Tamil Bayan Points

6) சஹாபாக்களின் தவறுகள்

நூல்கள்: ஜகாத் ஓர் ஆய்வு

Last Updated on April 15, 2023 by

ஆனால் அதே சமயம் இத்தனை சிறப்புகள் உள்ளதால் நபித்தோழர்களின் கருத்துக்களை மார்க்கமாகக் கருதும் எந்தவொரு செயல்பாட்டையும் ஏற்றுக் கொள்ள முடியாது. குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டும் தான் மார்க்கத்தின் ஆதாரங்கள். நபித்தோழர்கள் சிறந்தவர்கள் தான் என்றாலும் அவர்கள் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது. அவர்களிடமும் தவறுகள் ஏற்படத் தான் செய்யும்.

இதை நாம் கற்பனையாகக் கூறவில்லை.

  • சில நபித் தோழர்களின் கருத்துக்களும் செயல்களும் குர்ஆன், ஹதீசுக்கு மாற்றமாக இருந்துள்ளன.
  • பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் அவர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளன.
  • குர்ஆன், ஹதீஸில் இல்லாத சில விஷயங்களை அவர்களாக உருவாக்கினார்கள்.

என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. எனவே தான் குர்ஆனையும், நபிவழியையும் தவிர வேறு எதையும் ஆதாரமாகக் கொள்ளக் கூடாது என்று கூறுகிறோம்.

குர்ஆன், ஹதீசுக்கு மாற்றமாக ஒன்றல்ல, இரண்டல்ல. பல்வேறு விஷயங்களில் ஸஹாபாக்கள் கருத்துக் கூறியுள்ளார்கள் என்பது தான் உண்மை நிலையாகும்.

 

தமத்துஃ ஹஜ்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமத்துஃ ஹஜ் செய்ய அனுமதித்துள்ளார்கள். ஆனால் உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோர் இதைத் தடுத்துள்ளார்கள்.

நான் உஸ்மான் (ரலி) உடனும், அலீ (ரலி) உடனும் ஹஜ் செய்துள்ளேன். உஸ்மான் (ரலி) அவர்கள் ஹஜ், உம்ரா இரண்டையும் சேர்த்து (கிரான்) செய்வதையும், உம்ரா முடித்து ஹஜ் (தமத்துஉ) செய்வதையும் தடுத்தார்கள். இதைக் கண்ட அலீ (ரலி) ஹஜ், உம்ரா இரண்டிற்கும் இஹ்ராம் அணிந்து, ‘லப்பைக்க பி உம்ரதின் வஹஜ்ஜதின்’ என்று கூறிவிட்டு, ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய வழிமுறையை யாருடைய சொல்ற்காகவும் நான் விட்டு விட மாட்டேன்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் : மர்வான் பின் ஹகம். நூல் : புகாரி 1563

ஹஜ் மாதத்தில் உம்ராவை முடித்து இஹ்ராமைக் களைந்து ஹஜ்ஜுக்காக தனியாக இஹ்ராம் கட்டுவது பற்றி அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) இடம் ஷாம் நாட்டைச் சேர்ந்த மனிதர் கேட்டார். அதற்கு அவர்கள், ‘அது அனுமதிக்கப்பட்டதே!’ என்று கூறினார்கள். அதற்கு ஷாம் நாட்டைச் சேர்ந்த அம்மனிதர், ‘உங்கள் தந்தை (உமர்) அதைத் தடை செய்திருக்கின்றாரே!’ என்று கூறினார். அதற்கு இப்னு உமர் (ரலி), ‘என் தந்தை ஒரு காரியத்தைத் தடுத்து அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்திருந்தால் அப்போது என் தந்தையின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா? அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா?’ என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையைத் தான் பின்பற்ற வேண்டும்’ என்றார். அப்போது இப்னு உமர் (ரலி), ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்துள்ளார்கள்’ என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர் : ஸாம். நூல் : திர்மிதீ (753)

தமத்துஃ ஹஜ் என்ற ஒரு ஹஜ் முறை இருப்பதை இன்றைக்குக் கூட, நபித் தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையுடையவர்கள் உட்பட அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகிய மிகப் பெரிய நபித் தோழர்களுக்கு இது தெரியாமல் இருந்துள்ளது. இது ஏன்?

 

குளிப்பு எப்போது கடமை?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் தமது மனைவியிடம் உடலுறவு கொண்ட பின்னரும் இந்திரியம் வெளியாகாமல் இருந்தால் அவர் மீது குளிப்பு கடமையாகுமா?’ என்று கேட்டேன். அதற்கு ‘மனைவியிடமிருந்து பட்ட இடத்தைக் கழுவ வேண்டும். பின்னர் உளூச் செய்து தொழுது கொள்ளலாம்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : உபை பின் கஅப் (ரலி).  நூல் : புகாரி 293

உடலுறவு கொண்ட பின்னர் இந்திரியம் வெளியாகாவிட்டால் குளிப்பு கடமை இல்லை என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் இட்ட கட்டளையாகும். பின்னர் இச்சட்டத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாற்றி விட்டார்கள்.

‘பெண்ணுறுப்பை ஆணுறுப்பு கடந்து விட்டால் குளிப்பு கடமையாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி). நூல்கள் : முஸ்ம் 526, திர்மிதீ 102

இவ்வாறு மாற்றிய விஷயம் நபித் தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுபவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் உஸ்மான் (ரலி) அவர்கள், இந்திரியம் வெளியாகா விட்டால் குளிப்பு கடமையில்லை என்று கூறியுள்ளார்கள்.

ஒருவர் உடலுறவு கொண்டு விட்டு இந்திரியம் வெளியாகவில்லையானால் அவருடைய சட்டம் என்ன? என்று நான் உஸ்மான் (ரலி)யிடம் கேட்டேன். அதற்கு, அவர் தமது ஆண்குறியைக் கழுவி விட்டு, தொழுகைக்கு உளூச் செய்வது போன்று செய்ய வேண்டும். இதை நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன் என உஸ்மான் (ரலி) கூறினார்கள். அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் (ரலி). நூல்: புகாரி 179, 292 மாற்றப்பட்ட இந்தச் சட்டம் உஸ்மான் (ரலி) அவர்களுக்குத் தெரியாமல் போனது ஏன்?

குளிப்புக்காக தயம்மம்

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அபூமூஸல் அஷ்அரி (ரலி) ஆகியோருடன் நானும் இருந்தேன். அப்போது அபூமூஸா (ரலி), அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)யிடம், ‘அபூ அப்திர்ரஹ்மானே! குளிப்பு கடமையான ஒருவர் தண்ணீர் கிடைக்காவிட்டால் அவர் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டார். ‘தண்ணீர் கிடைக்கும் வரை அவர் தொழ வேண்டியதில்லை’ என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறினார். அதற்கு அபூமூஸா (ரலி), ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்தால் போதுமானது’ என்று அம்மார் பின் யாஸிரிடத்தில் சொன்ன செய்தியை நீர் என்ன செய்வீர்?’ என்று கேட்டார். அதற்கு, ‘(இச்செய்தியை அம்மார் (ரலி) உமர் (ரலி)யிடம் கூறியபோது) அதை உமர் (ரலி) ஏற்றுக் கொள்ளவில்லை என்பது உமக்குத் தெரியாதா?’ என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) பதில் கூறினார்.

‘அம்மார் அறிவிப்பதை விட்டு விடுங்கள். தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்து கொள்ளுங்கள்’ என்ற இறை வசனத்தை என்ன செய்வீர்கள்?’ என்று அபூமூஸா (ரலி) கேட்டார். அதற்கு, ‘இந்த விஷயத்தில் நாம் அவர்களுக்கு அனுமதி வழங்கி விட்டால் யாருக்காவது கொஞ்சம் குளிராகத் தெரிந்தால் உளூச் செய்வதை விட்டு விட்டு தயம்மும் செய்து விடுவார்கள்’ என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) தாம் சொல்லக் கூடிய இந்த வார்த்தையின் விபரீதத்தைப் புரியாமலேயே சொல்லி விட்டார்கள். அறிவிப்பவர்: ஷகீக் பின் ஸலமா. நூல்: 346, 347

குளிப்பு கடமையானவர் தண்ணீர் இல்லையானால் தயம்மும் செய்து விட்டுத் தொழலாம் என்பது தெரிந்திருந்தும் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் தயம்மும் செய்து தொழக் கூடாது என்று கூறுகின்றார்கள்.

தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்யுங்கள் என்ற தெளிவான அனுமதி குர்ஆனில் இருந்தும், அது இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களுக்குச் சுட்டிக் காட்டப்பட்டும், சொந்த ஊகத்தின் அடிப்படையில் அனுமதி மறுக்கின்றார்கள். இது எதைக் காட்டுகின்றது?

கொள்ளை நோய்

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் ஷாம் நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். சர்க் எனும் இடத்தை அடைந்த போது, படைத் தளபதிகளான அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களும் அவர்களின் நண்பர்களும் உமர் (ரலி)யைச் சந்தித்து, ஷாம் நாட்டில் கொள்ளை நோய் பரவியுள்ளது என்று தெரிவித்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள், ஷாம் நாட்டிற்குப் போகலாமா? என்று ஆரம்ப கால முஹாஜிர்களை அழைத்துக் கருத்து கேட்ட போது முஹாஜிர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சிலர் போகலாம் என்றும் சிலர் வேண்டாம் என்றும் பதிலளித்தார்கள். பிறகு அன்சாரிகளை அழைத்துக் கருத்து கேட்டார்கள். அவர்களிடமும் இது விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பிறகு மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் ஹிஜ்ரத் செய்து வந்த குறைஷிப் பெரியவர்களை அழைத்து கருத்து கேட்டார்கள். அவர்கள் அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கருத்து வேறுபாடின்றி தெரிவித்தனர். ஆகவே உமர் (ரலி) அவர்கள் திரும்பிச் செல்வதென முடிவெடுத்தார்கள்.

அப்போது தமது தேவையொன்றுக்காக வெளியே சென்றிருந்த அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அங்கு வந்தார்கள். அவர்கள், இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும் போது அங்கு கொள்ளை நோய் ஏற்பட்டால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்’ என்று சொல்ல நான் கேட்டேன்’ என்று கூறினார்கள். (சுருக்கம்). அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி). நூல்: புகாரி 5279

கொள்ளை நோய் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்தி நபித் தோழர்களை ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என்பவர்கள் உட்பட அனைவருக்கும் தெரியும். ஆனால் உமர் (ரலி)க்கும், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோரில் பெரும்பாலான வர்களுக்கும் நீண்ட காலமாகத் தெரியாமல் இருந்துள்ளதை இந்த ஹதீஸ் தெரிவிக்கின்றது. அனுமதி கோருதல்

உமர் (ரலி) அவர்களிடம் அபூமூஸா (ரலி) வந்து உள்ளே வர அனுமதி கேட்டார். உமர் (ரலி) அலுவலில் ஈடுபட்டிருந்ததால் அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உடனேஅபூமூஸா (ரலி) திரும்பி விட்டார். அலுவலை முடித்த உமர் (ரலி), ‘அபூமூஸாவின் குரலை நான் கேட்டேனே! அவருக்கு அனுமதியளியுங்கள்’ என்றார்கள். ‘அவர் திரும்பிச் சென்று விட்டார்’ என்று கூறப்பட்டது. உடனே உமர் (ரலி), அபூமூஸா (ரலி)யை அழைத்து வரச் செய்தார்கள். (ஏன் திரும்பிச் சென்றீர் என்று கேட்ட போது), ‘இவ்வாறே நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம்’ என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், ‘இதற்குரிய சான்றை என்னிடம் நீர் கொண்டு வாரும்’ என்று கூறினார்கள்.

உடனே அபூமூஸா (ரலி) அன்சாரிகளின் சபைக்குச் சென்று அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள், ‘நம்மில் இளையவரான அபூஸயீத் அல்குத்ரீயைத் தவிர வேறு யாரும் இந்த விஷயத்தில் சாட்சி சொல்ல மாட்டார்கள்’ என்று கூறினார்கள். அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)யை உமர் (ரலி)யிடம் அபூமூஸா (ரலி) அழைத்துச் சென்றார். (அபூஸயீத் அல்குத்ரீ சாட்சி கூறியதும்) உமர் (ரலி), ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்தக் கட்டளை எனக்குத் தெரியாமல் போய் விட்டதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் கடைவீதிகளில் சென்று வியாபாரம் செய்து கொண்டிருந்தது என் கவனத்தைத் திசை திருப்பி விட்டது போலும்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: உபைத் பின் உஸாமா. நூல்: புகாரி 2062, 6245

வியாபாரத்தில் கவனம் செலுத்தியதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்தி தமக்குத் தெரியாமல் ஆகி விட்டது என்று உமர் (ரலி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டல்கள் அனைத்தையும் முக்கியமான நபித் தோழர்கள் கூட அறியாமல் இருந்தனர் என்பதும், அதற்கான காரணமும் இங்கே விளக்கப்படுகிறது.

நபிகள் நாயகத்தின் மரணம்

(நபி-ஸல் அவர்கள் இறந்த போது அவர்களின் உடலைப் பார்த்து விட்டு) அபூபக்ர் (ரலி) வெளியே வந்தார்கள். அப்போது உமர் (ரலி) மக்களிடம் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டதும், அவரை உட்காருமாறு கூறினார்கள். உமர் (ரலி) உட்கார மறுத்ததும், மீண்டும் உட்காருமாறு கூறினார்கள். உமர் (ரலி) மீண்டும் மறுக்கவே, அபூபக்ர் (ரலி) இறைவனைப் போற்றிப் புகழ்ந்து உரை நிகழ்த்தினார்கள். உடனே மக்கள் உமர் (ரலி)யிடமிருந்து அபூபக்ர் (ரலி)யிடம் திரும்பினர்.

அப்போது அபூபக்ர் (ரலி), ‘உங்களில் யார் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும். நிச்சயமாக முஹம்மது இறந்து விட்டார்கள். யார் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும். நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன். மரணிக்கவே மாட்டான். மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான். (அல்குர்ஆன் 3:144)’ என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக, அபூபக்ர் (ரலி) இவ்வசனத்தை ஓதிக் காட்டும் வரை அல்லாஹ் இவ்வசனத்தை அருளியிருந்ததையே மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் போலவும் அபூபக்ர் (ரலி) மூலமாகத் தான் இதை அவர்கள் அறிந்து கொண்டார்கள் என்பதைப் போலவும் அங்கிருந்த ஒவ்வொருவரும் இதை ஓதிக் கொண்டிருந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி). நூல்: புகாரி 1242, 3670

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்ததைக் கூட ஏற்றுக் கொள்ளாமல் உமர் (ரலி) உள்ளிட்ட பல்வேறு நபித்தோழர்கள் மறுத்துள்ளனர். குர்ஆனில் உள்ள ஒரு விஷயம், நபித் தோழர்களுக்குத் தெரியாமல் இருந்ததை இந்தச் சம்பவம் உணர்த்துகின்றது. அபூபக்ர் (ரலி) அவர்கள் சுட்டிக் காட்டியதால் நபித்தோழர்கள் உண்மையை விளங்கிக் கொண்டனர். இது போன்று சுட்டிக் காட்டப்படாத எத்தனையோ விஷயங்கள் நடந்துள்ளன.

முத்தலாக்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும், அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்திலும் உமர் (ரலி) அவர்களின் முதல் இரண்டு ஆண்டு காலத்திலும் முத்தலாக் என்பது ஒரு தலாக்காகவே கருதப்பட்டு வந்தது. உமர் (ரலி) அவர்கள், ‘நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு விஷயத்தில் மக்கள் அவசரப்படுகின்றனர். அவர்கள் மீது நாம் சட்டமாக்கி விட்டால் (என்ன செய்வார்கள்?)’ என்று கூறி சட்டமாக்கி விட்டார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி). நூல் : முஸ்ம் 2689

முத்தலாக் என்று கூறினால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு தலாக்காகவே எடுத்திருக்கின்றார்கள் என்று தெளிவாகக் கூறப்பட்ட பின்னரும் தெரிந்தே உமர் (ரலி) அவர்கள் அதற்கு மாற்றமாக சட்டம் இயற்றியுள்ளனர்.

இன்னும் சில…

* தொழுகையில் ருகூவின் போது கைகளைத் தொடைகளுக்கு இடையில் வைக்க வேண்டும் என்ற சட்டம் முன்னர் நடைமுறையில் இருந்தது. பின்னர் இரு கைகளால் முட்டுக் கால்களைப் பிடிக்க வேண்டும் என்று மாற்றப்பட்டது. அனைத்து ஸஹாபாக்களுக்கும் தெரிந்த, அன்றாடக் கடமைகளில் ஒன்றான இந்தச் சட்டம் இப்னுமஸ்ஊத் (ரலி) அவர்களுக்குத் தெரியவில்லை. தாமும் ருகூவில் கைகளை முட்டுக் கால்களுக்கு இடையில் வைத்ததோடு, அடுத்தவரையும் அவ்வாறு செய்யத் தூண்டுகின்றார்கள். (பார்க்க முஸ்லிம் 831)

* மைமூனா (ரலி) தம்மை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராமின் போது திருமணம் செய்தனர் என்ற செய்தியை மறுத்துள்ள போதும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராமின் போது தான் மணம் முடித்தார்கள் என்று மைமூனாவின் சகோதரி மகன் இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகின்றார்கள்.

(பார்க்க புகாரி 1837)

* நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹா தொழுததாக ஏராளமான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இருந்தும், ஆயிஷா (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹா தொழுததேயில்லை என்று மறுத்துள்ளார்கள்.

(பார்க்க புகாரி 1128, 1177)

* இப்னு உமர் (ரலி) அவர்களும் லுஹா தொழுகை தொழுததில்லை என்று கூறும் செய்தி புகாரி 1175ல் உள்ளது.

* குர்ஆனில் 114 சூராக்கள் உள்ளன என்பதில் உலகில் எந்த முஸ்லிமுக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் 113, 114 ஆகிய சூராக்கள் குர்ஆனில் இல்லை என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் மறுத்த செய்தி அஹ்மத் 20244, 20246 ஆகிய இடங்களில் பதிவாகியுள்ளது.

* நீங்கள் ஒருவரையொருவர் வெட்டிக் கொண்டு காஃபிர்களாகி விடாதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்திருந்தும், உஸ்மான் (ரலி) கொலை, ஒட்டகப் போர், சிஃப்பீன் போர் என நபித் தோழர்கள் ஒருவருக்கு எதிராக மற்றவர் ஆயுதம் தூக்கியுள்ளார்கள்.

இப்படி எண்ணற்ற சான்றுகள் ஹதீஸ் நூற்களில் நிறைந்து காணப்படுகின்றன. இந்தச் செய்திகள் எதைக் காட்டுகின்றன? நபித்தோழர்களும் மனிதர்கள் தான், அவர்களிடமும் தவறுகள் ஏற்படும் என்பதை இந்தச் செய்திகள் தெளிவாகத் தெரிவிக்கின்றன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட, தமது தோழர்களில் சிலர் மார்க்கத்தை மாற்றி விடுவார்கள் என்பதைக் கூறி விட்டுச் சென்றுள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். அப்போது, ‘நீங்கள் அல்லாஹ்விடம் வெறுங்காலுடையவர்களாக, உடையணியாதவர்களாக, விருத்த சேதனம் செய்யபடாதவர்களாக மறுமையில் எழுப்பப்படுவீர்கள்’ என்று கூறிவிட்டு, ‘முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்’ என்ற (21:104) இறைவசனத்தை ஓதினார்கள். பிறகு மறுமை நாளில் உடையணிவிக்கப்படும் முதல் மனிதர் இப்ராஹீம் (நபி) அவர்கள் தாம். அறிந்து கொள்ளுங்கள். என்னுடைய சமுதாயத்தாரில் சில பேர் கொண்டு வரப்பட்டு அவர்கள் இடப்பக்கம் (நரகத்திற்கு) கொண்டு செல்லப்படுவர்.

அப்போது நான், ‘என் இறைவா, என் தோழர்கள்’ என்று சொல்வேன். அதற்கு, ‘இவர்கள் உங்களுக்குப் பிறகு என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது’ என்று சொல்லப்படும். அப்போது நான் நல்லடியார் ஈஸா (அலை) அவர்கள் கூறியது போல், ‘நான் அவர்களிடையே இருந்தவரை நான் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னை அழைத்துக் கொண்ட போது நீயே அவர்களைக் கண்காணிப்பவன் ஆகி விட்டாய்’ என்று பதிலளிப்பேன். அதற்கு, ‘இவர்களை நீங்கள் பிரிந்து வந்ததிலிருந்து இவர்கள் தங்கள் குதிகால்களின் வழியே தம் மார்க்கத்திலிருந்து விலகிச் சென்று கொண்டேயிருந்தார்கள்’ என்று கூறப்படும்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 4740, 6524

குர்ஆன், ஹதீஸை மட்டுமே பின்பற்ற வேண்டும், நபித் தோழர்களைப் பின்பற்றக் கூடாது என்பதைப் புரிந்து கொள்ள இவையே போதுமான ஆதாரங்களாகும்.

திருக்குர்ஆனும், நபிவழியும் அல்லாத வேறு எதையும் பின்பற்றக் கூடாது என்பதை நாம் இன்றைக்குச் சொல்லவில்லை. 20 வருடங்களுக்கு மேலாக இதைத் தான் நாம் கூறி வருகிறோம். ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் கொடுக்கத் தேவையில்லை என்பதை நிலை நாட்டுவதற்காக இந்த நிலைபாட்டை நாம் எடுக்கவில்லை. ஆனால் குர்ஆன், ஹதீஸைத் தவிர வேறு எதையும் பின்பற்றக் கூடாது என்று கூறி வந்தவர்கள் கூட ஜகாத் விஷயத்தில் குர்ஆன், ஹதீஸில் தங்களுக்கு ஆதாரமில்லாததால் நபித் தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்ற புதிய ஏற்பாட்டைக் கையில் எடுத்துள்ளனர்.

இறுதியாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எச்சரிக்கை ஒன்றை மட்டும் கூறி முடித்துக் கொள்கிறோம்.

‘மக்களே! நான் உங்களிடம் இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கின்றேன். அதைப் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் ஒருபோதும் வழி தவறமாட்டீர்கள். 1. அல்லாஹ்வின் வேதம் 2. அவனது தூதரின் வழிமுறை’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜில் ஆற்றிய பேருரையில் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி). நூல்: ஹாகிம் 318