Tamil Bayan Points

விருத்தசேதனம் செய்ய வலியுறுத்திய பெண் எம்.பி.

பயான் குறிப்புகள்: வரலாற்று ஆவணங்கள்

Last Updated on April 2, 2019 by

இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்

விருத்தசேதனம் என்ற சுன்னத் அனைத்து ஆண்களும் அவசியம் செய்ய வேண்டும் என்று பெண் எம்.பி ஒருவர் நாடாளுமன்றத்தில் கூறியிருப்பது உலகையே திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது.

அதுமட்டுமின்றி முதற்கட்டமாக இந்த அவையில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவரும் விருத்தசேதனம் செய்ய வேண்டும் என்று அந்தப் பெண் உறுப்பினர் பேசியுள்ளது உலக அளவில் பிரபலமாகியுள்ளது. இப்ராஹிம் நபியை பின்பற்றச் சொல்லி முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் கட்டளையிடுகின்றான். இப்ராஹிம் நபியவர்களின் 5 வழிமுறைகளில் ஒன்றுதான் இந்த விருத்தசேதனம் என்னும் சுன்னத் ஆகும். இஸ்லாம் விருத்தசேதனம் செய்வதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வழிகாட்டியதையே தற்போது உள்ள அறிவியல் உலகம் உண்மைப்படுத்தி வருகின்றது. விருத்தசேதனம் தொடர்பாக கடந்த வாரம் பிபிசி செய்தித்தளம் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. அதில் விருத்தசேதனம் செய்து கொண்டால் பாலியல் நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என ஒரு தான்சானியா நாட்டின் பெண் எம்.பி ஒருவர் பேசியதை சுட்டிக் காட்டியிருந்தது.

உலகிலேயே எய்ட்ஸ் பரவல் அதிகமுள்ள நாடுகளில் ஒன்றாக தான்சானியா திகழ்கின்றது. இந்த நாட்டைச் சேர்ந்த ஜேக்லைன் நோங்யாணி என்ற பெண் நாடாளுமன்ற உறுப்பினர்தான் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார். தான்சானியாவில் வாழும் ஆண்கள் அனைவரும் விருத்தசேதனம் என்னும் சுன்னத் செய்து கொள்ள வேண்டும் என்றும், முதலில் இந்த அவையில் வீற்றிருக்கும் உறுப்பினர்கள் கட்டாயம் விருத்தசேதனம் செய்ய வேண்டும் என்றும் ஜேக்லைன் தெரிவித்துள்ள கருத்து உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தான்சானியா நாட்டில் பருவ வயதை அடைந்த 5% ஆண்களுக்கு பாலியல் நோய் தொற்று இருப்பதாக அந்த நாட்டில் எடுக்கப்பட்ட பாலியல் தொடர்பான ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டில் உலக அளவில் எய்ட்ஸ் அதிகம் புழக்கத்தில் உள்ள நாடுகளில் தான்சானியா 13 வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதைய ஆய்வின் படி தான்சானியா 6 வது இடத்திற்கு முன்னேறி வந்துள்ளது. ஆண்கள் விருத்தசேதனம் செய்து கொள்வதன் மூலம் 60% எய்ட்ஸ் நோய் பாதிப்பில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று அறிவியல் உலகம் தெரிவிக்கின்றது.

ஆண்கள் விருத்தசேதனம் செய்து கொள்வது என்பது ஆண்குறியின் முன்தோலை நீக்குவது ஆகும். அவ்வாறு நீக்குவதனால் பாலியல் நோய்கள் மட்டுமல்லாது பலவிதமான நோய்களிலிருந்தும் தொற்றுகளில் இருந்தும் தற்காத்துக் கொள்ள முடியும். அதுபோல சிறுநீர் என்பது உடலுக்குள் இருக்கும் போது அதன்மூலம் எந்த பாதிப்பும் இல்லை, ஆனால் அதேநேரம் சிறுநீர் வெளியாகி விட்டால் துர்நாற்றமும், கிருமிகள் உற்பத்தியும் அதில் உண்டாகின்றன. அதன் காரணமாகத்தான் சிறுநீர் கழித்ததும் அந்த இடத்தை தூய்மைப்படுத்த வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது. விருத்தசேதனம் செய்வதன் மூலம் சிறுநீர் கிருமிகள் தேங்குவதற்கு இடமிருக்காது என்பதாலும் விருத்தசேதனத்தை அறிவியல் விஞ்ஞான உலகம் வலியுறுத்தத் துவங்கி விட்டது. விருத்தசேதனம் செய்வதை இஸ்லாம் வலியுறுத்துகின்றது என்பதால் அனைத்து இஸ்லாமிய நாடுகளில் வாழும் மக்கள் விருத்தசேதனம் செய்து கொள்கின்றனர். ஆனால் இஸ்லாம் அல்லாத இஸ்லாத்தினை பலங்கொண்டு எதிர்க்கக் கூடிய பல நாடுகளில் விருத்தசேதனம் நடைமுறையில் உள்ளது. இஸ்லாத்திற்கு எதிரான செயல்பாடுகள் கொண்ட ஐரோப்பிய நாடுகளில் விருத்தசேதனம் செய்வது நடைமுறையில் உள்ளது. அதுமட்டுமின்றி தமிழக அரசின் முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது, அரசு மருத்துவமனையில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது இங்கே குறிப்பிடத்தக்க விடயம்.

ஆக இஸ்லாம் வலியுறுத்தும் விருத்தசேதனம் என்பது பாலியல் நோய்களை விட்டு விலக்குவதோடு தூய்மைக்கும் அதுவே அளவுகோலாக இருக்கும் என்பதும் தற்கால நாட்டு நடப்புகள் இஸ்லாத்தை உண்மைப்படுத்துகின்றது என்பதும் நிதர்சனமான உண்மை. «