11) இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை கண்டறியும் முறை
முக்கிய குறிப்புகள்: ஹதீஸ் கலைLast Updated on December 20, 2023 by
11) இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை கண்டறியும் முறை
இப்னு ஜவ்ஸியின் கூற்று
சில நேரங்களில் அறிவிப்பாளர் தொடர் முழுவதும் நம்பகமானவர்களாக இருப்பார்கள். ஆனால் அந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்ட வகையைச் சார்ந்ததாகவோ அல்லது மாற்றம்செய்யப்பட்ட செய்தியாகவோ இருக்கும்.
நூல் : அல்மவ்லூஆத் பாகம் : 1 பக்கம் : 99
இப்னுல்கய்யும் அவர்களின் கூற்று
அறிவிப்பாளர் தொடர் சரியானதாக அமையவேண்டும் என்பது ஹதீஸ் சரியாகுவதற்கான நிபந்தனைகளில் ஒன்று. அறிவிப்பாளர் தொடர் சரியாக இருப்பதினால் (மட்டும்) அந்த ஹதீஸும் சரியானது என்று முடிவெடுக்கமுடியாது. ஏனென்றால் ஹதீஸ் பலவிஷயங்களால் தான் சரியாகும். தொடர் சரியாக இருப்பதும் கருத்தில் குறைவராமல் இருப்பதும் வலுமையானத் தகவலுக்கு முரண்படாமல் இருப்பதும் இவற்றுள் அடங்கும்.
நூல் : அல்ஃபரூசிய்யா பக்கம் : 246
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் சரியாக உள்ளது என்று நீங்கள் கூறுவது அந்த ஹதீஸ் சரியானது என்ற தீர்ப்பைக் கொடுக்காது. ஏனென்றால் தொடர் சரியாக இருப்பததென்பது சரியானச் செய்தியை அறிந்துகொள்வதற்கான ஒரு நிபந்தனை தான். முழுமையான அளவுகோல் அல்ல. எனவே முரண்பாடும் குறையும் ஹதீஸைவிட்டும் நீங்காத வரைஅறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தால் மட்டும் ஹதீஸ் சரியாகிவிடாது.
நூல் : ஹாஷியதுல் இப்னில்கய்யிம் பாகம் : 1 பக்கம் : 77
சன்ஆனீயின் கூற்று
ஹதீஸ்கலை அறிஞர்கள் ஹதீஸின் தகவலைப் பற்றி பேசாமல் அறிவிப்பாளர் தொருக்கு சஹீஹானது ஹசனானது பலவீனமானது என்று தீர்ப்பளிப்பார்கள். இது அவர்களின் வழமை. சரியான ஹதீஸ் என்று சொல்லாமல் சரியான அறிவிப்பாளர் தொடர்கொண்டது என்று சொல்வார்கள். ஏனென்றால் இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருப்பதினால் தொடர் சரியாகிவிடும். முரண்பாடு அல்லது நுட்பமான குறை (செய்தியில்) இருப்பதினால் ஹதீஸ் சரியாகாது.
நூல் : தவ்ளீஹுல் அஃப்கார் பாகம் : 1 பக்கம் : 234
இந்தப் பாடம் தொடர்பாக ஷரீக் என்பார் அறிவிக்கும் இந்த ஹதீஸில் பல தவறுகள் உள்ளன. இவற்றை அறிஞர்கள் ஏற்கமறுத்துள்ளார்கள். இமாம் முஸ்லிம் இந்த ஹதீஸில் உள்ள அவர்களுக்கு வஹீ வருவதற்கு முன்னால் என்ற வார்த்தையை சுருக்கி பதிவுசெய்ததன் மூலம் இதில் உள்ள தவற்றை சுட்டிக்காட்டுகிறார்.
அவர்களுக்கு வஹீ வருவதற்கு முன்னால் என்ற இந்த வார்த்தை தவறாக ஏற்பட்டுவிட்டதாகும். இதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனேன்றால் விண்ணுலக்ப பயனம் தொடர்பாக (கூறப்படும் காலஅளவில்) மிகவும் குறைவாக சொல்லப்படுவது என்னவென்றால் நபி (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்பட்டு 15 மாதங்களுக்குப் பிறகு தான் விண்ணுலகப் பயனம் செய்தார்கள் என்பதாகும்.
(ஆனால் இச்சம்பவம் விண்ணுலகப்பயனம் நடைபெறும் வரை வஹீ அருளப்படவில்லை என்று கூறுகிறது) இன்னும் தொழுகை விண்ணுலகப் பயனத்தின் இரவின் போது தான் கடமையானது என்று அறிஞர்கள் ஏகோபித்துக் கூறியுள்ளார்கள். அப்படியிருக்க நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ அறிவிக்கப்படுவதற்கு முன்னால் விண்ணுலகப்பயனம் எப்படி நடந்திருக்க முடியும்?
விண்ணுலகப் பயனம் நடைபெறுவதற்கு முன்பு வரையும் அப்பயனத்தின் போதும் நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ அருளப்படவில்லை. மாறாக அப்பயனத்திற்குப் பின்பு தான் வஹீ அருளப்பட்டது என்று இந்த ஹதீஸின் வார்த்தை உணர்த்துகிறது. இதனால் பெரும்பெரும் அறிஞர்கள் இதன் அறிவிப்பாளர் தொடரைப் பற்றிப் பேசாமல் இதன் கருத்து உறுபெற்ற விஷயத்திற்கு மாற்றமாக இருப்பதினால் இதை மறுக்கிறார்கள்.
இமாம் தஹபீ
1 . மரணவேலையில் தவித்துக்கொண்டிருந்த எனது உறவினருக்கருகில் நான் இருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார். நபி (ஸல்) அவர்கள் என்னிடமிருந்த கவலையைப் பார்த்தபோது (ஆயிஷாவே) உனது உறவினருக்காக நீர் கவலைப்படவேண்டாம். ஏனென்றால் இந்த சிரமும் அவது நன்மைகளில் ஒன்றாகிவிடுகிறது என்றார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : இப்னு மாஜா (1441)
தஹபீ கூறுகிறார் : இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் நம்பகமானவர்கள். என்றாலும் இது மறுக்கப்பட வேண்டிய செய்தி.
நூல் : தத்கிரதுல் ஹுஃப்பாள் பாகம் : 2 பக்கம் : 688
2 . இஸ்மாயீல் பின் இஸ்ஹாக் என்பவர் கூறுகிறார் :
அஹம்மது பின் ஹம்பல் அவர்கள் (என்னிடம்) இந்த ஹாரிஸ் உங்களிடம் அதிகமான நேரம் இருக்கிறார். இவரை உங்கள் வீட்டிருக்கு (ஒரு முறை) வரவழைத்து இவது பேச்சை கேட்பதற்காக என்னை ஒரு இடத்தில் அமரவைக்கலாமே என்றார்கள். நான் அவ்வாறே செய்தேன். ஹாரிஸும் அவரது மாணவர்களும் வந்து சாப்பிட்டுவிட்டு இஸாத் தொழுதார்கள். பின்பு இவர்கள் சுமார் இரவின் பாதிவரை ஹாரிஸின் முன்பு அமைதியாக அமர்ந்தார்கள்.
இவர்களில் ஒருவர் கேள்விக் கேட்டு ஆரம்பித்துவைத்தார். ஹாரிஸ் பேசத்தொடங்கினார். அவர்களுடைய தலையில் பறவை தங்கும் அளவிற்கு (கவனத்துடன் கேட்டார்கள்) ஹாரிஸ் பேசிக்கொண்டிருக்கும் போதே அவர்களில் சிலர் அழுதுவிட்டார்கள். சிலர் திடுக்கத்திற்குள்ளானார்கள். அப்போது நான் மேல் அறைக்குச் சென்று அஹ்மத் இமாமைப் பார்த்த போது அவர்கள் மயக்கமுறுகிற அளவிற்கு அழுதுகொண்டிருந்தார்கள். இவர்கள் சென்ற பிறகு அஹ்மத் அவர்கள் நான் இவர்களைப் போன்று யாரையும் பார்த்தில்லை .இவரது பேச்சைப் போன்று எவரது பேச்சையும் கேட்டதில்லை என்று கூறினார்கள்.
இமாம் தஹபீ கூறுகிறார் :
இது சரியான அறிவிப்பாளர் தொடரைக் கொண்ட சம்பவம். மறுக்கப்பட வேண்டியது. எனது உள்ளம் இதை ஏற்றுக்கொள்ளாது. அஹ்மத் போன்ற (பெரிய அறிஞரிடமிருந்து) இதுபோன்ற நிகழ்வு ஏற்படுவதை நான் அசாத்யமானதாகக் கருதுகிறேன்.
நூல் : மீஸானுல் இஃதிதால் பாகம் : 1 பக்கம் : 430
3 . அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் என்பவர் சொல்கிறார் : எனது நண்பர் ஒருவர் பிரயானியாக இருக்கும் போது மரணித்துவிட்டார். அவருடைய மண்ணறையில் நானும் இப்னு உமர் அவர்களும் அப்துல்லாஹ் பின் அம்ர் அவர்களும் இருந்தோம். (அப்போது) எங்களுடைய பெயர் அல்ஆஸ் என்றிருந்தது. அப்போது எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் உங்களது பெயர் அப்துல்லாஹ்வாக இருக்கும் நிலையில் இவரது கப்ரில் இறங்குங்கள் என்று கூறினார்கள். நாங்கள் எங்களது சகோதரரை அடக்கம் செய்துவிட்டு எங்கள் பெயர் மாற்றப்பட்ட நிலையில் மேலே ஏறிவந்தோம்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ்
நூல் : பைஹகீ பாகம் : 9 பக்கம் : 307
இமாம் தஹபீ கூறுகிறார் :
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் இது மறுக்கப்பட வேண்டிய கருத்தைத் தருகிறது. (ஏனென்றால்) இப்னு உமர் அவர்களின் பெயர் ஹிஜ்ரீ ஏழு வருடத்திற்கு பிறகு வரை மாற்றப்படாமல் இருந்தது என்ற கருத்தை இது கொடுக்கிறது. இக்கருத்து ஏற்கத்தகுந்ததல்ல.
நூல் : சியரு அஃலாமின் நுபலா பாகம் : 3 பக்கம் : 209
4. ஹாகிமில் 1868 வதாக இடம்பெற்ற செய்தியை தஹபீ அவர்கள் பின்வருமாறு விமர்சனம் செய்கிறார்.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் (குறையை விட்டும்) தூய்மையாக இருப்பதுடன் இது மறுக்கப்படவேண்டிய செய்தியாகும். இது இட்டுக்கட்டப்பட்டதாக இருக்குமோ என்று நான் அஞ்சுகிறேன்.
நூல் : தல்ஹீஸுல் முஸ்தத்ரக் பாகம் : 1 பக்கம் : 506, 507
ஹாகிமில் 3387 வதாக இடம்பெற்ற செய்தியை தஹபீ பின்பருமாறு விமர்சிக்கிறார்.
இதன் அறிவிப்பாளர் தொடர் தூய்மையானதாக உள்ளது. செய்தி மறுக்கப்படவேண்டியதாக உள்ளது.
நூல் : தல்ஹீஸுல் முஸ்தத்ரக் பாகம் : 2 பக்கம் : 366, 367
ஹாகிமில் 4640 என்ற எண்ணில் பதிவுசெய்யப்பட்ட செய்தியை தஹபீ பின்வருமாறு விமர்சிக்கிறார்.
இந்த ஹதீஸை அறிவிப்பவர்கள் நம்பகமானவர்களாக இருந்தாலும் இது மறுக்கப்படவேண்டியது. இட்டுக்கட்டப்பட்ட வகையை விட்டும் தூரமானதாக இது இல்லை.
நூல் : தல்ஹீஸுல் முஸ்தத்ரக் பாகம் : 3 பக்கம் : 127, 128
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் புகாரி முஸ்லிமில் பதிவு செய்யப்பட்ட அறிவிப்பாளர்களைத் தவிர வேறுயாரும் இல்லை. இத்துடன் இந்த செய்தியில் தவறானக் கருத்து உள்ளது. நபி (ஸல்) அவர்களுடன் அபூபக்கர் பிலாலை அனுப்பினார்கள் என்பதே அந்தத் தவறாகும். அபூபக்கர் அன்றைக்கு பத்து வயதைக் கூட அடையாமல் இருக்கும் போது இது எப்படி சாத்தியமாகும்?
நபி (ஸல்) அவர்கள் அபூபக்கரை விட இரண்டு வயது மூத்தவர்கள். தப்ரீ போன்றோரின் கூற்றுப்படி நபி (ஸல்) அவர்களுக்கு அன்றைய நேரத்தில் வயது ஒன்பதாக இருந்தது. மற்றவர்களின் கூற்றுப்படி 12 ஆக இருந்தது. மேலும் பிலால் அவர்கள் இச்சம்பவம் நடந்து 30 வருடங்களுக்கு பிறகு தான் அபூபக்கரின் பொறுப்பில் வருகிறார். (ஆனால் இச்செய்தியில் நபி சிறுவராக இருக்கும்போததே அபூபக்கரின் பொறுப்பில் இருந்ததாக உள்ளது.)
இதற்கு முன்பு அவர் பனூஹலஃப் என்ற கூட்டத்தாரிடம் இருந்தார். இஸ்லாத்திற்காக பிலால் அல்லாஹ்வின் விஷயத்தில் கொடுமைசெய்யப்பட்டபோது அவரின் மீது இரக்கப்பட்டும் அவரை அவர்களின் கையிலிருந்து பாதுகாப்பதற்காகவும் அபூபக்கர் பிலாலை அவர்களிடமிருந்து விலைக்கு வாங்கினார்.
நூல் : உயூனுல் அஸர் பாகம் : 1 பக்கம் : 105
இமாம் குர்துபீ அவர்களின் கூற்று
ஹதீஸ் அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்பட்டால் அதை செயல்படுத்துவது கூடாது.
நூல் : தஃப்சீருல் குர்துபீ பாகம் : 12 பக்கம் : 213
இமாம் ஜுர்ஜானி அவர்களின் கூற்று
ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவென்றால் அதிலே மட்டரகமான வார்த்தைகள் இருக்காது. அதன் அர்த்தம் குர்ஆன் வசனத்திற்கு முரண்படாமல் இருக்கும்.
நூல் : அத்தஃரீஃபாத் பாகம் : 1 பக்கம் : 113
நூல் : தத்ரீபுர்ராவீ பாகம் : 1 பக்கம் : 276
இமாம் இப்னுல் கய்யிம் அவர்களின் கூற்று
இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்துகொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று ஹதீஸ் குர்ஆனுடைய தெளிவானக் கருத்திற்கு முரண்படுவதாகும்.
நூல் : அல்மனாருல் முனீஃப் பக்கம் : 80
இமாம் இப்னு ஜவ்ஸீ அவர்களின் கூற்று
சிந்தனைக்கு மாற்றமாக அல்லது (ஆதாரப்பூர்வமாக) பதிவுசெய்யப்பட்ட செய்திக்கு மாற்றமாக அல்லது அடிப்படைக்கே மாற்றமாக ஒரு ஹதீஸை கண்டால் அது இட்டுக்கட்டப்பட்டச் செய்தி என்று புரிந்துகொள் என்று சொன்னவர் எவ்வளவு அழகாகச் சொன்னார் !
நூல் : தர்ரீபுர்ராவீ பாகம் : 1 பக்கம் : 277
எதைக் கண்டால் கற்கும் மாணவனின் தோல் சிலிர்த்து அவரது உள்ளம் பெரும்பாலும் அதை (ஏற்றுக்கொள்வதை) விட்டும் விரண்டோடுமோ அதுவே மறுக்கப்பட வேண்டிய செய்தி.
நூல் : தத்ரீபுர்ராவீ பாகம் : 1 பக்கம் : 275
இமாம் மாலிக் மற்றும் குர்துபீ அவர்களின் வழிமுறை
கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் கடைசி ஹஜ்ஜின் போது வந்து அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ்வுடைய ஹஜ் என்னும் கடமை என் தந்தைக்கு விதியாகிவிட்டது. அவர் முதிர்ந்த வயதுடையவராகவும் வாகனத்தில் அமரமுடியாதவராகவும் இருக்கிறார். நான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறைவேறுமா? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றனர்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி (1854)
இந்த ஹதீஸை இமாம் மாலிக் அவர்கள் நிராகரித்ததை குர்துபீ அவர்கள் அங்கீகரித்து பின்வருமாறு கூறுகிறார்கள்.
குர்துபீ கூறுகிறார் : மாலிக் அவர்கள் கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த பெண்மணி அறிவிக்கும் ஹதீஸ் குர்ஆனுடைய வெளிப்படையானக் கருத்திற்கு முரண்படுகிறது என்று கருதுகிறார். ஆகையால் அவர் குர்ஆனுடைய வெளிப்படையானக் கருத்திற்கே முன்னுரிமை கொடுத்துள்ளார். குர்ஆனுக்குள்ள அங்கீகாரத்தை கவனித்தால் குர்ஆனிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நூல் : பத்ஹுல்பாரீ பாகம் : 4 பக்கம் : 70
இமாம் புல்கீனீ அவர்களின் வழிமுறை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : சொர்க்கம் இருக்கிறதே (அதில் தகுதியானோர் நுழைவார்கள்). அல்லாஹ் தன் படைப்புகளில் யாருக்கும் அநீதி இழைப்பதில்லை. அவன் தான் நாடியவர்களை நரகத்திற்காகப் படைப்பான். அவர்கள் நரகத்தில் போடப்படும்போது இன்னும் இருக்கிறதா? என்று மும்முறை கேட்கும். இறுதியில் இறைவன் அதில் தனது பாதத்தை வைக்க அது நிரம்பிவிடும். அதன் ஒரு பகுதி மற்றொருபகுதியுடன் இணைக்கப்படும். போதும் போதும் போதும் என்று அது கூறும்.
அறிவிப்பவர் : அபஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (7449)
இந்த ஹதீஸில் உள்ள அறிவிப்பாளர் அனைவரும் பலரால் புகழ்ந்து சொல்லப்பட்டவர்கள். இவர்களை யாரும் எவ்விதத்திலும் குறைகாண முடியாது. மறுமை நாளில் சிலரைப் படைத்து அவர்களை நரகத்திற்குள் அல்லாஹ் கொண்டு செல்வான் என்றக் கருத்தை இந்த ஹதீஸிலிருந்து சிலர் விளங்குகிறார்கள். குற்றம்புரியாதவர்கள் அல்லாஹ் நரகத்திற்குள் செலுத்துவது உனது இறைவன் யாருக்கும் அநியாயம் செய்யமாட்டான் (18 : 49) என்ற குர்ஆன் வசனத்திற்கும் ஷைத்தான் மற்றும் அவனைப் பின்பற்றுபவர்களைக் கொண்டு அல்லாஹ் நரகத்தை நிரப்புவான் (38 : 85) என்று கூறும் குர்ஆன் வசனத்திற்கும் மாற்றமாக இந்த ஹதீஸ் இருப்பதினால் சில அறிஞர்கள் இதை மறுத்துள்ளார்கள். இக்கருத்தை இப்னு ஹஜர் அவர்கள் தனது நூலில் பதிவுசெய்துள்ளார்.
நாய் மற்றும் மற்றவைகள் கடந்து செல்வதினால் தொழுகை முறிந்துவிடும் என்ற கருத்தில் வரும் ஹதீஸை அறிஞர்கள் மறுக்கிறார்கள். ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான் (6 : 164) என்ற இறைவனுடைய கூற்றுக்கு இந்த ஹதீஸ் முரண்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.
நூல் : ஃபத்ஹுல் பாரீ லிஇப்னி ரஜப் பாகம் : 3 பக்கம் : 342