸல்) அவர்கள் (தமக்கு அருளப்பெற்ற) பின்வரும் (திருக்குர்ஆன் 33:53 வது) வசனத்தை ஓதினார்கள்: இறைநம்பிக்கையாளர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி நுழையாதீர்கள். அவ்வாறு (நபியின் இல்லத்தில் நடக்கும்) விருந்துக்காக உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலும், அப்போதும் கூட உணவு தயாராவதை எதிர்பார்த்து (அங்கே காத்து) இராதீர்கள். மாறாக, (உணவு தயார்; வாருங்கள் என) நீங்கள் அழைக்கப்படும்போது நுழையுங்கள். சாப்பிட்டு முடிந்ததும் கலைந்து சென்று விடுங்கள். பேசிக்கொண்டிருப்பதில் ஆர்வமாய் இருந்துவிடாதீர்கள். நிச்சயமாக உங்களின் இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கிறது. ஆயினும், இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுகிறார். ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை.
அனஸ் (ரலி) கூறினார்: நான் (சிறுவயதில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பத்தாண்டுகள் பணிவிடை செய்தேன்.
நூல்: புகாரி-5163